டாப் 10 புத்தகங்கள் – 2008

இந்த ஆண்டில் வெளியான புத்தகங்களில் எந்தக் கடையிலுமே எப்போதுமே கிடைக்காத அளவுக்கு விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் சிறந்த 10 புத்தகங்களின் தரவரிசைப் பட்டியல்.

10
மனம் is a மனம்
ஆசிரியர் : சுவாமி சுனாமியானந்தா
மனம் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். மனதை அடக்கி ஆள்வது என்பது லாரிக்கு பின் நின்று கூட்டத்தில் முட்டி மோதி ஓட்டைக்குடத்தில் தண்ணீர் பிடிப்பதற்குச் சமம். மனிதர்களின் மனம் என்பது கார்ப்பரேஷன்காரன் தோண்டிப்போட்ட குழி போன்றது! பெரிய மனிதர்களின் மனம் என்பது குப்பை வண்டிக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் ஒற்றைக் குப்பைத்தொட்டி போன்றது! – இது போன்ற சுவாமிஜியின் ஆழ்ந்த அனுபவ உரைகள் புத்தகம் முழுவதும் உப்பிக் கிடக்கிறது. ‘சத்சங்க அகாதெமி’ விருதுக்காக இந்தப் புத்தகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(இது ஓர் உள்ளீடு வெளியீடு, கீழ்ப்பாக்கம். பக்கம் : 238ல் ஆரம்பித்து 11ல் முடிகிறது. விலை : 17$.)

9
30 நாட்களில் தூய தமிழ் பேசுவது சுலபம்!
ஆசிரியர் : இங்கிலீஷ்காரன்
‘ஆக்சுவலி திஸ் புக் டெஸ்கிரைப் அபௌட் ஹௌ டூ ஸ்பீக் இன் ப்யூர் டமில். திஸ் புக் இஸ் டீப்லி டெஸ்கிரைப் ஆல் டமில் வேர்ட்ஸ் வித் மீனிங் அன்ட் புரௌனன்ஷேசன்’ – இப்படி அட்டை டூ அட்டை தமிழ் கற்றுக் கொடுப்பதாக ஆங்கிலத்திலேயே ஜல்லியடித்திருக்கிறார்கள். அட்டையில் தலைப்பைத் தவிர வேறேங்கும் தமிழ் தேடினாலும் கிடையாது.
(வெளியீடு : ராமதாஸ் பதிப்பகம், சென்னை. பக்கம்: 420. விலை : ஏதாவது பாத்துப் போட்டுக் கொடுங்க.)

8
சாம்பார் வைப்பது எப்படி?
ஆசிரியர் : முருங்கைப்ரியா
சாம்பார் வைப்பது எப்படி என ர்ர்ரொம்ம்ப்ப விரிவாக விளக்கும் நூல். சாம்பாருக்கு தேவையான பருப்பை, மிளகாய் வற்றலை, காய்கறிகளை எப்படி பயிர்செய்ய வேண்டும் என ஆ’ரம்ப’த்திலிருந்தே ஆரம்பித்து, அணு அணுவாக விளக்குகிறது. சாம்பார் வைக்கும் சட்டியின் விட்டம், உயரம், கரண்டியின் நீளம் எல்லாம் எவ்வளவு இருக்க வேண்டுமென தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது இதில்! இந்த நூலைப்படித்துப் பொறுமையாக உங்கள் ஆயுசு முடிவதற்குள் ஒரு முறையாவது சாம்பார் வைத்து விடலாம். ஆனால் கடைசியில் சாம்பாருக்கு உப்பு போட மறந்துவிட்டார்கள்.
(வெளியீடு : பருப்பு பதிப்பகம், காரைக்குடி. பக்கம் : 222 விலை : ரூ.100)

7
பிரேக்கூ கவிதைகள்
ஆசிரியர் : ஜுஜுபி
ஒரு புதிய வகை கவிதை எழுதும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். பிரேக்கே இல்லாமல் இஷ்டத்துக்கு வார்த்தைகளை வாரித் தெளிப்பதுதான் ‘பிரேக்கூ’ என்கிறார் கவிஞர்.
‘துப்பாக்கியின் கொட்டாவியில்
சுளுக்கெடுக்கும் பட்டாம்பூச்சியின்
சட்டைப் பொத்தானுக்கு’
என ஆரம்பிக்கும் ஒரு கவிதை பிரேக்கே இல்லாமல் 22 பக்கங்கள் கழித்து ‘வாலில்லா வாசலில்
வந்து நிற்கும் டவுன்பஸ்!’ என்று முடிவதாக நம்பப்படுகிறது!
(வெளியீடு : எடக் மடக் பதிப்பகம், சென்னை. பக்கம் : 534, விலை : ரூ.94.15)

6

உடம்பை வளர்க்க உபயோகமான வழிகள்
ஆசிரியர் : தொப்பையப்பன்
இது மனிதர்களின் உடல்நலம் சம்பந்தப்பட்ட புத்தகமல்ல. நீங்கள் யானை வளர்த்தால் அதனை எப்படி ஆரோக்கியமாக வளர்ப்பது என விளக்கும் நூல். யானைக்கு எப்படி பல் தேய்ப்பது, யானையின் தொப்பையை எப்படிக் குறைப்பது என புகைப்படங்களுடன் அருமையாக விளக்கப்பட்டுள்ளது.
(வெளியீடு : யாரென்று போடவில்லை. பக்கம் : 120, யானை விலை.)

5
வாஸ்து உங்கள் தோஸ்து!
ஆசிரியர் : வாஸ்தவா
வாஸ்து சாஸ்திரப்படி இந்தப் புத்தகத்திற்கு அட்டை கிடையாது. வீட்டின் ஈசான மூலையில் படுத்துத்தூங்கினால் ‘பீஸான’ மூளையும் இயங்க ஆரம்பிக்கும், வடதென்மேல்கிழக்குத் திசையில் பச்சை நிற கிழிந்த பாயின்மேல் 35டிகிரி சாய்வாக டீ.வி.யை தலைகீழாக வைத்துப் பார்த்தால் செல்வம் பெருகும் என்பது போன்ற பல பயனுள்ள வாஸ்துக் குறிப்புகள் புத்தகம் முழுவதும் வாஸ்துப்படி தலைகீழாக அச்சிடப்பட்டுள்ளது. நம் வீட்டுக்குள் ஆமை புகுந்தால் ஆமையின் வீட்டுக்குள் நாம் புகுந்துவிட வேண்டும் என பல அரிய யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
(வெளியீடு : செங்கல் பதிப்பகம், கலவையூர். பக்கம் : 84 1/2 பக்கம் விலை : ஒரு லோடு மணலின் விலை.)

4
குருதிக் கோட்டுக் குருவிகள்!
ஆசிரியர் : ரௌத்ரப்பித்தன்
இந்நூல் பின் நவீனத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 222 கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தது 25 பக்கங்கள். எந்தக் கட்டுரையிலும் தான் சொல்லவருவது எந்த ஒரு வாசகனுக்கும் புரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டிருக்கிறார் ஆசிரியர். ‘நான் சொல்ல வருவது புரிதலையும் தாண்டிய புனிதம். நான் எழுதிய சில விஷயங்கள் எனக்கே புரியவில்லை’ என்ற ஆசிரியரின் முன்னுரையைப் படிக்கும்போது மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது.
(வெளியீடு : பிச்சைப்பாத்திரம், தர்மபுரி. பக்கம் : எண்ண முடியவில்லை. விலை : ரூ.800)

3
108 வகைக் கோலங்கள்
ஆசிரியர் : புள்ளிராணி
விதமிதமான புள்ளிக் கோலங்களை போடக் கற்றுக் கொடுப்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கமே. நூலாசிரியர் காதல் வயப்பட்டிருப்பதால் ‘புள்ளி வைச்சுக் கோலம் போட மறந்து’ விட்டார். அதனால் கோலப் புத்தகம் அலங்கோலப்புத்தகமாகிவிட்டது.
(வெளியீடு, பக்கம், விலை : ரொம்ப முக்கியம்!)

