இன்னொரு ஹாலிவுட் விருது!

ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குளோப், பாப்தா. அடுத்து ஆஸ்கர் கிடைப்பதற்கான வாய்ப்புகள்  அதிகம் இருக்கின்றன. சந்தோஷம். ஜாஹிர் ஹுசைனுக்கு கிராமி விருது. மகிழ்ச்சி.  அயல்தேச உயரிய விருதுகள் எல்லாம் இந்த ஆண்டில் இந்தியர்களுக்குக் கிடைக்க  ஆரம்பித்திருப்பது குறித்து திருப்தி.

ஒரு வருத்தம். சென்ற ஆண்டின் இறுதியிலேயே தமிழர் ஒருவர், இசைத்துறையில்  அயல்தேச விருதை அள்ளி வந்துள்ளார். விஷயம் மீடியாவில் பெரிதாகப் பேசப்படவில்லை. தி ஹிந்து உள்பட ஓரிரு ஆங்கில நாளிதழ்களில் செய்தி வந்தது. தமிழ் மீடியாவில்?  ம்ஹும்.

போகட்டும். அந்த விஷயத்தை இந்த சமயத்தில் பகிர்ந்துகொள்வதில் எனக்குச் சந்தோஷம்.

கணேஷ் குமார். இசையமைப்பாளர். கவிதாலயாவின் துள்ளித் திரிந்த காலம் படம் மூலம்  கோலிவுட்டுக்கு அறிமுகமானவர். கே. பாலச்சந்தரின் அநேக தொலைக்காட்சி சீரியல்களில் இசைப் பங்களிப்பு அளித்திருக்கிறார். மற்றபடி, கோலிவுட் குத்தாட்ட பாடல்களில் விருப்பம் இல்லாதவர். அவரது இசைப்பணிகள் பெரும்பாலும் இங்கே திரைப்படம்  தவிர்த்ததாகவும், அயல்தேச இசைக்கலைஞர்கள் சார்ந்ததாகவுமே தொடர்ந்துகொண்டிருக்கிறது.

பாலாஜி கே. குமார். தமிழர்தான். ஹாலிவுட்டில் அவர் எடுத்த முதல் படம் 9 Lives of  Mara. கணேஷின் சில இசைக்குறிப்புகளைக் கேட்ட பாலாஜி, லாஸ் ஏஞ்சல்ஸில்  இருந்து தொடர்பு கொண்டிருக்கிறார். படத்தின் theme சொல்லியிருக்கிறார். மாரா படத்தின் தீம் மியூஸிக்கை அமைக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். மூன்று வாரங்களில் கணேஷும் இசையமைத்து அனுப்பினார். உலக அளவில் மொத்தம் 18 இசையமைப்பாளர்கள் தங்களது தீம் மியூஸிக்கை அனுப்பியிருந்தார்கள். கணேஷுக்குத்தான் வெற்றி.

நன்றி : Tabloid Witch

‘கணேஷ், எப்ப லாஸ் ஏஞ்சல்ஸ் வர்றீங்க?’ – படக்குழுவினரின் கேள்வி இது.

‘நான் சென்னையிலிருந்தே செஞ்சு கொடுக்கிறேன்.’ – கணேஷின் பதில் இது.

‘ஆர் யூ ஜோக்கிங்?’ – என்று கேட்ட அவர்கள், ஓப்பன் டிக்கெட் ஒன்றையும் அனுப்பி வைத்தார்கள்.

‘இங்கிருந்தே செய்கிறேன். எந்தக் குறையும் வராது’ என்று கணேஷ் அவர்களைச் சம்மதிக்க வைத்தார். படத்தின் Sound Track மேற்கு மாம்பலத்தில் லேக் வியூ  ஸ்டூடியோஸில் தயாரானது. ஒரு நாளைக்கு இரண்டு நிமிடத்துக்கான இசையை அமைத்த கணேஷ், மூன்று மாதங்களில் வேலையை முடித்தார்.

‘ஓகே கணேஷ். மிக்ஸிங்குக்கு இங்க வந்துருங்க’ – மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து  அழைப்பு. கணேஷ், மிக்ஸிங் செய்த மாதிரியை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்பினார். அவர்களுக்கு அதில் பரம திருப்தி. பதில் வந்தது ‘Go ahead!’

ஃபைனல் மிக்ஸிங் டிவிடியை கணேஷ், லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்பினார். எல்லா வேலைகளும் முடிவடைந்து படம் ரிலீஸுக்குத் தயார் என்ற நிலையில் 2008க்கான  TABLOID WITCH AWARDS அறிவிப்பு வந்தது. அதாவது சிறந்த திகில் படங்களுக் கான வருடாந்திர ஹாலிவுட் விருது இது. திகிலிலேயே பல தினுசுகள் உண்டு. அதில் 9  Lives of Maraவுக்கு 5 விருதுகள். சிறந்த சவுண்ட் டிராக் விருது கணேஷ் குமாருக்கு.

