ஜெமினி vs சிவாஜி : கணேசன்கள் சண்டைக்கோழிகளா?

சிவாஜி கணேசன் வெற்றியும் புகழும் அடைந்த காலத்தில் நடிப்பில் அவருக்கு இணையாகவும் அவரைக் காட்டிலும் மகத்தான புகழும் வெற்றியும் பெற்று பிரபலமாக திகழ்ந்தவர் ஜெமினி கணேசன் மட்டுமே.

சிவாஜி கணேசன் மட்டுமே தனிக்காட்டு ராஜாவாக நடிப்புக்காக புகழ் பெற்ற காலத்தில் நடிக மன்னன் என்று ஜெமினியும் கீர்த்தி பெற்றது அபாரமானது. கணவனே கண் கண்ட தெய்வம், மிஸ்ஸியம்மா போன்ற படங்களின் இந்தி ரீமேக்கிலும் ஜெமினியைப் போல் நடிக்க மும்பையில் ஆள் இல்லாததால்தான் ஜெமினியே நடித்து அகில இந்தியப் புகழ் பெற்றார்.

நிஜத்தில் கால்ஷீட் இல்லாத காரணங்களினாலோ தயாரிப்பாளரின் பணத்தட்டுப்பாடு காரணமாகவோ சிவாஜி கணேசன் நடிக்க இயலாத வேடங்களில் ஜெமினி கணேசனைத் தான் நடிக்க வைத்தார்கள். அப்படி ஜெமினி நடித்தப் படங்கள் அத்தனையும் மிகச் சிறந்த ‘க’ வரிசை வெற்றிப் படங்களாக அமைந்தன. கணவனே கண் கண்ட தெய்வம், கற்பகம், காவியத் தலைவி என்று வெவ்வேறு ஆண்டுகளில் ஒரு வெள்ளிவிழா கால கட்டம் முழுவதும் ஜெமினி கணேசன் சிவாஜி கணேசனின் நடிப்புப் போட்டியாளராக இருந்தார்.

நடிப்பில் சிவாஜிக்கு நேர் எதிர் ஜெமினி. எப்போதும் ஷாட்டுக்கு ஷாட் அரட்டை, லூட்டி செட்டை விட்டு வெளியேறுதல் எல்லாம் உண்டு.

‘சந்தர்ப்ப வசத்தாலே நான் நடிகன் ஆனேன். நீங்க எதிர்பார்க்கிற மாதிரி நடிகன் நான் இல்லை’ என்று சிவாஜியை மனத்தில் வைத்து ஸ்கூல் மாஸ்டர் ஷுட்டிங்கில் பந்துலுவிடம் கூறினார் ஜெமினி.

மிக மென்மையான நடிப்புக்கு ஜெமினியை விட்டால் ஆளில்லை. ஆனால் ஜெமினி கணேசனுக்கு நடிப்பு ஹாபியாகவே இருந்தது. அதனால் அவர் தன் படங்களில் ஏ.வி.எம். ராஜன் போன்ற அடுத்த வரிசை கதாநாயகர்களுக்குத் தன்னை விடவும் வலுவுள்ள, நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களில் வாய்ப்பு கிடைத்தபோதுகூட அதை வரவேற்றார்.

அவ்வளவு ஏன், பட டைட்டில், போஸ்டர், சம்பளம், அதிக காட்சிகள், டூயட் பாடல்கள் என்று எல்லாவற்றிலும் விட்டுக் கொடுத்து நடித்தவர் ஜெமினி கணேசன் மட்டுமே! இது தமிழ் சினிமாவில் இன்றுவரை எந்த நடிகரிடமும் காணப்படாத அரிய குணம்.

சிவாஜி கணேசனும் ஜெமினி கணேசனும் சேர்ந்து பதிமூன்று படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்கள். அவை பெண்ணின் பெருமை, பதிபக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், பாவமன்னிப்பு, பாசமலர், கப்பலோட்டிய தமிழன், பார்த்தால் பசி தீரும், பந்தபாசம், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், உனக்காக நான், நாம் பிறந்த மண்.

இவற்றில் பெரும்பாலானவை தமிழ் சினிமா சரித்திரத்தில் தலையாய இடம் பிடித்தவை. சமூகம், சரித்திரம், புராணம் என்று ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. அந்தப் படங்களில் சிவாஜியை விட முக்கியத்துவம் குறைந்த கதாபாத்திரமாக இருந்தால்கூட அவருக்குக் கொஞ்சம் கூட சளைக்காமல் நடித்திருந்தார் ஜெமினி கணேசன். ஆனால் அதை சிவாஜி ரசிகர்கள் ஏற்கவில்லை.

ஆதலால் ஜெமினியின் ரசிகர்கள் அவர், சிவாஜி உடன் படங்களில் சேர்ந்து நடிப்பதையே விரும்பவில்லை. அதனால் 1962-க்குப் பிறகு நீண்ட இடைவெளி ஏற்பட்டது.