2
எலக்கன பிலையின்ரி எலுதுவது எப்டி?
ஆசிரியர் : தமிழ்க்கோடாரி
‘இலக்கணப் பிழையின்றி எழுதுவது எப்படி?’ என வந்திருக்க வேண்டிய புத்தகம், பக்கத்திற்குப் பக்கம் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் இப்படி வந்திருக்கிறது. நூலாசிரியருக்கு தமிழில் பெரிய ‘ழ’ என்னுமொரு எழுத்து இருப்பதே தெரியாது போல! ‘ஆ’ என்பதை ‘அ¡’ எனவும், ‘ஈ’ என்பதை ‘இ¡’ எனவும், மேலும் ‘உ¡’, ‘எ¡’, ‘ஒ¡’ என பல புதிய எழுத்துக்களை கண்டுபிடித்து தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றியிருக்கிறது இந்நூல்.
(வெளியீடு : நியூ பதிப்பகம், செம்மொழியூர். பக்கம் : 120 (எழுத்துப் பிழையின்றி ஒரே ஒரு வெற்றுப்பக்கம்.) விலை : ரூ. 33)

1
காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு!
ஆசிரியர் : சதக் செல்லப்பா
இது ஒரு நாவல் (என்று நம்பப்படுகிறது.) கதையின் முதல்பக்கத்தில் திடீரென காணாமல் போய்விடும் அப்புசாமியைத் தேடிப்போகும் சுப்புசாமி காணாமல் போய்விடுகிறான். சுப்புசாமியைத் தேடிப்போகும் ராமசாமியும் காணாமல் போய்விட, ராமசாமியைத் தேடிப் போகும் கோயிந்தசாமியும் காணாமல் போய்விட, கோயிந்தசாமியைத் தேடிப்போகும் அப்புசாமியும் (சுப்புசாமி தேடிப்போகும் ஆள்தான்) காணாமல் போய்விடுகிறான் என கடைசிப் பக்கத்தில் கூறுகின்றார் ஆசிரியர். ‘மீண்டும் முதல் பக்கத்தில் இருந்து கதையைத் தொடர்ந்து படிக்கவும்’ என ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தகத்தை படித்தே முடிக்கவே முடியாமல் வாசகர்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.
(வெளியீடு : காற்புள்ளி பதிப்பகம், நாவலூர். பக்கம் : 171. விலை : போடவில்லை.)

செங்கிஸ்கான் எங்க தாத்தா!

The American Journal of Human Genetics என்ற ஆய்வு இதழ், மார்ச் 2003ல்  ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஐரோப்பியா மற்றும் ஆசியாவைச் சேர்ந்த 2000 பேரிடம் மரபணு சோதனை  நடத்தினார்கள். கிடைத்த முடிவு இது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பல ஆண்களுக்கு கிட்டத்தட்ட ஒரே  மாதிரியான மரபணு அம்சங்கள் இருந்தன. சோதனையை விரிவாக்கியதில், பசிபிக் முதல் காஸ்பியன் கடல்வரை பதினாறு மில்லியன் ஆண்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை தெரிய வந்தது.

அதாவது, கிட்டத்தட்ட ஆயிரம் வருடத்துக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரிடமிருந்து தோன்றிய சந்ததி அது. எந்தப் பகுதியில்? யார் அந்த மனிதர்? மங்கோலியா. விடை கிடைத்ததுமே உறுதியாகச் சொல்லிவிட்டார்கள்.  செங்கிஸ்கான்!

இன்று, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வாழும் இருநூறில் ஒருவர் செங்கிஸ்கானின் பரம்பரையைச் சார்ந்தவர்கள்.

0

நெப்போலியன் பற்றி பல இடங்களில் படித்திருக்கிறேன். அலெக்ஸாண்டர் பற்றியும் படித்திருக்கிறேன். அதேவரிசையில் உள்ள மாவீரரான செங்கிஸ்கான் பற்றி தெரிந்துகொள்ளவும் ஆசைப்பட்டேன். சொல்லப்போனால்,  சில பத்திரிகைகளில் வந்த துணுக்குகள், தன்னம்பிக்கை தொடர்பான கட்டுரைகள் தவிர – வேறு எதிலுமே (தமிழில்) செங்கிஸ்கான் தட்டுப்படவில்லை.

2008ல் செங்கிஸ்கான் பற்றிய புத்தகம் எழுதவேண்டும் என்று ஒரு திட்டம் வைத்துக் கொண்டேன். ஜனவரி முதலே அதற்கான விஷயங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். புத்தகங்கள் வாங்கினேன். டாகுமெண்டரி, திரைப்படங்கள் தேடிப் பிடித்தேன். (அதிலும் பிபிசி வெளியிட்டுள்ள டாகுமெண்டரி ஈடுஇணையற்றது.) மே மாதம் செங்கிஸ்கான் புத்தகத்தை எழுத ஆரம்பித்தேன்.

எழுதுவதற்குச் சவாலாகத்தான் இருந்தது. குறிப்பாக மங்கோலிய கலாசாரத்தை சரிவரப் புரிந்துகொண்டால்தான் அடுத்தடுத்த வரிகளை எழுத முடியும் என்ற அளவிலான சவால். அப்புறம் மங்கோலியப் பெயர்கள் – டெமுஜின், ஜமுக்கா, யெசுகெய், சாகெட்டெய், டயாங் கான் – இப்படி ஆள்களின் பெயர்கள். கெரியிட், ஜெர்செட், நய்மன், போர்ஜிகின் – இப்படி இனக்குழுக்களின் பெயர்கள். ஆனான், கெர்லென், புர்கான் கல்டுன் – இப்படி இடங்களின் பெயர்கள். எல்லாமே நாக்கையும் மூக்கையும் சேர்த்துப் பயன்படுத்தி உச்சரிக்க வேண்டிய  வார்த்தைகள். எது இடம், எது இனம், எது பெயர் என்று பாகுபடுத்திப் புரிந்துகொள்வதற்குள் அய்யய்யோ!
தனியாக நோட்பேட் ஒன்றில் இம்மாதிரி வார்த்தைகளை எல்லாம் தனித்தனியாக விளக்கங்களுடன் எழுதிவைத்து சில நாள்களுக்கு மனப்பாடம் செய்தேன்.

எழுதும்போதே எனக்கு ஒரு வித பயத்தைக் கொடுத்தது இந்தப் பெயர்கள்தான் – ‘வாசகர்கள் மனத்தில் பெய ர்கள் நிற்குமா? குழப்பத்தைக் கொடுக்குமா? வாசிப்பு வேகத்தைக் கெடுக்குமா?’ அதற்காக டயாங் கானை  ஷாருக் கான் என்று பெயர் மாற்றி எழுத முடியாதே. மங்கோலியக் கடவுளான தெங்ரி மீது பாரத்தைப் போட்டு  விட்டு தொடர்ந்து எழுதினேன்.

டெமுஜின் என்றழைக்கப்படும் செங்கிஸ்கானின் வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும் சுவாரசியத்துக்கோ,  விறுவிறுப்புக்கோ பஞ்சமில்லை. ஆனால் செங்கிஸ்கானின் நிஜப்பெயர் டெமுஜின்தான். செங்கிஸ்கான் என்பது மங்கோலியா என்ற ஒரு தேசத்தை அவர் உருவாக்கும்போது கொடுக்கப்படும் பட்டம். அதன் அர்த்தம்  மங்கோலியர்கள் மிகவும் மதிக்கும் ஓநாய்களின் தலைவன்.

அதற்காக ஹாஃப் வே ஓப்பனிங் எல்லாம் கொடுத்து, ‘அவர்தான் செங்கிஸ்கான்’ என்று ஓப்பனிங் சாங் வை த்து, ப்ளாஷ்பேக்குக்குச் சென்று… எழுதும் சரித்திரப் புத்தகத்தின் அழகை நான் பாழாக்க விரும்பவில்லை.

ரிஸ்க்தான் எடுத்தேன். புத்தகத்தில் கிட்டத்தட்ட பாதியில்தான் டெமுஜின், செங்கிஸ்கான் ஆகிறார். ‘என்னய்யா  இது, ஏமாத்தறான். பக்கம் பக்கமா போய்க்கிட்டே இருக்குது, இன்னும் கதாநாயகனே வரலை’ என்று  வாசகன் என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டால்? ஆகவே புத்தக்கத்தின் முதல் சேப்டரிலேயே டெமுஜின் = செங்கிஸ்கான் என்று பொடி எழுத்தில் அடிக்குறிப்பு கொடுத்து நிம்மதி அடைந்தேன்.

புத்தகத்தை எழுதி முடிக்க இரு மாதங்கள் பிடித்தன.

0

புத்தகம் வெளியாகி நான்கு மாதங்கள் ஆகின்றன. நெப்போலியனை, அலெக்ஸாண்டரை விரும்பும் அளவுக்கு செங்கிஸ்கானையும் தெரிந்துகொள்ள வெகுஜன வாசகர்கள் விரும்புவார்களா என்று எனக்குள் ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டுதான் இருந்தது. என் சந்தேகம் நிஷா புயலுக்கு முன்பாகவே அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. கிழக்கின்  மார்க்கெட்டிங் துறை நண்பர்கள் கொடுக்கும் ரிப்போர்ட், கருத்துகள் எல்லாம் என்னை ஆச்சரியப்படத்தான்  வைக்கின்றன. செங்கிஸ்கானை அமோகமாக விரும்பும் தமிழ் வாசகர்களுக்கு என் நன்றி.

0

வெள்ளிக்கிழமை (26 டிசம்பர்) மாலை ஆறு மணிக்கு கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் புத்தகத்தை விமர்சிக்க இருக்கிறார் நண்பர் ஐகாரஸ் பிரகாஷ். அன்றைய அறிமுகத்திற்கான இன்னொரு பு த்தகம் நண்பர் குணசேகரன் எழுதிய இருளர்கள் – ஓர் அறிமுகம். அதை விமர்சிக்க இருப்பவர் நண்பர் பிரவாஹன். இரண்டு புத்தகங்களுமே இரு இனங்கள் குறித்தவை. இன மோதல்கள் வராது என்று நம்புவோம்.