படத்துக்கான வேலைகளை எல்லாம் இங்கேயே தனது ஸ்டூடியோவிலேயே செம்மையாகச் செய்துமுடித்த கணேஷ், விருது வாங்குவதற்காகத்தான் யுஎஸ் சென்றுவந்தார்.

விருதுப் பட்டியலைத் தெரிந்துகொள்ள

இது குறித்த தி ஹிந்து செய்தி

கணேஷ் குமாரை வாழ்த்த : <ganeshaestheticmusic@yahoo.com>

கணேஷ் எனது மரியாதைக்குரிய நண்பர். அவரோடு இணைந்து சில பணிகள்  செய்துள்ளேன். அந்த சுவாரசியமான நிமிடங்களைப் பிறிதொரு சமயம் பகிர்ந்துகொள்கிறேன்.

அடால்ஃப், ராஜபக்‌ஷே!


1933, ஜனவரி 30, அதாவது இரண்டாவது உலக யுத்தம் தொடங்குவதற்கு ஆறு ஆண்டுகள் முன்பு, ஹிட்லர் ஜெர்மனியின் ஆட்சியைப் பிடித்தார். 1935-ல் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாம் ஹிட்லரால் நியூரெம்பெர்க் சட்டங்கள் (Nuremberg Laws) என்ற பெயரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன. ஜெர்மனி வாழ் யூதர்கள் அனைவரும் தீண்டத்தகாதவர்களே. இரண்டாம் தரக் குடிமக்களே. எத்தனை தலைமுறைகள் அங்கு வாழ்ந்துவருபவர்களாக இருந்தாலும், இனி அவர்களுக்கு எந்தவித உரிமையும் துளி கூடக் கிடையாது. இவைதான் அந்தச் சட்டங்களின் சுருக்கம்.

இந்தச் சட்டவரைவுகளில் ஹிட்லரே கையெழுத்திட்டார். காவல் துறையினருக்கு முழு அதிகாரத்தை வழங்கினார். ‘யூதர்களைக் கைது செய்யுங்கள். சிறையில் அடையுங்கள். விசாரணை நடத்துங்கள். அதில் விருப்பமில்லையா, கொன்று விடுங்கள். யோசிக்கவெல்லாம் வேண்டாம். யூதர்களைக் கொல்வதே நம் கடமை’ – ஹிட்லரின் குட்டி மீசைக்குக் கிழீருந்த குரூர உதடுகள் இது போன்ற வார்த்தைகளைத்தான் வெளிப்படுத்தின.

ஹிட்லிஸ்ட் தயார் செய்து யூதர்களை அழிப்பதற்கென்றே, ஹிட்லர் இரண்டு படைகளை உருவாக்கினார். Gestapo – என்ற ரகசிய காவல்படை. SS – என்ற கருப்பு யூனிஃபார்ம் அணிந்த பாதுகாப்புப் படை.

இந்த இரண்டு படையினரும் ஒரு யூத எறும்பைக் கூட கைது செய்யலாம். வாரண்ட் எதுவும் தேவையில்லை. அவர்கள் வாழ்க்கைக்கு ‘வாரண்டி’யும் கொடுக்க வேண்டாம். கொன்று விடலாம். ஒரே ஒரு கண்டிஷன். தப்பித் தவறிகூட எந்த  ஜெர்மானியரையும் கைது செய்துவிடக் கூடாது.

அந்தப் படையினர் கண்ணில்பட்ட யூதர்களையெல்லாம் கைது செய்தனர். கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் துப்பாக்கிகளுக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தனர்.

உஷாரான யூதர்கள் பலர், கையில் கிடைத்த பொருள்களுடன் எங்கெங்கோ தப்பித்து ஓட ஆரம்பித்தார்கள். எங்கு சென்று அகதியாகவோ, இல்லை கைதியாகவோ வாழ்ந்தால் கூட தப்பில்லை, ஆனால் ஜெர்மனியில் செத்துவிடக்கூடாது என்று ஐந்து லட்சம் யூதர்கள் தப்பித்து விட்டனர்.

மற்றவர்கள்?

‘என்னப்பா நீங்கள்.. வேகம் பத்தாது போலிருக்கிறதே. இவ்வளவு தான் கொன்றீர்களா?’ என்று ஹிட்லர் பார்வையாலேயே கேட்டார். அவ்வளவுதான். ஒவ்வொருத்தரும் ஒரு நாளைக்கு ஒரு யூதரையாவது கொல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு கொல்ல ஆரம்பித்தார்கள். நாளடைவில் ‘நீ வெறும் பத்துதானா, நான் இருபது யூதர்களைக் கொன்றேன்’ என்று பெருமையாக ஸ்கோர் சொல்லிக் கொண்டார்கள்.

யூதர்களைப் பிடித்து அடைத்துக் கொடுமைப்படுத்துவதற்காகவும் கொல்வதற்காகவும் பிரத்யேக ‘வசதி’களுடன் கூடிய சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டன. அவை Concentration camps என்று அழைக்கப்பட்டன.