உனக்காக நான் படத்தில் சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்து படத்தை கெடுத்து விட்டதாக ஜெமினி ரசிகர்கள் கருதினார்கள். மேலும் ஆரம்பத்திலிருந்தே வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்த ஜெமினி, சிவாஜியுடன் இணைந்து நடித்ததை ஜெமினி ரசிகர்கள் அறவே வெறுத்து வந்தார்கள்.

ஆனால் ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனோடு நெருஙகிய நட்பு கொண்டு இருந்தார். சிவாஜி, ஜெமினி கணேசன் – சாவித்ரி ஒன்றாக குடும்பம் நடத்தியபோது அவர்கள் வீட்டுக்குச் சாப்பிட செல்வார். சாவித்ரியிடம் தனக்கு வேண்டியதை செய்து தரச் சொல்லி சாப்பிடுவார். சாவித்ரியும் சிவாஜி கணேசன் கேட்டவற்றை செய்து கொடுப்பார். அவர் சாப்பிடும் போது அருகில் இருந்து பரிமாறுவார். அந்த அளவு ‘பாசமலர்’களாக நிஜத்திலும் விளங்கினார்கள்.

பெண்ணின் பெருமை படம்தான் இரண்டு கணேசன்களும் முதன் முதலாக இணைந்து நடித்த படம். அந்தப் படத்தில்தான் சிவாஜியைவிட நல்ல கதாபாத்திரம் ஜெமினி கணேசனுக்குக் கிடைத்தது.

புத்திசுவாதீனமில்லாத மூத்த சகோதரன் வேடமும், அவனைத் துன்புறுத்தும் இளைய சகோதரன் வேடமும் இருந்தன. ‘உங்களுக்கு எந்த வேடம் வேண்டுமோ அதை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்’ என்று ஜெமினியின் விருப்பத்திற்கே விட்டுவிட்டார் சிவாஜி.

ஜெமினி புத்தி சுவாதீனமில்லாத அண்ணனாகவும் அவரைத் திருத்துகிற அண்ணியாக சாவித்ரியும் நடித்தார்கள். படத்தில் ஜெமினி கணேசனின் நடிப்பே அற்புதமாக இருந்தது. ஜெமினி பேசப்பட்ட அளவு சிவாஜி பேசப்படவில்லை.

ஜெமினியின் தேர்வும் நடிப்பும் சிறப்பாக இருந்ததை உணர்ந்தார் சிவாஜி. மீண்டும் ஜெமினியுடன் நடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும் அவர். ‘பதிபக்தி முதல் பந்தபாசம் வரையிலான படங்களில் சிவாஜியின் வேடமும் நடிப்புமே பிரதானமாக அமைந்தது.

முதலும் கடைசியுமாக சிவாஜியும் ஜெமினியும் இணைந்து பந்தபாசம் படத்தில் அண்ணன் தம்பியாக நடித்தார்கள். பந்தபாசத்துக்குப் பிறகு சிவாஜி – ஜெமினி வெற்றிக் கூட்டணி பிரிந்து விட்டது. ஏ.பி. நாகராஜனின் சில புராணப் படங்களில் ஜெமினி சிவாஜியுடன் இருந்தார் அவ்வளவே.

நன்றி : காதலன் : ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு (பா. தீனதயாளன்)

இன்று (மார்ச் 22) காதல் மன்னனுக்கு நினைவு நாள்

அன்புமணி ராமதாஸ் கவனத்துக்கு!

ஏதாவது ஒரு பண்டிகைக்காலத்தில் அந்தக் கொடுமை அரங்கேறும். இளைய தளபதியின் படமும் அல்டிமேட் ஸ்டாரின் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும். தூத்துக்குடி சூடேறும். காரணம் அங்கு அஜித் பக்தர்களும் அதிகம், விஜய் வெறியர்கள் எக்கச்சக்கம்.

முதலில் ஊரின் சுவர்கள் தளபதியையும் தலயையும் சுமக்க ஆரம்பிக்கும். எல்லாமே மெகா சைஸ் போஸ்டர்கள். ஒருவரை ஒருவர் முறியடிக்கும்படி சுவர்களை ஆக்கிரமிப்பார்கள். அப்புறம் ப்ளக்ஸ் சமாச்சாரங்கள். எல்லாமே லிம்கா, கின்னஸ் ரெகார்டுகளுக்கு அனுப்பத் தகுதியான அளவில், எப்போது தலையில் விழுமோ என்று சாலையில் செல்வோரை மிரட்டிக் கொண்டிருக்கும்.