வெள்ளிக்கிழமை விழாவுக்கு மங்கோலியர்களின் ஆஸ்தான வாகனமான குதிரையில் அலுவலகத்துக்குச் செல்லலாம் என்றொரு ஆசை. என்னைப்போலவே ஆசைப்பட்டு குணசேகரனும் இருளர்களின் செல்லப்பிராணியோடு வந்துவிட்டால்?

என் அரண்மனை வாழ்க்கை!

ப்போதுதான் முழுதாகச் செய்து முடித்த வீணை போல ஒருத்தி, பார்த்த உடனே எடுத்து வாசிக்கத் தோன்றும் வயலின் போல் ஒருத்தி, விரல்களால் விளையாட விளையாட இன்ப இசையைப் பரப்பும் கிடார் போல் ஒருத்தி, இவளைப் பார்த்துதான் தம்புராவையே வடிவமைத்திருப்பார்களோ என்று சந்தேகக் கேள்வியை எழச் செய்யும் ஒருத்தி, கொடியிடை கொண்ட கோட்டு வாத்தியம் போல் ஒருத்தி, சமபங்கு வளைவுகளாலும் சமபங்கு நெளிவுகளாலும் செய்த சாரங்கிபோல இன்னொருத்தி.

நாற்பது சுந்தரிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகு. பரத்பூர் மகாராஜா கிஷன்சிங் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த சுந்தரிகள் என்றால் சும்மாவா?

அந்த மஞ்சள் ஒளியில் நாற்பது தங்க விக்கிரகங்கள் முளைத்து நின்றது போல இருந்தது. ஒவ்வொரு விக்கிரகமும் மெதுவாக, வரிசையாக நீச்சல் குளத்தில் இறங்க ஆரம்பித்தது. மையப்புள்ளி போல மகாராஜா, சுற்றி வட்டமாக இளம்பெண்கள். உல்லாசத்தின் சிரிப்போசை.

ஆட்டத்தின் முக்கியமான கட்டம் ஆரம்பமானது.

‘என்ன தயாரா?’ மகாராஜாவின் கேள்விக்கு நாற்பது குயில்களும் ஒருமித்த குரலில் ‘ம்’ என்றன. மகாராஜா  ‘சொல்லிக் கொடுத்தபடியே’ எல்லாப் பெண்களும் தங்கள் வசதிக்கேற்ப மெழுகுவர்த்திகளை அங்கங்களுக்கிடையில் வைத்துக் கொண்டனர். ஒவ்வொரு பெண்ணையும் தன் மனம் போன போக்கில் குரலாலும் பின்பு விரலாலும் வருணிக்க ஆரம்பித்தார் கிஷன்சிங்.

‘ஆடி வா, பாடி வா, ஆணழகைத் தேடி வா, பேரின்பம் காணலாம் வா!’

தாமரைகள் தத்தளித்தன. நீர் தெறித்தோ, தண்ணீரில் மூழ்கியோ, தவறி விழுந்தோ மெழுகுவர்த்திகள் ஒவ்வொன்றாக அணைய ஆரம்பித்தன. அணைந்த மெழுகுவர்த்திக்கு உரிய பெண்கள், ஆட்டத்திலிருந்து அவுட். அவர்கள் நீச்சல் குளத்தின் சுற்றுச் சுவரிலும், சந்தன மரப்படிக்கட்டுகளிலும் சென்று உட்கார்ந்து கொண்டனர்.

முப்பத்தெட்டு, இருபத்தியொன்பது, இருபது, பதிமூன்று, ஆறு, மூன்று…

குளத்தின் உள்ளே இரண்டே இரண்டு பெண்கள் மட்டுமே பாக்கி. அவர்களுக்கு மூச்சு வாங்கியது. திரியில் துடித்துக் கொண்டிருந்த தீபம் போல உள்ளே அவர்களின் மனமும் துடித்துக் கொண்டிருந்தது. ஜெயிக்கப் போவது யார்? மஜாராஜாவும் சே, மகாராஜாவும் தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டார். சிறிய இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் ஆரம்பமானது. சுற்றியிருந்த முப்பத்தியெட்டு பேரும் டென்ஷனில் நகம் கடித்துக் கொண்டிருந்தார்கள். நீர் நெருப்பைத் தேடிக் கொண்டிருந்தது.

இறுதியில் ஒருத்தி அணைந்துபோனாள். அணையாதவளை அணைத்துக் கொண்டார் மகாராஜா.

****

ருமுறை லண்டனிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் இந்தியப் பிரிவு அலுவலகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்துப் பார்த்த ஊழியருக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. காரணம் அதில் ஒரு செருப்பு இருந்தது. பிங்க் நிற வலதுகால் செருப்பு. கூடவே ஒரு கடிதமும்.

‘இந்த செருப்பின் நிறத்தில் எனக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உடனே தேவை. என் மகாராணிக்கு பரிசளிக்க விரும்புகிறேன். எப்போது கிடைக்கும்?’

அனுப்பியிருந்தவர் ஜாம்நகர் சமஸ்தானத்தின் மகாராஜா.

பவல்பூர் சமஸ்தான மகாராஜாவுக்கோ ஒரு விநோதப் பழக்கம் இருந்தது. அவர் ரோல்ஸ் ராய்ஸில் சாலைகளில் பவனி வருவதற்கு முன்பாக ஒருவர் இன்னொரு வாகனத்தில் ‘மகாராஜா வருகிறார்’ என்று அறிவித்துக் கொண்டே செல்வார். மறுகணமே சாலையிலிருக்கும் மக்களெல்லாம் முதுகைக் காட்டியபடி திரும்பிக்கொள்வார்கள். மகாராஜா பவுசாகக் கடந்து சென்றபின் தங்கள் வேலைகளைத் தொடருவார்கள். கண்பட்டு விடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.

****

காராஜாவுக்கு முதுகில் அரிப்பெடுக்கிறதா? சுகமாகச் சொறிந்துவிட ஒரு ஆளைப் போடு. பல் துலக்க சலிப்பாக இருக்கிறதா? பக்குவமாகத் தேய்த்துவிட ஒரு பையனைப் போடு. காலைக் கடனை முடித்த பின்பு இடது கையால் கழுவ எரிச்சலாக இருக்கிறதா? இதமாகக் கழுவி விட ஓர் இளஞ்சிட்டை பணியில் அமர்த்து. அட, நீளமான கூந்தலில் பேன் தொல்லையா? தேடிப் பேன் பிடித்து, தீர்த்துக் கட்ட தேர்ந்த வீரன் ஒருவனுக்கு வேலை கொடு.

எது எதற்குத்தான் வேலைக்கு ஆள் வைக்க வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல், எதற்கெடுத்தாலும் பிரத்யேகப் பணியாளர்களை நியமனம் செய்திருந்த மகாராஜாக்கள் அநேகம். கபுர்தலா மகாராஜா ஜெகத்ஜித் சிங்கும் அப்படிப்பட்டவரே. சிறிய வயதிலிருந்தே மகா ‘கணம்’ பொருந்தியவராக இருந்ததால், ஜெகத்ஜித் சிங் உடைகளை அணிய, கழற்றி மாற்ற பெரும் சிரமப்பட்டார் ஜெகத்ஜித் சிங். குறிப்பாக பைஜாமா அணியும்போது அவரது பாடு திண்டாட்டமாகிவிடும். பைஜாமா இடுப்பிலிருந்து நழுவி கீழே விழுந்துவிடாதபடியாக அதன் நாடாவை எப்படி இறுக்கிக் கட்டவேண்டும் என்ற வித்தை மட்டும் ஜெகத்ஜித் சிங்குக்குப் பிடிபடவே இல்லை.

நாடாவில் முடிச்சுப் போடுவதென்பது அவருக்கு நாடாள்வதைவிட கஷ்டமான விஷயமாகத் தோன்றியது. முடிச்சு போடுவது மட்டுமல்ல, அதனை அவிழ்ப்பதுகூடத்தான். உலகத்திலிருக்கும் ஒட்டு மொத்த சிக்கலும் அவரது பைஜாமா நாடாவின் முடிச்சில் இருப்பதாகவே தோன்றியது. சிறுவனாக இருக்கும்போது பரவாயில்லை. வேலையாள்கள் நாடாவை கட்டியோ, அவிழ்த்தோ விடுவார்கள். வளர்ந்த பின்பு?

ஜெகத்ஜித் சிங், அதற்கெல்லாம் கூச்சப்படவே இல்லை. தனக்கு பைஜாமா நாடாவைக் கட்டி விடுவதற்கென்றும், அவிழ்த்து விடுவதற்கென்றும் தனியாக ஒருவரை வேலைக்கு வைத்துக் கொண்டார். அவர்தான் டிரவுசர் ஆபிசர்.