அவற்றை, சிறைச்சாலைகள் என்று சொல்வதை விட கொலைச்சாலைகள் என்றே சொல்ல வேண்டும். இம்மியளவும் வெளிச்சம் புகமுடியாத கான்கீரிட் கல்லறைகள் அவை. காற்றால் நிரம்பிய பூமியில் காற்றேயில்லாத இடங்களாக அந்தச் சிறைச்சாலைகள் விளங்கின. தண்ணீர் கிடையாது. உணவின் வாசனைகூட அந்தச் சிறைச் சாலையினுள் புகுந்தது கிடையாது. மற்றபடி தேள், பாம்பு, பல்லி, பூரான், இன்னபிற விஷ ஜந்துக்கள் பரிபூரண சுதந்தரத்துடன் வாழ்ந்த இடம் அது.

கைதிகளை விசாரிக்கும் முறையை நினைத்தாலே நெஞ்சை அடைக்கும். கைதிகளை பெரும்பாலும் நிர்வாணமாக நிற்க வைத்து தோலை கொஞ்சம் கொஞ்சமாக உறிப்பது, அடித்துக் காயப்படுத்தி அதன் மேல் வெந்நீர் ஊற்றுவது, உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக நறுக்கிப் போடுவது, தீயில் இட்டு வாட்டுவது, பிறப்புகளைத் தாக்குவது, வன்புணர்ச்சி, இன்னும் சொல்ல முடியாத பல கொடுமைகள். நரகத்தில் இருப்பதைவிட குரூர அவஸ்தைகளை யூதர்கள் அனுபவித்தனர். விட்டால் போதும் என்று உயிர் விட்டனர்.

ஹிட்லரின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில், இந்த சித்திரவதைக் கூடங்களில் சுமார் எண்ணூறு யூதர்களும் ஆயிரத்து நானூறு கம்யூனிஸ்டுகளும் கொல்லப்பட்டார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

***

முல்லைத்தீவு, பிப்.13 –

தாங்கள் கைப்பற்றும் பகுதிகளில் உள்ள தமிழர்களின் பண்பாட்டு சின்னங்களை சிங்களப் படைகள் அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. தமிழர்களின் இடங்களை சிங்களர் குடியிருப்புகளாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது.

வீடுகளை இழந்து அடிமைகள்போல விரட்டப்படும் தமிழர்களை 3 ஆண்டுகள் முகாம்களில் வைத்திருக்க சிங்கள அரசு முடிவு செய்துள்ளது. இந்த 3 ஆண்டுகளில் தமிழர்களின் வாழ்வாதாரம் அனைத்தும் சிங்களர் கைக்கு பறிபோய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செய்தி : மாலைமலர்

கழுதைகள் மன்னிக்கவும்!

(காதலர் தினத்துக்கும் இந்தக் கட்டுரைக்கும் ராம்சேனாவுக்கும் இத்துனூன்டுகூட தொடர்பில்லை.)

ஆட்டையாம்பட்டி என்றொரு அழகிய குக்கிராமம். (இந்தக் கிராமம் தமிழ்நாட்டில் இல்லை. ஏன் இந்தியாவிலேயே இல்லை. இது ஒரு வெர்ச்சுவல் கிராமம் என்று வைத்துக் கொள்வோமே!) இது திரு மற்றும் திருமதி என்ற இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி வரும் கதை. அவர்களின் மழலைக் காலத்தில் ஆரம்பித்து இளமைக் காலத்தில் தொடர்வதாக உருவாக்கப்பட்ட கதை.

திருவுக்கு அப்போது ஒரு வயது இருக்கும். திருமதிக்கு வயது ஆறு மாதமிருக்கும். இரண்டு பேருமே செம அழகாக இருப்பார்கள். ஊரோ கொண்டாடும் அழகு என் சொல்லலாம்.

‘கழுதை கெட்டா குட்டிச் சுவரு’ என்ற ‘திரு’க்குறளுக்கேற்ப ஏதாவது குட்டிச் சுவரைத் தேடிச் சென்று முதுகு சொரிந்து கொண்டிருப்பதுதான் திருவின் முழுநேரப் பொழுதுபோக்கு. இப்படி திரு எல்லாக் குட்டிச் சுவர்களையும் தன் சகாக்களோடு ஆக்கிரமித்துக் கொள்வதால் திருமதி எந்தவொரு சுவரும் கிடைக்காமல் விக்கித்து நிற்பாள்.

(திரு ஒரு ஆண் கழுதை, திருமதி ஒரு பெண் கழுதை என்பதை இங்கே சொல்லிவிடுகிறேன்.)

இப்படி எல்லாச் சுவர்களிலும் திரு தன் முதுகுரேகையை பதித்துவிட,  அதற்குமேல் தன் முதுகு ரேகையை அதில் பதிக்க அருவருப்படைந்து அவஸ்தைப்படுவாள் திருமதி. இப்படி திருவின் மேல் திருமதிக்கு விறுவிறுவென வெறுப்பு வளர்ந்துகொண்டே போனது.