தூத்துக்குடியிலேயே ஏகப்பட்ட லோக்கல் சேனல்கள் உண்டு. ஒவ்வொரு சேனலிலும் படத்துக்கான விளம்பரங்கள், கிராபிக்ஸ் உத்திகளுடன், ரசிகக் கண்மணிகளின் புகைப்படங்களுடன் ஜிகினா காட்டும். கில்லி ஏ. சரவணன், அமர்க்களம் அப்துல், ஏகன் கிறிஸ்டோபர், போக்கிரி ஜெ. ஜெஸ்டின் – எல்லோரும் தலைவர்களோடு தங்களை கிராபிக்ஸில் இணைத்துக்கொண்டு ஃபிலிம் காட்டுவார்கள். தளபதி போஸ்டரை தல பக்தர்கள் அசிங்கப்படுத்துவதும், தலயின் விளம்பரங்களை தளபதி வெறியர்கள் அசுத்தம் செய்வதும் போட்டி போட்டுக்கொண்டு நடக்கும்.

படத்தின் ரிலீஸ் அன்று, படப்பெட்டி வந்து இறங்குவதே தேர்த் திருவிழா போன்று நடக்கும். அந்த தியேட்டர்களுக்கு ‘தூத்துக்குடி வரலாறு’ காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். தளபதி படம் ஓடும் தியேட்டருக்குள் தல ரசிகர்கள் புகுந்து தாக்கும் சம்பவங்கள், தல படம் ஓடும்போது தளபதியின் ரசிகர்கள் திரையைக் கிழிக்கும் உன்னதங்கள், அருவா வெட்டு, கத்திக்குத்து, அடிதடி அனைத்தும் உண்டு. காட்சி முடிந்து வெளியே வரும் ரசிகர்கள், படம் ஓரளவு தேறுவதுபோல இருந்தால் அவ்வளவுதான். சாலையில் வெறி பிடித்ததுபோல பைக்கில் கத்திக்கொண்டே செல்வார்கள். எதிரித்தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ‘அமங்கல அர்ச்சனைகள்’ சர்வ நிச்சயம்.

எம்.ஜி.ஆர் Vs சிவாஜி, ரஜினி Vs கமல் ரசிகர்களின் மோதலைவிட, விஜய் Vs அஜித் விஷயத்தில் தூத்துக்குடி ரசிகர்களின் ‘பாசப்பிணைப்பு’ பலபடிகள் மேலாகத்தான் இருந்து வருகிறது.

வாரமலர் பாணியில் சொல்வதென்றால் வாய்க்கொழுப்பு நடிகர் என்றே அவருக்குப் பெயர். ஒரு காலத்தில் அவ்வளவு ‘கவசங்கள்’ பாடியிருக்கிறார். திடீரென மீடியாவுக்காக தன் குணத்தை மாற்றிக்கொண்டு நல்லபிள்ளை ஆகிவிட்டார் தல. ஆனால் எப்போதுமே தன்னை மௌனியாகக் காட்டிக் கொண்டிருந்த தளபதியின் சமீபத்திய ‘பொங்கல்’ அவரது இமேஜையே புரட்டிப் போட்டிருக்கிறது. ஏய்.. எழுதிட்டிருக்கேன்ல! சைலன்ஸ்!

‘வருங்கால அப்துல்கலாம்’ மினிதளபதி சஞ்சய் வாழ்க! எதிர்கால இந்திய குடியரசுத் தலைவி பேபி அனௌஷ்கா வாழ்க!

தேர்தல் 2009 – சிறப்பு பாடல்!

(தேர்தல் பிரசாரத்தில் எந்தக் கட்சியினரும் இந்தப் பாடலை இலவசமாக உபயோகித்துக் கொள்ளலாம்.)

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே என் மக்களே!
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!
தேர்தல் என்னும்
பணத்தோடு பெரும் புகழ் பதவியும் அடங்கிய
ஓட்டு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!

அன்னையும் அம்மாவும் தந்ததா
இல்லை ஜாதியின் வல்லமை சூழ்ந்ததா
கூட்டணி நான் அறியாததா
புது டெல்லியில் எம்நிலை எம்.பி.யாய் உயர்ந்திட
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!

அத்தனை ஓட்டுகள் உம் இடத்தில்
யாம் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்
வெறும் சின்னம்தான் உள்ளது எம் இடத்தில்
அதை அழுத்திடும் விரலோ உம்மிடத்தில்
ஒரு முறையா இரு முறையா
பலமுறை தேர்தலில் ஜெயிக்க வைத்தாய்
பல பதவி பல லகரம்
ருசி கண்ட நாக்கினை அரிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்
அரசியல் வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள்
என்று அரிக்கின்ற மனம் கரம் கூப்புதே!
வாக்குறுதி தருகிறேன்
வாழ்வளிக்க வருகிறேன்
உன் ஒருவிரல் பெரும் வரமளித்து ஜெயம் பெற

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே என் மக்களே!
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!
தேர்தல் என்னும்
பணத்தோடு பெரும் புகழ் பதவியும் அடங்கிய
ஓட்டு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!

– கவிஞர் ஓட்டாண்டி