அந்த ஆபிசரின் பெயர் முஷாஹிப். தன் தலையாய பிரச்னையை எந்தவித தடங்கலுமின்றித் தீர்த்து வைக்கும் ஆபத்பாந்தவனாக இருந்ததால், ஜெகத்ஜித் சிங்குக்கு முஷாஹிப் மீது பிரியம் அதிகம். தான் எங்கு சென்றாலும் உடன் முஷாஹிப்பும் இருக்கும்படி பார்த்துக் கொள்வார். வெளிநாடுகளுக்குச் சென்றால்கூட. அந்தப்புரத்தில் சேவை செய்ய மற்றவர்கள் இருந்ததால், மகாராஜாவுக்கு முஷாஹிப் தேவைப்படவில்லை….

****

‘எவ்வளவுதான் தரமுடியும்?’

‘முப்பது ரூபாய்’

‘சரி, பணத்தைக் கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள்.’ என்று வியாபாரத்தை முடித்தார் ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாம் ஒஸ்மான் அலிகான்.

பதவிக்கு வந்ததும் அவர் செய்த முக்கியமான காரியம் இதுதான். ஆறாவது நிஜாம்  மெஹபூப் அலிகான் இறந்த பிறகு அவரது துணைவிகளை விற்றுவிட்டார். ‘எனக்கு ஆகவே ஆகாத தந்தை, சேர்த்துக் கொண்ட துணைவிகளுக்கெல்லாம் நான் ஏன் சோறும் சிக்கனும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்?’ என்ற எண்ணத்தால் நிகழ்த்தப்பட்ட சிக்கன நடவடிக்கை அது. சில துணைவிகளை விற்று, பணத்துக்குப் பதிலாக மாங்காய்களாகப் பெற்றுக் கொண்டார் என்றுகூட குறிப்புகள் இருக்கின்றன.

அநாவசியச் செலவுகளை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்ற சிந்தனையே ஒஸ்மானின் மனத்தில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மாறுபட்ட பரிமாணங்களே பல விஷயங்களில் கஞ்சத்தனமாக வெளிப்பட்டன.

‘நிஜாம், உங்கள் சால்வை மிகவும் பழசாகிவிட்டது. புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ளலாமே?’ என்றார் அமைச்சர் ஒருவர். அதற்கு ஒஸ்மான் அளித்த பதில், ‘எடுக்கலாம். ஆனால் நான் அதுக்கு பதினெட்டு ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறேன். புதிய சால்வை இருபது ரூபாய் ஆகிறதே.’

****

ங்கிலாந்து அரச பரம்பரையில் அதுவரை முடிசூட்டு விழா என்பது லண்டனில் மட்டும்தான் நடைபெற்றுவந்தது. ஜார்ஜும் 1911, ஜூன் 22ல் லண்டனில் முடிசூட்டிக் கொண்டார். ஆனால் இந்தியாவின் பேரரசராக இங்கு டெல்லி தர்பாரிலும் தனியாக முடிசூட்டிக் கொள்ள விரும்பினார். அவரது விருப்பத்துக்காக ராஜ பரம்பரை விதிகள் தளர்த்தப்பட்டன. ஜார்ஜுக்காகப் புதிய கீரிடம் ஒன்றைத் தயார் செய்யப்பட்டது.

லண்டனின் பிரபல நகை நிறுவனமான Garrard & Co-வினர் தயாரித்த அந்த கீரிடத்தின் மதிப்பு அறுபதாயிரம் பவுண்ட், எடை சுமார் ஒரு கிலோ. கீரிடத்துக்கு வைக்கப்பட்ட பெயர் Imperial Crown of India. 1911ல் டெல்லி தர்பாருக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகுதான் ஜார்ஜுக்கு ஒரு விஷயம் உறுத்த ஆரம்பித்தது.

இந்தியா, இந்துக்களும் இஸ்லாமியர்களும் நிறைந்த நாடு. அங்கு சென்று கிறிஸ்துவ மத முறைப்படி முடிசூட்டிக் கொள்வது முறையல்ல. வேறென்ன, செய்யலாம்?

ஒன்றும் செய்ய முடியாது. முடிசூடும் நாளும் வந்தது. டிசம்பர் 12, காலை நேரம். எந்தவித சடங்குகளும் இன்றி, கிங் ஐந்தாம் ஜார்ஜ் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டார். குயின் மேரியோடு தர்பாருக்குக் கிளம்பினார்.

****

‘அருமை மக்களே, மருவாதையா புள்ளைங்கள இஸ்கூலுக்கு அனுப்புங்கோ, இல்லாக்காட்டி ரெண்டு அணா அபராதம் கட்டணும். இது மகாராசாவோட உத்தரவு.’

பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் வாசம் வீச ஆரம்பித்தது. வருகைப் பதிவை அதிகரிக்க, அபராதக் கட்டணத்தை ஒரு ரூபாய் என்று உயர்த்தினார். அந்நாளில் எவ்வளவு பெரிய தொகை அது? அவ்வளவெல்லாம் அபராதம் கட்ட முடியுமா என்ன? எங்கே மகாராஜாவின் வீரர்கள் வந்து தங்களைக் கைது செய்துவிடுவார்களோ என்று பெற்றோர்கள் பயந்தார்கள். ‘ராசா நீ பள்ளிக்கூடத்துக்கே போயிருப்பா’ என்று பிள்ளைகளை வலுக்கட்டாயமாக அனுப்ப ஆரம்பித்தார்கள். பள்ளிக்கூட வளாகங்களில் ஓரொன் ஒண்ணு ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.

அடுத்த பிரச்னை. ‘பொம்பளப் புள்ளைக்கெல்லாம் படிப்பெதற்கு?’ மீண்டும் சாயாஜி ராவ் மிரட்டலைத்தான் முன்வைக்க வேண்டியதிருந்தது. ஆகவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே பரோடாவில் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.

இன்னொரு பிரச்னை. தீண்டாமை. ‘ஹரிஜன்களோடு எங்க பிள்ளைங்களும் சேர்ந்து படிக்கிறதா?’ சில சாதிக்காரர்கள் கூவ ஆரம்பித்தார்கள். பள்ளிக்கூடம் எல்லோருக்கும் பொதுவான இடம். எல்லா பிள்ளைகளும் அங்கு சேர்ந்துதான் படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் சாயாஜி ராவ். அவரது பகீரத பிரயத்தனங்களால், 1910ல் பரோடா சமஸ்தானம் முழுவதும் இயங்கிக் கொண்டிருந்த ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை 2938.

***

மான்க்டென் தலைமையிலான அணிக்கும், உள்ளூர் அணிக்கும் மேட்ச். மைதானத்தில் மக்கள் திரண்டிருந்தார்கள். உள்ளூர் பண்ணையார் ஒருவரது மகளான அவளும் வந்திருந்தாள். மைதானத்துக்குள் மான்க்டென் ‘டாஸ்’ போட்டுக் கொண்டிருக்க, அவரது அணியில் இடம்பெற்றிருந்த கூச் பிகாரின் மகாராஜா ஜெகத்திபேந்தர் அவளுக்கு ‘ரோஸ்’ கொடுக்கலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தார். டாஸில் வென்ற மான்க்டென், ‘பேட்டிங்’ என்றார். ஆனால் ஜெகத்திபேந்தரின் கண்களில் ‘டேட்டிங்’ கனவுகள்.

மான்க்டெனும் இன்னொரு வீரரும் களமிறங்கினார்கள். ஜெகத்திபேந்தர் அணியின் முக்கிய பௌலர். பேட்டிங் வரிசையில் நம்பர் ஒன்பது. ஆகவே மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார். ஒவ்வொரு வீரராக அவுட் ஆகிக் கொண்டிருந்தார்கள். ஓரளவு போராடி ஆடிய மான்க்டெனும் அவுட்டாகி வந்து அமர்ந்தார். நான்கு விக்கெட்டுகள் சரிந்திருந்தன. ‘எங்கே கூச்?’ (ஜெகத்திபேந்தரை ஐரோப்பியர்கள் செல்லமாக அழைப்பது அப்படித்தான்.) தேடினார் மான்க்டென். ‘இங்கேதான் எங்காவது இருப்பார். வந்துவிடுவார்’ என்றார் ஒரு வீரர்.

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன. மான்க்டெனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. தானே கூச்சைத் தேட ஆரம்பித்தார். ‘அடுத்து அவர்தானே களமிறங்க வேண்டும். எங்கே போய்த் தொலைந்தார்?’ வெளியில் சென்று தேடுவதற்காக சிறுவன் ஒருவனை அனுப்பினார்.

அந்தச் சிறுவன் வருவதற்குள் ஒன்பது விக்கெட்டுகள் விழுந்திருந்தன. கடைசி பேட்ஸ்மேன் கூச்சுக்காக எல்லோரும் காத்திருந்தார்கள். மான்க்டெனுக்கு ரத்தக் கொதிப்பு ஜிவ். ‘எங்கடா அவரு?’