இரண்டு வருடங்கள் கழிந்தன.

அன்று, தான் உண்டு கொண்டிருந்த ஒரு வாரப் பத்திரிக்கையில் ஒரு பேப்பரை திருமதிக்கு கொடுத்தான் திரு. ஆனால் திருமதி அதை வாங்கிக் கொள்ளவில்லை. ‘வேண்டாம்’ என மறுத்தபோது திருமதியின் முகத்தில் வெளிப்பட்டது வெட்கம் கலந்த கோபமா, அல்லது வெறுப்பு கலந்த ஆத்திரமா என திருவால் புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் அந்தப் பேப்பரில் இருந்த வார்த்தைகள் ‘ஓடிப்போகலாமா?’

தினம் தினம் திருமதி செல்லும் பாதையில் ஒரு ஒற்றை ரோஜாவோடு காத்திருப்பான் திரு. ஒருநாளும் அந்த ரோஜாவை வாங்கிக் கொண்டதில்லை திருமதி. அதுக்காக கவலைப்பட்டுக்கொண்டு கண்ணீர் விட்டதில்லை திரு. என்ன செய்வான்? வேறேன்ன.. ரோஜாவைத் தின்று விடுவான்.

ஆட்டையாம்பட்டியில் அந்த வருடம் ஐப்பசி தாண்டியும் மழை ஒரு எஸ்.எம்.எஸ். கூட அனுப்பவில்லை. விவசாயம் படுத்துவிட்டது. கண்மாய் நிர்வாணமாகக் கிடந்தது. கள்ளிச் செடிகளும், கருவேலம் மரங்களும்தான் பாக்கியிருந்தன.

‘எப்பா பதினைஞ்சு வருசங்கழிச்சு இப்படிப் பஞ்சம் பல்லைக் காட்டுது. நம்ம ஊரு எல்லைச்சாமிக்கு வர்ற வெள்ளிக்கிழம பொங்க வைச்சு  பூசாரி கிட்ட குறி கேட்டுருவோம்!’ என பஞ்சாயத்துப் பெரிசு தன் பஞ்ச் தீர்ப்பை வழங்கினார்.

‘ஏஏஏய்ய்ய்.. நா ஆத்தா வந்திருக்கேன்.. ஊருல நல்ல காரியம் ஏதோ தடங்கலாயிடுச்சு. பெரும் தெய்வக் குத்தம் ஆயிடுச்சு!. மழ தண்ணீ வேணுமுன்னா இளங் கழுதைகளுக்கு கண்ணாலம் செஞ்சு வைக்கிறதுதான் ஒரே பரிகாரம். வர்ற பவுர்ண அன்னிக்கு கண்ணாலம் நடக்காட்டி அடுத்த ஏழு வருசங்களுக்கு பஞ்சந்தேன்.. பட்டினிதேன்!’ – பூசாரி கூறிய வாக்கு திருமதியை பூச்சாண்டி காட்டியது. காரணம் ஊரிலுள்ள ஒரே இளம் பெண் கழுதை அவள் மட்டும்தான். கல்யாணம் சரி. இதற்காக வெளியூரில் அல்லது வெளிநாட்டிலா அவளுக்கு மாப்பிள்ளை தேடப் போகிறார்கள். திரு மட்டும்தான் ஒரே சாய்ஸ்!

நினைக்க நினைக்க எரிச்சலாக வந்தது. போயும் போயும் அவனுக்கா வாழ்க்கைப்பட வேண்டுமென நினைத்த திருமதி அன்று இரவே ஊரை விட்டு ஓடிப்போக முடிவு செய்தாள். பதுங்கிப் பதுங்கி தெருத்தெருவாக ஒதுங்கி ஒதுங்கி அவள் நழுவிக் கொண்டிருக்கும்போதே பார்த்துவிட்டான் திரு. அவள் ஓட, அவன் துரத்த.. அதற்கு மேல் துரத்த முடியாமல் சோர்ந்து போய் தன் சாதகத்தை ஆரம்பித்துவிட்டான் திரு. ஊரே ஒன்று கூடி பிடித்தனர், இருவரையும்!

‘ஏலேய்.. இன்னொரு தெய்வக்குத்தம் நடக்கப் பாத்துச்சுலே! கழுதைய்ங்க தப்பிச்சுப் போயிருந்துச்சுன்னா வேற கழுதைய்ங்களுக்க நாம எங்கிட்டுப் போறது? இந்தக் கல்யாண சோடிகளை நம்மூரு எல்லைச் சாமி கோயில்லயே கட்டிப் போட்டு, காவலா ஒரு ஆளையும் போடுங்கவே!’ என்று ஊர்ப் பெருசு ஒருவர் கூற திருமதிக்கு தலை சுற்றியது.

‘ஒரு பொம்பளையோட மனசு இன்னொரு பொம்பளைக்குத்தான் புரியும். நம்ம மனசைப் புரிஞ்சுக்குற மாதிரி இங்க எவளுமே இல்லையே’ என தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் திருமதி. அவளை சந்தோஷமாக உரசியபடி பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான் திரு.