பதில் சொல்லத் தயங்கினான் சிறுவன். அவன் முகமெல்லாம் சிவந்திருந்தது. வெட்கம் வழிய சிரிக்கவேறு செய்தான். ‘அவரு அங்க ஒரு வீட்டுல, மேல் மாடியில..’

‘மேல் மாடியில?’

‘அது வந்து.. அவரு.. பண்ணையாரு பொண்ணுகூட…’

****

அகம், புறம், அந்தப்புரம். குமுதம் ரிப்போர்ட்டரில் எழுத ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. இதோ இன்று, வெள்ளிக்கிழமை வெளியாகிருக்கும் (25-12-2008) ரிப்போர்ட்டர் இதழில் 150வது அத்தியாயம் வெளியாகியிருக்கிறது. ஆகவே ‘மலரும் நினைவுகளாக’ மேலே சில பகுதிகளைக் கொடுத்துள்ளேன்.

பரோடா, அல்வார், கூச் பிகார், பாட்டியாலா, பரத்பூர், ஹைதராபாத், நபா, தோல்பூர், இந்தூர், கபுர்தலா, புதுக்கோட்டை, குவாலியர், ஜுனாகத் (மேலும் சில) சமஸ்தானங்களின் வரலாறை, மகாராஜாக்களின் வாழ்க்கையைத் திரட்டித் தந்துள்ளேன். அதன் ஊடாக விவரிக்கப்பட்ட பின்னணி விஷயங்கள் ஏராளம். சுருங்கச் சொல்வது இயலாது.

இப்போது மைசூர் மகாராஜாக்களின் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் சில முக்கியமான சமஸ்தானங்களின் வரலாறு காத்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரின் பின்னணியில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை பிறிதொரு சமயம் பதிவு செய்கிறேன்.

தொடர்ந்து ஆதரவளித்துவரும் வாசகர்களுக்கு என்றும் என் மனமார்ந்த நன்றி.

கவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் கவனத்துக்கு

சுஜாதா, பா.விஜய் மற்றும் பலர்

எனது முதல் புத்தகத்தை வெளியிட்டவர் யார்?

எனக்கு சுஜாதா அனுப்பிய பதில்

டிசம்பர் 11க்கான எனது கட்டுரை.

(மேலுள்ளவற்றில் எந்தத் தலைப்பு உங்களை ஈர்க்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கவும். சுருங்கச் சொன்னால் நான் எனது முதல் கவிதைப் புத்தகத்தை வெளியிட்ட அனுபவம் இந்தக் கட்டுரை. சற்றே பெரியது.)

பருவ வயது மாணவன் அல்லது மாணவியின் நோட்புக்கை அல்லது உட்கார்ந்திருக்கும் டெஸ்க்கைப் பாருங்கள். குறிப்பாக கடைசி பக்கம். ஏதாவதொரு சினிமாவின் பாடல்வரி அல்லது சொந்தத்தில் எழுதிய சில வரிகள் இருக்கும். ஒன்றன் கீழ் ஒன்றாக வார்த்தைகளை உடைத்து எழுதி யிருந்தால் அது கவிதை என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும்.

நானும் அப்படிப்பட்ட கவிஞனாகத்தான் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். சில டைரிகளில் என்னுடைய சமூகக் கோபங்கள், ஏக்கங்கள், தேசப்பற்று,  அப்புறம் பருவப்பற்று எல்லாமே மோனை தப்பாத வார்த்தைகளில் அடுக்கடுக்கு வரிகளில் ‘கவிதையாக’த் தவழ்ந்தன. அந்தப் பாவத்தில் வைரமுத்துவுக்குப் பெரும்பங்கு உண்டு. (என்னைப்போல பலரும் தங்களைக் கவிஞர்களாக உருமாற்றிக் கொண்டு உருவகப்படுத்திக் கொண்டு திரிவதற்குக் காரணமும் அவர்தான் என்றே நினைக்கிறேன்.)

பத்தாம் வகுப்பில் நான் படித்த தூத்துக்குடி செயின்ட் சேவியர்ஸ் பள்ளியில் நடந்த ஒரு கவிதைப் போட்டியில் எனது நண்பன் மைக்கேல் ஞானராஜ் முதல் பரிசு பெற்றான். என்னைவிட அவன்  எதுகை, மோனைகள் நன்றாகப் போடுவான், கூடவே கையெழுத்தும் அழகாக இருக்கும். ஆகவே என்னுடைய மாடர்ன் ஆர்ட் கையெழுத்தில் எழுதப்பட்ட கவிதைக்கு இரண்டாம் பரிசே கிடைத்தது. அதற்கே வானத்தில் மிதந்தேன், இந்தச் சமூகம் என்னையும் ஒரு கவிஞனாக அங்கீகரித்துவிட்டது என்று.

கல்லூரியில் எனது கவிதை வேட்கைக்கு வெறித்தனமாகத் தீனி போட்டார்கள். ‘கோவில்பட்டியில்  ஒரு கவிதைப்போட்டி. நீ போயிட்டு வா. தலைப்பு இதுதான் – சும்மா கிடைத்ததா சுதந்தரம்! காலேஜ் ஆபிஸ்ல சொல்லி பணம் வாங்கிக்கோ. ஆல் தி பெஸ்ட்’ – ஆர்வமாகக் கலந்துகொள்வேன். பல போட்டிகளுக்கு கவிதை எழுதி தபாலில் அனுப்ப வேண்டியதிருக்கும். செய்திருக்கிறேன். வாங்கிய பரிசுகள் வெகுசிலவே. இருந்தாலும் வெளிஉலக, மேடை அனுபவங்களைச் சம்பாதித்தேன். அந்தச் சமயங்களில் என்னை நம்பி ஊக்கப்படுத்திய பேராசிரியர் (அமரர்) நம்பி நாராயணனுக்கு என் வணக்கங்கள்.

பிஎஸ்சி கெமிஸ்ட்டிரி, எம்எஸ்சி தகவல்தொழில்நுட்பம் – ஐந்து வருட கல்லூரி காலம். வகுப்பை  கட் அடிக்க மாட்டேன். ஆனால் என் நோட்டுகளில் கவிதை என்ற பெயரில் ஏதாவது நிரம்பிக் கொண்டே இருக்கும். என் கவிதைகளை ரசிக்க, ஊக்கப்படுத்தும் விதத்தில் நண்பர்களும் கிடைத்தார்கள். இடைப்பட்ட ஒரு வருடத்தில் எனது வ.உ.சி கல்லூரியின் பொன்விழா வந்தது. பல்வேறு விஷயங்களைக் கொண்டு கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். எனது கவிதைகளைக் காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. தெர்மாகோல், ஸ்கெட்ச், சார்ட், க்ரையான் சகிதமாக நண்பர்கள் என் கவிதைகளுக்காக பல இரவுகள் உழைத்தார்கள்.

காட்சிப்படுத்தினேன். கருத்துகளை எழுத நான் வைத்திருந்த நோட்புக் நிரம்பியது. பலர் நேரடியாகவே பாராட்டினார்கள். பிறவியிலேயே கண் தெரியாத ஒரு மனிதனின் மன உணர்வுகள் எப்படி இருக்கும் என்றொரு கவிதை எழுதியிருந்தேன். அப்படிப்பட்ட ஒரு சகோதரி அங்கு வந்தார்கள். நானே அந்தக் கவிதையை வாசித்துக் காண்பித்தேன். ‘என்னோட உணர்வுகளை எப்படி நீங்க சரியாப் புரிஞ்சுக்கீட்டிங்க?’ – அந்தச் சகோதரி நெகிழ்வுடன் கேட்டார்கள். இதுவரை நான் பெற்றதிலேயே மிகப்பெரிய பாராட்டு அது. ‘நீங்க கவிதை புக் போட்டிருக்கீங்களா?’ – நிறைய விசாரிப்புகள். இன்னும் ஒரே வருடத்தில் சொந்தக் காசிலேயே (அதாவது அப்பா காசில்)  கவிதைப் புத்தகம் போட வேண்டுமென்ற ‘வேட்கை’ வேர்பிடித்து வளர்ந்தது.

விகடன் மாணவ நிருபராக ஒரு வருடம் பணியாற்றிய தெம்பு வேறு. எம்எஸ்சி முடித்துவிட்டு ( 2002 செப்டெம்பர்) நண்பர்களோடு தூத்துக்குடியில் வணிக நிறுவனங்களுக்கான சிறு சிறு ப்ரா ஜெக்ட்டுகள் மட்டும் செய்துகொண்டு இருந்தேன். அப்போதுதான் அந்த ஆபரேஷனை ஆரம்பித்தோம்.