கல்யாண நாள் வந்தது. தனக்கு பட்டுவேட்டிச் சட்டை கிடைக்கும், அவளுக்குச் சின்னாளப் பட்டுச் சீலை கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்த திருவின் நினைப்பில் அரை லாரி மண் விழுந்தது. சிக்கனமாக தண்ணீரைச் செலவழித்து குளிப்பாட்டி விட்டனர். ஏழெட்டு பூக்களால் கட்டப்பட்ட மாலைகள் இரண்டு. (மொத்தமே ஏழெட்டு பூக்கள்தாங்க!) திருமதியின் நெற்றியில் பெரிதாக வைக்கப்பட்ட பொட்டு. ஊரே கூடி நின்றது. ஒரு மஞ்சள் கயிறுடன் பூசாரி தயாராக இருந்தார்.

கொஞ்சமாவது வெட்கப்படுவாள் மணப்பெண் என எதிர்பார்த்து ஏமாந்தான் திரு. ‘கழுதைக்கு வாக்கப்பட்டா கனைச்சுத்தானே ஆகணும்’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் திருமதி.

நையாண்டி மேளம் கொட்ட, வெற்றிலைக் கறை படிந்த வாயோடு புன்னகைத்து திருவின் சார்பில் திருமதிக்குத் தாலி கட்டினார் பூசாரி. அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதற்குப் பதிலாக பூசாரியை மிதித்து அவர் வலியால் அலறுவதைப் பார்க்க வேண்டும் என துடித்தாள் திருமதி. பத்மஸ்ரீ வாங்கியது போல் பெருமித்துடன் நின்று கொண்டிருந்தான் திரு.

கல்யாணச் சாப்பாடு என அல்லோகலகல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. திருவுக்கும் திருமதிக்கும் கழுத்தில் போடப்பட்ட அந்த ‘மெகா’ மாலைதான் கல்யாணச் சாப்பாடு. சாப்பிட்ட மக்களெல்லாம் ஏப்பம் விட்ட வாயோடு மழை வருகிறாதா இல்லையா என வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, சூரியனால் வியர்வை மழை பொழிந்து கொண்டிருந்தது.

ஒரு வாரமாயிற்று. ‘கழுதைக்குத் தெரியுமா காதலோட வாசனை’ என திரு வெறுக்குமளவுக்கு சண்டித்தனம் செய்து கொண்டிருந்தாள் திருமதி.

‘தாலி கட்டின புருஷனை மதிக்க மாட்டீங்கியே! நீயெல்லாம் ஒரு பொம்பளையா?’ கோபமாகக் கத்தினான் திரு.

‘இது தாலிக் கயிறில்ல.. என் கழுத்துல ஏறுன தூக்குக்கயிறு!’ பதிலுக்குக் கத்தினாள் திருமதி. இதுவே வாடிக்கையாயிற்று.

‘மழை பெஞ்சிடுச்சுன்னா இந்தத் தாலியைக் கழட்டி வீசிரலாம். இல்லை சாஸ்திரத்துக்கு கல்யாணம்தான் பண்ணியாச்சே. இனிமே இவன் கூட வாழப் பிடிக்கலன்னு டைவர்ஸ் அப்ளை பண்ணலாமா’ என்றெல்லாம் யோசித்தாள் திருமதி.

மழை வந்த பாடில்லை.

மூன்று மாதங்கள் கழிந்தது. இடைப்பட்ட நாட்களில் திரு-திருமதி ஆதர்ச தம்பதிகளாக மாறிப்போயினர். ‘சோடின்னா இதான்யா சோடி’ என சாலமன் பாப்பையா பட்டிமன்றம் வைத்தால் தீர்ப்பு சொல்லுமளவுக்கு மாறிப் போயினர்.

மேகம் கருத்தது. ரம்பா, மேனகா, ஊர்வசி என்ற பெயர்கள் கொண்ட மூன்று புயல்கள் அடுத்தடுத்து கரையைக் கடந்தது. கண்மாய் மட்டுமல்ல. ஆட்டையாம்பட்டியே நிறைந்து போனது. எங்கு பார்த்தாலும் வெள்ளம்.

‘ஏஏய்ய்ய்… மழை நிக்கணும்னா அந்தக் கழுத கழுத்துல கெடக்குற தாலியைக் கழட்டணும். தானா நிக்கும் மழ’ இடுப்பளவு நீரில் ஆவேசமாக வாக்குச் சொன்னார் பூசாரி.

‘நானாடா உங்களைக் கண்ணாலம் பண்ணிவைக்கச் சொன்னேன். யேய் நீங்க நெனைச்சா கட்டுறதுக்கும் தேவையில்லாட்டி எடுக்கறதுக்கும் என் தாலி என்ன சினிமா ஷூட்டிங்குக்கு போட்ட செட்டா! புருசன் உசிரோட இருக்கறப்ப தன் தாலியைக் கழட்டிக் கொடுக்க கலாசாரத்தைக் கட்டிக் காக்குற எந்தப் பொம்பளையும் சம்மதிக்க மாட்டா! முட்டாப் பசங்களா, உங்களால முடிஞ்சதைப் பண்ணிக்கோங்கடா’ உள்ளுக்குள்ளேயே குமுறினாள் திருமதி.

சிறிசு முதல் பெருசு வரை ஊரே திரண்டு தேடியது திருமதியை.

மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஊரைத் தாண்டி தண்டவாளத்தின் மேல் ஒரு நிம்மதியான பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடிக் கொண்டிருந்தனர் அந்தக் காதல் ஜோடிகள்.

கழுத்தில் மஞ்சள் கயிறோடு திருமதி உங்கள் ஊருக்கும் தஞ்சம் புக வரலாம். வந்தால் இந்தக் கட்டுரையை அச்செடுத்து அந்தக் காகிதத்தை அவளிடம் காண்பியுங்கள். சந்தோஷமாகச் சாப்பிடுவாள்.

நான் கடவுளும் மெண்டோஸ் குரங்கும்!

உதயம் தியேட்டரில் டிக்கெட் புக்கிங் ஆரம்பமான உடனேயே நான்கு டிக்கெட் வாங்கியாயிற்று. குடும்பத்தினரோடு அல்ல, நண்பர்களோடு பார்ப்பதாகத் திட்டம். சனிக்கிழமை  (பிப்ரவரி 7) மாலைக்காட்சிக்கு உரிய நேரத்தில் சென்றாயிற்று.

சொர்க்க வாசலைத் திறந்து பக்தர்களை உள்ளே அனுமதிக்க ஆரம்பித்தார்கள். எனக்குமுன் வரிசையில் சென்ற ஒருவர் கையில் பெரிய ஊதுபத்தி பாக்கெட். ‘ஓம் நமசி வாயம்’ என்று அதில் இருந்தது. அந்த நபரோடு ஒட்டி நின்றிருந்த பிறர் கையில் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தேன். தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி… நல்லவேளை. எதுவுமில்லை.

படம் ஆரம்பிப்பதற்கு முன் நிறைய விளம்பரங்கள். குரங்கு, கழுதை. மெண்டோஸ் மிட்டாய் சாப்பிட்ட குரங்கு, ஆதி மனிதனாக பரிணாம வளர்ச்சிபெற்று, கழுதையை அடிமையாக்கும் கான்செப்ட். எனக்கென்னவோ அந்த விளம்பரமே ஆர்யா நடித்ததுபோல  இருந்தது.

பின் வரிசையில் குடும்பத்தோடு ஒருவர் வந்திருந்தார். ஆறு வயது மதிப்புமிக்க பெண்  குழந்தை ஒன்றும் வந்திருந்தது. அதன் கையில் டெடி பியர். கிஷ்கிந்தாவுக்கு பிக்னிக்  போவதுபோல நினைத்து அழைத்து வந்துவிட்டார்போல. ‘தேவனே! இந்த வாதைகளிலிருந்து அவர்களை ரட்சியும்!’

தேசிய விருதை வாங்கப்போகும் ஆர்யாவே! நடிப்பு உலகில் லவம் வரும் நம்பிக்கை நட்சத்திரமே! (வலம் அல்ல, லவம்தான்.) இப்படியெல்லாம் வெளியே ரசிகக் கண்மணிகள்  ஃப்ளக்ஸ் பேத்தல்கள். படத்தில் டைட்டில் கார்டு போடும்போது ‘ஆர்யா’ என்று மட்டும்  போட்டார்கள். நிறைவாக இருந்தது.

எல்லோரும் படத்தோடு ஒன்றிப் போயிருந்தார்கள். பிச்சைக்காரர்களை வைத்து அதிர வைக்கும் ஒரு காட்சி. என் பக்கத்து சீட் நண்பர் தலையைக் குனிந்து கொண்டிருந்தார்.  பின் வரிசையைத் திரும்பிப் பார்த்தேன். தந்தையும் தாயும் தலையைக் குனிந்துகொண்டிருக்க, ஆறுவயது குழந்தை மட்டுமே ‘தேமே’வெனப் பார்த்துக் கொண்டிருந்தது.

இடைவேளை. தியேட்டரின் விராண்டாவில் நிற்க முடியாத அளவுக்கு சிகரெட் புகை யாகம். ஓம் சிவோஹம். அங்கே நிற்பதற்குப் பதில் ஆர்யாவிடமிருந்து கஞ்சா பைப்பை  வாங்கி ஒரு இழு இழுத்துவிடலாம் என்றே தோன்றியது.

ஆர்யா வரும் காட்சிகளே குறைவு. அதிலும் அவர் பேசும் வசனங்கள் மிகக்குறைவு.  அதிலும் தமிழ் வார்த்தைகள் மிகச் சொற்பமே. சமஸ்கிருதமே மிகுதி. ஹரன் பிரசன்னா வோடு சேர்ந்து இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் நினைத்துக் கொண்டேன்.