எழுதுவதை ஊக்கப்படுத்துவதில் எனது அப்பாவுக்கு நிகர் வேறு யாரும் கிடையாது. பைனான்ஸ்  பண்ண ‘ரெட்டை ரெடி’ என்றார்கள். யாருக்கு கிடைக்கும் இப்படி ஓர் அப்பா? கவிதை எழுதுவதற்காக நான் பயன்படுத்திய பெயர் ‘முகில்’ – என் அன்புச் சகோதரி அகிலா வைத்த பெயர். நண்பர்கள் எனது  கவிதைகளை எல்லாம் படித்து ‘தரமான’ கவிதைகளை தேர்ந்தெடுத்தார்கள். பார்த்திபனின் கிறுக்கல்கள் வடிவமைப்பு எங்களை மிகவும் பாதித்திருந்தது. அதே மாதிரி ஒரு புத்தகம் போட எவ்வளவு செலவாகும் என்று விசாரித்துவிட்டு, சோடா குடித்தோம். இருந்தும் மயக்கம் தெளியவில்லை.

கவிதைகள் அடங்கிய டம்மி பிரதிகள் சிலவற்றை சில விஜபிக்களுக்கு அனுப்பினேன். அணிந்துரை இல்லாவிடில் அது என்ன கவிதைப் புத்தகம்? தாமரை மணாளன், தென்கச்சி சுவாமிநாதன், பா.  விஜய் – அணிந்துரை தந்தார்கள்.

ஏதாவது வித்தியாசமாகச் செய்தால்தான் நம் புத்தகத்துக்கென்று ஓர் அடையாளம் கிடைக்கும்.  என்ன செய்யலாம்? நண்பர்கள் மீட்டிங். என் வீட்டு மாடியில்தான் பொதுவாக நிகழும். காரணம்  என் வீட்டில் மட்டுமே அப்போது சிஸ்டம் உண்டு, டயல்-அப் நெட் இணைப்புடன். புத்தகத்துக்கான தலைப்பு முடிவானது. ஆ…

சரி பதிப்பகத்தின் பெயர்? நான், அருள், கோமதி நாயகம், ராஜவேல், பேச்சியப்பன், ஆனந்த்,  சொக்கலிங்கம், முருகேஷ் – ஆகியோர் அடங்கிய நண்பர்கள் குழுவுக்கு நாங்கள் வைத்திருந்த  பெயர் Beats. அதுவே பதிப்பகத்தின் பெயரானது – துடிப்புகள் பதிப்பகம். அலுவலகம், தொலைபேசி எண் எல்லாம் எனது வீட்டினுடையதே.

‘நாம டூ-இன்-ஒன் புக் போடுவோம். ஒண்ணுதான், ஆனா ரெண்டு. ஆ… உணர்வுகளைக் காதலி ப்பவர்களுக்குன்னு ஒரு அட்டையில் இருக்கணும். அதுக்குள்ள போனா எல்லாம் சமூக, பொது  கவிதைகள். அதே புக்கை அப்படியே புரட்டி, 180 டிகிரி சுத்துனா இன்னொரு முகப்பு அட்டை. ஆ…  காதலை உணர்ந்தவர்களுக்கு அங்க இன்னொரு தலைப்பு. அந்த அட்டை வழியா உள்ளபோனா எல்லாமே காதல் கவிதைகள். ரெண்டு பகுதிகளுமே சந்திக்கிற நடுப்பக்கத்துல ஏதாவது வித்தியாசமா செஞ்சுக்கலாம்.’

ஆ... புத்தகம்
ஆ... புத்தகம்

அடுத்தது கவிதைகளுக்கான போட்டோ. எனது எம்எஸ்சி அன்புத்தோழி குமுதா (இப்போது சென்னை  ஹலோ எஃப்எம்மில் குல்ஃபி விற்றுக் கொண்டிருக்கிறாள்) புகைப்பட நிபுணி. அவளை அழைத்துக் கொண்டு எனது ஊர் சுற்றுவட்டாரங்களில் திரிந்தேன். சில புகைப்படங்கள் எடுத்தோம். ‘புத்தகத்தை நம்மளே டிசைன் பண்ணிட்டா செலவு மிச்சம்.’ நண்பன் அருள் ஐடியா கொடுத்தான்.  யாரங்கே, ஃபோட்டோஷாப்பையும் பேஜ்மேக்கரையும் இன்ஸ்டால் செய்யுங்கள். ‘ஐடியா கொடுத்த அன்பு நண்பா, உனக்கு தமிழ் டைப்பிங் தெரியுமல்லவா. வா, வந்து அடி!’

தன் மௌஸே தனக்குதவி – நான் ஃபோட்டாஷாப்புக்குள் புகுந்து மௌஸைத் தேய்க்க ஆரம்பித்தேன். சில நாள்களில் பேஜ் டிசைனராக எனக்கு நானே பதவி உயர்வு கொடுத்துக் கொண்டேன். வேறுவழியில்லை. ஆ புத்தகத்திற்கான அட்டை முதற்கொண்டு நான்தான் டிசைன் செய்தேன் என்பதெல்லாம் சரித்திரம். (குறிப்பு : அப்போது நான் RGB, CMYK, Resolution இந்த  மூன்று அதிஅத்தியாவசியமான வார்த்தைகளைக் கேள்விப்பட்டதுகூட கிடையாது.)

எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். ‘அய்யா நான் ஒரு கவிதைப் புத்தகம் போடவிருக்கிறேன். அதன் தலைப்பு ஆ. நீங்களும் அப்படி ஒரு புத்தகம் போட்டிருக்கிறீர்கள். ஆட்சேபணை ஏதுமுண்டா?’ பதில் வந்தது. ‘நல்லது. தாராளமாகப் போட்டுக் கொள்ளவும். தயவு செய்து எனக்கு காப்பி அனுப்ப வேண்டாம்.’

அருகிலிருந்த சிவகாசி, கோவில்பட்டி, திருநெல்வேலி போன்ற ஊர்களுக்குச் சென்று ஒவ்வொரு பிரஸ் ஆக ஏறி இறங்கினோம். எஸ்டிமேட் வாங்கி வந்தேன். இறுதியாக கோவில்பட்டியில் ‘ஒரிஜினல் பிரிண்டிங் பிரஸ்’ஸைத் தேர்ந்தெடுத்தோம். ‘தம்பி, எத்தனை புஸ்தகம்? எத்தனை பக்கம்?  பேப்பர் என்ன வேணும்? அட்டை ஆர்ட் போர்டா, எத்தனை ஜிஎஸ்எம்? சிவகாசியில அடிச்சிடலாம். உள்ள மல்டி கலர் வரணும்னா ஒரு பாரத்துக்கு இவ்வளவு வரும். பைண்டிங் இங்கயே  செஞ்சுடலாம்.’ எல்லாம் கேட்டுத் தெளிவாகிவிட்டு ஒரு எஸ்டிமேட் போட்டுக் கொடுத்தார் முருகேசன் அண்ணாச்சி. ஒரு புத்தகம் பற்றிய அடிப்படை விஷயங்கள் பிடிபட ஆரம்பித்தன.

சுமார் ஒரு வாரகாலம். கிட்டத்தட்ட தினமும். நானும் நண்பன் சொக்கலிங்கமும் கோவில்பட்டிக்கு ஒரிஜினலுக்கு அலைந்தோம். கையில் கவிதைகள், பேஜ் டிசைன்கள், அட்டை எல்லாம் அடங்கிய பிளாப்பிகள், சிடிக்கள். எங்களது வித்தியாசமான (அல்லது புரிந்துகொள்ளமுடியாத)  முயற்சியைக் கண்டு மெய்சிலிர்த்து (அல்லது தலைசுற்றி) அந்த பிரஸ்காரர்கள் ஒரு சிஸ்டத்தையே எங்களிடம் கொடுத்துவிட்டார்கள். நானும் சொக்கலிங்கமும் ஃபாண்ட் பிரச்னை முதற்கொண்டு எல்லாவற்றையும் தீர்த்து புத்தகத்தை ஃபைனல் செய்தோம். ஆயிரம் புத்தகங்கள். அச்சாக  ஆரம்பித்தன.

வெறிகொண்டு முதல் புத்தகத்தைக் கொண்டு வருபவனுக்கு வெளியீட்டு விழா நடத்த ஆர்வமிருக்காதா? அப்பாவின் விருப்பமும் அதுவே. பிறகென்ன, நடத்திவிட்டால் போச்சு. வ.உ.சி. கல்லூரி அதற்கும் இடமளித்தது. ஹாலை இலவசமாகக் கொடுத்தது. யாரெல்லாம் சிறப்பு விருந்தினர்கள்? பலரை யோசித்து, பலரிடம் கேட்டு, சிலர் முடிவானார்கள். தாமரை மணாளன், தமயந்தி, ஏபிசிவி சண்முகம், குமரிக்கண்ணன், மகாதேவன். இவர்கள் எல்லோருமே புத்தகத்தைப் பெற்றுக் கொள்பவர்கள். சரி வெளியிடுபவர்?