க்ளைமாக்ஸில் பூஜாவின் நடிப்புக்கு கைதட்டு. ‘சூடா ஒரு தேசிய விருது பார்சல்!’ எ  பிலிம் பை பாலா என்று திரையில் வரும்போது கைதட்டு. அடுத்த பாலா படம் வருவதற்குள் 2011ல் முதல்வர் யார் என்று தெரிந்துவிடும்.

வெளியே வந்தேன். பக்கவாட்டில் நடந்துவந்த ஒருவர் என்னென்னமோ சொல்லிக்கொண்டு வந்தார். திடீரென என் முகத்தைப் பார்த்து, ‘ஓ ஸாரி. என் ஃப்ரெண்டு நினைச்சு  பேசிக்கிட்டு வந்தேன்’ என விலகினார். தவறு அவர் மீதில்லை. எல்லாப் புகழும் பாலாவுக்கே.

அடுத்த காட்சிக்காக மக்கள் தயாராகியிருந்தார்கள். பக்கத்து தியேட்டரில் செம தில்லாக வில்லு விட்டுக்கொண்டிருந்தார் விஜய். மந்தையிலிருந்து விலகிய ஆடாக பாலா தெரிந்தார். ஆட்டுமந்தைக் கூட்டத்தில் ரசிப்பதற்கு ஒன்றுமில்லை.

இளநீர் பாட்டியும் பப்பாளி தாத்தாவும்

கடந்த சில வருடங்களில் அவசியமேற்பட்டால் கிழக்கு அலுவலகத்திலேயே இரவு தங்கிவிடுவது வழக்கமாக இருந்தது. ச.ந. கண்ணன், முத்துக்குமார், மருதன் மற்றும் நான்.  எப்போதாவது நால்வரும். பல சமயங்களில் யாராவது இருவர் கூட்டணி அமைத்து. காலையில் எழுந்து வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவோம் அல்லது அலுவலகத்திலேயே ‘கடன்களை’ முடித்துவிட்டு பணிக்குத் தயாராகிவிடுவோம். காலை டிபன் ஆழ்வார்பேட்டை  சூர்யாஸில்.

பொங்கல், பூரி, சாம்பார் இட்லி, மசால் தோசை – சமயங்களில் வெறுப்பாகத்தான்  இருக்கும். வேறு வழியில்லாததால் சாப்பிட்டோம். ஒருநாள் நானும் கண்ணனும் சாப்பிட்டுவிட்டு வரும்போது சி.பி. ஆர்ட் கேலரி அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு ப ¡ட்டி இளநீர் விற்பதைப் பார்த்தோம். (பல வருடங்களாக விற்றுக் கொண்டிருந்திருக்கலாம். நாங்கள் கவனித்தது அப்போதுதான்.) ‘இளநீர் சாப்பிடலாம்’ என்றேன் கண்ணனிடம். சாப்பிட்டோம்.

அடுத்த சில நாள்களிலும் காலை உணவுக்குப் பின் இளநீர் சாப்பிட்டோம். கண்ணன்  சகஜமாக பாட்டியிடம் பேச்சு கொடுத்தார். ‘இளநிக்குள்ள தண்ணி நிறைய இருக்குதா,  இல்லையான்னு எப்படி கண்டுபிடிப்பீங்க?’

‘ஆங், அதெப்படி சொல்லுவேன். எங்கப்பாகிட்ட நான் அடி வாங்கிக் கத்துக்கிட்ட ரகசியம். சொல்ல மாட்டேன்.’

இம்மாதிரியான உரையாடலுக்குப் பிறகு கண்ணன் பாட்டியின் மனத்துக்கு நெருக்கமா கிவிட்டார்போல. ஒருநாள் பாட்டி இளநீர் ஒன்றை வெட்டி கண்ணனிடம் கொடுத்தது.  அவர் என்னிடம் கொடுத்தார். அடுத்த இளநீரை வெட்டிக் கொண்டிருந்த பாட்டி  வெடுக்கென்று ஒரு வசனத்தை விட்டது. ‘ஏம்ப்பா, நிறைய தண்ணி இருக்கும்னு நான்  உன்கிட்ட கொடுத்தா, நீ அவன்கிட்ட தூக்கிக் கொடுத்துட்டியே!’

பதறிப்போய் அந்த ‘பாச’இளநீரை கண்ணனிடமே கொடுத்துவிட்டேன். கண்ணனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. பாட்டி எனக்கு ஒதுக்கிய இளநீரை மரியாதையாக வாங்கிக் குடித்தேன். வாழ்க கண்ணன்! வளர்க பாட்டியின் பாசம்!

இருந்தாலும் எனக்குள் உறுத்தல். பாட்டி ஏன் அப்படிச் சொன்னது அல்லது பாட்டியின்  மனத்தில் இடம்பிடிப்பது எப்படி? வாரத்திற்கு இரண்டு இளநீராவது குடிப்பது என்  வழக்கம். அலுவலகத்துக்கு வரும் வழியில் பேருந்தை விட்டு இறங்கி, பாட்டியிடே இளநீர் வாங்கிக் குடிக்க ஆரம்பித்தேன். கண்ணன் இல்லாமல். தனியாக.

வாடிக்கையாளர் ஆனபின் பாட்டி என்னிடமும் பாசம் காட்ட ஆரம்பித்தது. ‘இந்தா, உனக்குன்னே இந்த காயை எடுத்து வைச்சுருக்கேன். நிறைய தண்ணி. தித்திப்பா இருக்குதா?’ –  நிறைய தண்ணீரோ, தித்திப்போ இல்லாவிட்டாலும் பாட்டியின் பாசம் இனித்தது. கண்ணனிடம் பெருமையாகச் சொன்னேன், ‘நானும் பாட்டிக்கு தோஸ்த் ஆகிட்டேன் தெ ரியுமா!’

நாளடைவில் ஒரு தர்மசங்கடம் ஆரம்பித்தது. அந்தப் பேருந்து நிறுத்தத்தைக் கடக்கும் போதெல்லாம் பாட்டி என்னைப் பார்ப்பதும் நான் அதைப் பார்த்தும் பார்க்காமல் போவதும். எல்லா நேரமும் இளநீர் குடிக்க முடியாதே. ‘அப்புறமா வர்றேன் பாட்டி’ என்று சொல்லிவிட்டுச் செல்வேன்.

தொடர்ந்து சில நாள்கள் நான் வராவிட்டால் பாட்டி உரிமையோடு கோபித்துக் கொள்ளும். ‘நீ இப்பல்லாம் வர்றதே இல்லை. இனிமே உனக்கு இளநி தரமாட்டேன்.’ வாய் தான் சொல்லிக்கொண்டிருக்குமே தவிர பாட்டியின் கையில் அரிவாள் இளநீரைச் சீவிக்  கொண்டிருக்கும்.

ஒருமுறை பாட்டியை நீண்ட நாள்கள் காணவில்லை. பேருந்து நிறுத்தத்தில் இளநீர்  அடுக்கப்பட்டிருக்கும் காற்றில்லாத டயர்களை உடைய துருப்பிடித்த டிரைசைக்கிள்  மட்டும் நின்று கொண்டிருந்தது. சுற்றிலும் பிளாஸ்டிக் சாக்கினால் கட்டப்பட்ட நிலையில். பத்துநாள்களுக்குப் பின் பாட்டியை மீண்டும் கண்டேன். ‘என்னைத் தேடுனியா?  அதையேன் கேக்குறப்பா. காய்ச்சல் படுத்துட்டேன். ஆஸ்பத்திரில. குளிரு தூக்கித்தூக்கிப் போட்டுச்சு. சர்ச்சுக்குக்கூட போகமுடியல. இன்னிக்குத்தான் வந்தேன்.’

அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் வர ஆரம்பித்தேன். அந்தச் சமயங்களில் வாக னத்தை நிறுத்தி இளநீர் குடிப்பதுவும், தேவைப்படாத நேரத்தில் சர்ரென்று பாட்டிக்குத்  தெரியாமல் கடந்து செல்வதும் எளிதாக இருந்தது. தர்மசங்கடம் இல்லை.

2008ன் மழைக்காலம் ஆரம்பித்தது. பாட்டிக்கு வியாபாரம் இல்லை. பாட்டியும் இல்லை.  அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மாதகாலம் இடைவெளி விழுந்துவிட்டது. பா ட்டி இருந்தும் நான் ஏனோ இளநீர் சாப்பிடவில்லை. மனத்துக்குள் உறுத்தல். கடந்த  ஜனவரியில் ஒருநாள் பாட்டியிடம் சென்றேன். ‘எவ்ளோ நாளாச்சு? நீ ஆபிஸ் மாறிப்போயிட்டியோன்னு நினைச்சேன்.’

‘இல்ல பாட்டி, ஊருக்குப் போயிருந்தேன்’ – சமாளித்தேன்.

சென்றவாரம். இளநீர் சாப்பிடுவதற்காக பேருந்து நிறுத்தத்தைப் பார்த்தேன். பாட்டி  இல்லை. டிரை சைக்கிளைத் தேடினேன். அதுவும் இல்லை. என்ன ஆகியிருக்கும்? பாட்டி வியாபாரத்தை இடம்மாற்றிவிட்டதா? இல்லை, வேறு ஏதாவது… பாட்டியின் பெயர்,  எங்கிருந்து வருகிறது என்பதுகூடத் தெரியாதே.

இன்று காலையில்கூட பேருந்து நிறுத்தத்தில் பார்த்தேன். ஏகப்பட்ட கூட்டம் நின்றி ருந்தாலும் அந்த இடம் வெறுமையாகத்தான் இருந்தது. ஒரு தாத்தா தள்ளுவண்டியில்  பப்பாளி விற்றுக்கொண்டிருந்தார்.

(இதன் தொடர்ச்சி…)