அழைப்பிதழ்
அழைப்பிதழ்

அதில்தான் ஒரு சஸ்பென்ஸை வைத்தோம். விழாவுக்கான அழைப்பிதழ் முதற்கொண்டு எதிலுமே அவரது பெயரைக் குறிப்பிடவில்லை. கவிதைப் பிரபஞ்சத்தின் பிதாமகன் என்று மட்டும் ஒரு குறிப்பு கொடுத்தோம். விழாவுக்கான விருந்தினர்களிடம்கூட சொல்லவில்லை. எனது வீட்டில் அப்பா,  அம்மா, உறவினர்களிடம்கூட சொல்லவில்லை. எனது நண்பர் பட்டாளம் மட்டுமே அறிந்த ரகசியம் அது. சுற்றுவட்டாரத்தில் பல இடங்களில் அழைப்பிதழைத் தாராளமாகப் பட்டுவாடா செய்தோம். (அழைப்பிதழையும்கூட விட்டுவைக்கவில்லை. அதிலும் வித்தியாசம். நான், அழைப்பிதைப் பெற்றுக் கொள்பவருடன் பேசுவதுபோன்ற உரையாடலிலேயே வடிவமைத்தேன்.)

விழா நாள் (2003, பிப்ரவரி 2, ஞாயிறு). மேடையின் பின்புறம் மிகப்பெரிய துணி. அதில் எல்லா  உயிர் எழுத்துகளும் சிதறிக் கிடக்க, நடுவில் பிரமாண்டமாக ஆ. கீழே ஒரு பாரதியார் படம்.  வருபவர்களுக்கு நினைவுப்பரிசாகக் கொடுக்க, ‘ஆ’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு கண்ணாடிப்பெட்டி. காலையில் செம மழை. ‘ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ…’ என்று நான் வீறுகொண்டு பாடிவிடுவேனோ என்ற பயத்திலேயே மழை சற்றுநேரத்தில் நின்றது.

விழாவில் மைக்கேல்
விழாவில் மைக்கேல்

எதிர்பார்த்ததைவிட அரங்கில் கூட்டம். எல்லாம் வித்தியாசமான அழைப்பிதழ் செய்த வேலை.  ஒவ்வொருவராகப் பேசினார்கள். யார் புத்தகத்தை வெளியிடப்போகிறார்கள் என்று எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு. எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்று எனக்குள் படபடப்பு. விஐபியை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று தேடக்கூட செய்தார்கள். புத்தக வெளியீட்டு நேரம். தொகுப்பாளர் சங்கரேஸ்வரன் என்ற நண்பர் புத்தகத்தை  வெளியிடப்போகும் நபர் பற்றி சூடுபறக்கப் பேசி ஆவலைத் தூண்டினார். அவருக்கும்கூட அது யாரென்று தெரியாது.

அப்போது அரங்கத்தில் ஒரு வாசல் வழியே பிரசன்னமானார் மகாகவி. ஆரவாரம். கைதட்டல்.  வந்து ‘ஆ’வை எடுத்து வெளியிட்டார். ஆனந்தக் கண்ணீர் நிமிடங்கள். …தன் மகனை சான்றோன்  என.. அதுவும்தான்.

மகாகவி புத்தகத்தை எடுத்து மேடையிலுள்ள அனைவருக்கும் கொடுக்க வேண்டும். ஆனால் மேடையேறிய பாரதியாருக்கு அவ்வளவு கூட்டத்தைப் பார்த்ததும் அந்தக் கணத்திலிருந்தே கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. ‘டேய் கோமதிநாயகம், உன் கை நடுங்குதுடா. மானத்தை வாங்கதடா!’ – அவனது காதில் கிசுகிசுத்தேன். பிரயோசனமில்லை. பாரதிக்குரிய கம்பீரத்தை எல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு மெள்ள கீழிறங்கிப் போனான் நண்பன் கோமதி நாயகம்.

(இன்று டிசம்பர் 11. மகாகவியே, உமது ஜனன நாளில் கோமதி நாயகத்தை மன்னித்துவிடவும். இப்போது அவன் புள்ளகுட்டிக்காரன். வெளீயிட்டுவிழாவில் பாரதியைக் காண இங்கே க்ளிக்கவும்.)

கவர் ஸ்டோரி உருவாக்குவது எப்படி?

பிரபல வாரமிருமுறை பரபரப்பு பத்திரிகையின் ஆசிரியர் அறை. கொஞ்சம் சூடாகவே இருக்கிறார் ஆசிரியர். ‘சீனியர் புறா’, ‘சுவாமி சுனாமியானந்தா’ என்ற புனைப் பெயரில் எழுதும் இரு உதவி ஆசிரியர்கள் அவர் முன் அமைதியாக பவ்யமாக உட்கார்ந்திருக்கிறார்கள்.

ஆசிரியர் : போன நாலு இஸ்யூல நம்ம சர்க்குலேஷன் பத்து சதவிகிதம் குறைஞ்சிருக்கு. நம்ம போட்டி பத்திரிக்கைக்கு ஏழு சதவிகிதம் கூடியிருக்கு. இப்படியே போனா ஊத்திக்கும். எல்லாரும் வேற எங்கேயாவது வேலை கிடைக்குமான்னு தூண்டில் போட வேண்டியதுதான். நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோன்னு எனக்குத் தெரியாது. பத்திக்குற மாதிரி ஒரு மேட்டரை கெளப்பி விடுறீங்க. அந்த மேட்டரை வைச்சே இன்னும் ஏழெட்டு இஸ்யூவோட கவர் ஸ்டோரியை காரசாரமா பண்ணிடனும். விட்ட சர்க்குலேசனை கிச்சுன்னு ஏத்தணும். எந்த அரசியல்வாதி வாயைப் புடுங்குறீங்களோ, இல்ல எந்த நடிகையை சர்ச்சையில மாட்டி விடுவீங்களோ, எந்த கிளுகிளு சாமியாரை உருவாக்குவீங்களோன்னு எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு மணி நேரத்துல என் டேபிள்ல சூட்டைக் கெளப்புற கவர் ஸ்டோரி இருக்கணும். நீங்க போகலாம்.

கொஞ்சம் கிறுகிறுக்கும் தலையுடன் வெளியே வரும் சுனாமியும், புறாவும் பேப்பர் பேனாவுடன் சென்று ஒரு டேபிளில் அமர்கின்றனர். ஐந்து நிமிட மௌனத்துக்குப் பிறகு.

சுனாமி : ஆங்.. ஐடியா. நம்ம அரசியல்வாதி கால்’வாய்’ கண்ணாயிரத்துக்கு போனைப் போடு. அவங்கிட்ட எதையாவது போட்டு வாங்கலாம். அதை வைச்சு ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கிரலாம்.

(புறா போனை டயல் செய்து ரிஸீவரைத் தர)

சுனாமி : அண்ணே வணக்கம்னே.. நாந்தான் சுனாமி பேசறேன். சுகம்தானா?

கால்வாய் : வணக்கம்வே! என்னவே போனமொற நம்ம பத்திரிக்கையில நம்ம கட்சிக்காரப்பயலைப் பத்தி இப்படி கண்டதும் எழுதிப்புட்ட! நானே உனக்கு பூசை போடணும்னு நெனைச்சுக்கிட்டு இருந்தன்! நீயா வந்து வசமா சிக்கிக்கிட்டவே!

சுனாமி : என்னண்ணே நீங்க. என்னப் போயி சந்தேகப்படுறீங்களேண்ணே! நான் நீங்க வெட்டிப் போட்ட நகத்துல இருக்குற அழுக்கைப் பத்திக் கூட தப்பா எழுத மாட்டேன், உங்களுக்குத் தெரியாதாண்ணே! அது ஒரு புது ரிப்போர்ட்டர் பய செஞ்ச வேலைண்ணே! போன வாரம் நான் லீவுண்ணே! அதான் என்னை மீறி இப்படி ஆயிடுச்சுண்ணே! பாத்தீங்களாண்ணே, எம்புட்டு விசுவாசமுள்ள என்னைப் போயி..

கால்வாய் : அதானப் பாத்தேன். சரி விடுவே! இப்ப என்னவே விசேஷம்?

சுனாமி : அதை நீங்கதாண்ணே சொல்லணும். நேத்து மொளச்ச பயலுக திமிரா எகத்தாளமா ஏதாவது ஏடாகூட அறிக்கை விட்டுக்கிட்டு தலைப்புச் செய்தி ஆக்கிட்டு இருக்காணுங்க! உங்க பவரை நீங்க காட்ட வேணாமாண்ணே!

கால்வாய் : இப்ப என்ன பண்ணனுங்கற?

சுனாமி : புதுசா அந்த நடிகரு ரமணராஜ் கட்சி தொடங்கியிருக்காரே அவரு உங்ககூட கூட்டணி வைக்க தொங்கிக்கிட்டு இருக்கறதா பேச்சு அடிபடுதே, உண்மையாண்ணே?

கால்வாய் : சும்மாக் கெடவே! அவன் நம்ம சாதிக்காரப் பய. அரசியல்ல பழம் தின்னு கொட்ட போட்டவன் நான். ஒரு மருவாதைக்கு தேடிவருவான்னு நெனைச்சேன். இதுவரைக்கும் வரல. எலெக்ஷன் வரும்ல அப்ப பாத்துக்கலாம்.

சுனாமி : சரிங்கண்ணே. நீங்க ரொம்ப பிசியா இருப்பீங்க. தொந்தரவுக்கு மன்னிச்சுக்கோங்கண்ணே! வைச்சிடுறேன். (போனை கட் செய்து விட்டு, புறாவிடம்) செம மேட்டர் கிடைச்சுடுச்சு. டைட்டில் இதுதான். ‘தலைகணத்தில் தடுமாறுகிறாரா ரமணராஜ்?!’ – தலைவர்கள் அதிருப்தி. எப்படி?

புறா : அப்படிப்போடு. இதை அப்படியே விடக்கூடாது. இன்னும் கெளறி விடலாம். கொஞ்சம் இருங்க. (ஒரு எண்ணை டயல் செய்கிறார்.) வணக்கம். நான் புறா பேசுறேன். புரட்சி லீடர் ரமணராஜ் இருக்காருங்களா.

எதிர்முனை : வணக்கம். வணக்கம். நான் லீடரோட செகரட்டரி லிங்கம்தான் பேசறேன். லீடர் ஹைதராபாத் ஷூட்டிங் போயிருக்காரு. என்ன விஷயம்ணு சொல்லுங்க. எதுவும் முக்கியம்னா நான் லீடர்கிட்ட கேட்டுச் சொல்லுறேன்.

புறா : என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க? அந்த சாதிக் கட்சித் தலைவர் ‘நம்ம லீடருக்கு பணிவே கெடையாது. அவுத்த வுட்ட ஜல்லிக்கட்டு காளை மாதிரி திமிறிக்கிட்டு அலையறாரு. மக்கள் மூக்கணாங்கயிறு போட்டுருவாங்க’ன்னு இஷ்டத்துக்கு அறிக்கை விட்டிருக்காரு. நீங்க என்னடான்னா ஒண்ணும் நடக்காத மாதிரி கேக்கறீங்க?

எதிர்முனை : அப்படியா! எதுல சொன்னாரு. எனக்கு ஏதும் நியூஸ் வரலியே?

புறா : அவரோட சேனல்லதான் சொன்னாருங்கிறேன். அதுபோக இப்பத்தான் அவரை பேட்டி எடுத்தோம். அதுலயும் நம்ம லீடரை இப்படியெல்லாம் பேசிப்புட்டாரு. மனசு கேக்கல. அதான் உங்க காதுல விசயத்தைப் போட்டுட்டு, அப்படியே லீடர்கிட்ட கருத்து வாங்கிடலாம்னுதான் போனைப் போட்டேன்.

எதிர்முனை : லீடர் ஷூட்டிங் முடிச்சுட்டு, தன் பையன் பொறந்த நாளை சித்தூர் பக்கத்துல உள்ள ஒரு கோயிலுக்கு போய் கொண்டாடிட்டு நாலு நாள் கழிச்சுத்தான் சென்னைக்கு வர்றாரு. அப்ப லீடர் கண்டிப்பா நேரம் ஒதுக்கிப் பேசுவாரு.

புறா : ரொம்ப நல்லது சார். (போனை கட் பண்ணி விட்டு) மேட்டரை டெவலப் பண்ணிக்கோங்க.. ‘ஆந்திரா பக்க்கத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் ரமணராஜ் ரகசிய யாகம்! நரபலி கொடுத்தது உண்மையா?’ எப்படி.

சுனாமி : சூப்பரப்பு.

புறா : ஆனா மேட்டர்ல பரபரப்பு இருக்கு. ஆனா கிளுகிளுப்பே இல்லையே. என்ன பண்ணலாம்?

சுனாமி : எதாவது நடிகையை இழுத்து உட்டுடலாம். பரபரப்பு + கிளுகிளுப்பு. நாமளும் பேஜ் லே-அவுட்டை கவர்ச்சியா பண்ணலாம்.

புறா :  இந்த இஸ்யூக்கு இது தாங்கும். அடுத்த இஸ்யூக்கு நடிகை கிஷிதாவை கிள்ளி உட்டுருவோம்.

சுனாமி : எப்படி?

புறா : ‘டேட்டிங்’ பத்தி ஏதாவது கேப்போம். அது தமிழ் தெரியாம ஏதாவது உளறி வைக்கும். ‘டேட்டிங் போவது பெண்களின் கடமை’ன்னு நியூஸ் ஆக்கிருவோம். அப்புறம் கொடும்பாவி எரிப்பாங்க. கேஸ் போடுவாங்க. ஆர்ப்பாட்டம் நடத்துவாங்க. ‘டேட்டிங்’குக்கு ஸ்பெல்லிங் தெரியாதவனுங்க கூட தெனாவெட்டா அறிக்கை உடுவாங்க.

சுனாமி : இப்படி ஒரு பிரச்னையைக் கெளப்பி விட்டா கண்டிப்பா கால்வாய் ‘கலாசாராம் காராச்சேவு’ன்னு கொதிச்சு எழுவாரு. ஆனா கிஷிதா நம்ம ரமணராஜோட தொடர்ந்து மூணு படம் சோடி கட்டிட்டு வர்ற நடிகை. அதனால ரமணராஜ் வேற வழியில்லாம படத்துல இருந்து கிஷிதாவைத் தூக்கிக் கெடாச வேண்டியது வரும்.

புறா : இதை அப்படியே விடலாமா, எவனாவது இந்த கேப்ல நெட்ல கிஷிதா மூஞ்சை மார்ஃப்பிங் பண்ணி ஏதாவது கிளுகிளு போட்டாவை விடுவான். உடனே கிஷிதாவுக்கும் சர்வதேச கொலைகாரன் அமாம் உபருல்லாக்கும் தொடர்பிருக்குன்னு தெரிஞ்சதாலதான் ரமணராஜ் தன்னோட படத்துல இருந்து தூக்குனாருன்னு ஒரு கவர் ஸ்டோரி பண்ணிடலாம்.

சுனாமி : இதுல ஏதாவது சாமியாரை இழுத்து விட்டுட்டோம்னா இன்னும் கனலா இருக்கும்.

புறா : அவ்ளோதான. ‘முழியாங்கண்ணன்பட்டி மயிர் சாமியார்’னு ஒரு கேரக்டரை உள்ள நுழைச்சுருவோம். இந்த சாமியார்கிட்டதான் அமாவாசை அன்னிக்கு நைட்டோட நைட்டா போயி ரமணராஜ் மயிர் ஜோசியம் பாத்தாரு. அவரோட மயிர் அமைப்புப்படி அவருக்கு முன்னந்தலைல மூணு சென்டி மீட்டருக்கு சொட்டை விழுந்துருக்கறதால அவரு கட்சியோட பேரை மாத்தணுமாம். ‘க’ எழுத்துல பேரு ஆரம்பிக்குற அரசியல்வாதிங்க கூட கூட்டணி வெச்சுக்கக்கூடாதாம். அதுக்கு பரிகாரமா அடுத்த அமாவாசைக்கு 108 வழுக்கைத் தலையர்களுக்கு விக் தானம் பண்ணப் போறாராம். அதுக்காக 108 சொட்டை மண்டைங்கள கட்சிக்காரங்க மும்முரமா தேடிக்கிட்டு இருக்காங்களாம். எப்படி நம்ம நியூஸ்?

சுனாமி : அந்த முடி சாமியார் மேல நாலு கேஸ் இருந்தாத்தான் மேட்டர் வெயிட்டா இருக்கும். எப்படியாவது தோண்டித் துருவி அந்த சாமியார் மேல கேஸைக் கொண்டு வந்துரலாம். அதுவும் சுண்டக் கஞ்சி கடத்தல் கேஸ் ஏதாவது இருந்தா கலக்கலா இருக்கும்.

புறா : சாமியார் கூட ‘சுண்டக் கஞ்சி கடத்தல்’ல தொடர்பு வைச்சிருந்த அழகின்னு எவளாவது அடுத்து சிக்காமலா இருப்பா. ‘சுண்டக் கஞ்சி கடத்தல் தேவதை’யோடு தொடர்புடைய அரசியல்வாதிகள்னு எல்லாக் கட்சியில இருந்தும் வந்து தானா பட்சிங்க சிக்குவாங்க.

புறா : இப்படியே போனா அடுத்த சட்டசபைத் தேர்தல் வர்ற வரைக்கும் கவர் ஸ்டோரிக்கு தட்டுப்பாடே வராது. கலக்கிப்புடலாம்.

சுனாமி : சரி சரி. நான் ஸ்டோரியை எழுதுறேன். நீ போய் முன் அட்டையையும், போஸ்டரையும் லே அவுட் பண்ண ஆரம்பி. ஏதாவது போட்டோ தேறுதான்னு பார்ப்போம். எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி கெளப்பி விட வேண்டியதுதான்.

புறா : சூப்பரு. இந்த இஸ்யூ சர்குலேசன் ஓஹோதான்.  நீ எடிட்டர்கிட்ட ஓ.கே. வாங்கிடு. நான் லே-அவுட்டுக்குப் போறேன்.

(லொள்ளு தர்பார் – கிழக்கு வெளியீடு)