செ.பு.கா.நா.வா.பு.

எந்தப் புண்ணியவான் என்ன காரணத்துக்காக ஆரம்பித்து வைத்தானோ தெரியவில்லை. பலரும்  செய்கிறார்கள். ஆகவே நீண்ட யோசனைக்குப் பிறகு நானும் அதைச் செய்வதாக முடிவெடுத்து  துணிந்து இறங்கிவிட்டேன். என்ன நோக்கத்தில் அவர்கள் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.  ஆனால் உள்நோக்கம் ஏதுமின்றி நானும் செய்கிறேன். இந்தச் செயலும் கொட்டாவி போலத்தான். பரவுகிறது. யாராவது ஒருவர் திடீரென சும்மா மேலே பார்த்தால்கூட மற்றவர்களுக்கும் மேலே பார்க்கத் தோன்றுமே அப்படிப்பட்டதுதான். ஆகவே நானும்…

நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியின் உள்ளேயும் வெளியேயும் நான் (காசு கொடுத்து)  வாங்கிய புத்தகங்களின் பட்டியல்.

* அங்க இப்ப என்ன நேரம் – அ. முத்துலிங்கம் – தமிழினி
* சதுரங்கக் குதிரை – நாஞ்சில் நாடன் – விஜயா பதிப்பகம்
* Istanbul – Memories of a city – Orhan Pamuk – faber and faber
* ஸ்ரீதர் ஜோக்ஸ் – விகடன்
* மதன் ஜோக்ஸ் பாகம் 3 – விகடன்
* தமிழ் இலக்கிய வரலாறு – மு.வரதராசன் – சாகித்திய அகாதெமி
* களம் பல கண்ட ஹைதர் அலி – ஜெகாதா
* ஜூலியஸ் சீஸர், அந்தோணியும் கிளியோபட்ராவும், ரோமியோவும் ஜூலியட்டும் – ஏ.ஜி.எஸ்.  மணி – புத்தக உலகம் (மூன்றும் குறுவெளியீடுகள்)
* செட்டிநாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி – பழநியப்பா சுப்பிரமணியன் – தமிழினி
* நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதி – அ.கா. பெருமாள் – யுனைடெட் ரைட்டர்ஸ்
* நெல்லை வட்டார வழக்குச் சொல்லகராதி – கவிஞர் ப. முருகையா – அமுதா பதிப்பகம்
* கடலோடி – நரசய்யா – அலர்மேல்மங்கை
* Private life of the mughals of india – R. Nath
* Malgudi days – RK Narayan
* மாணவச் செல்வங்களுக்கு போப்பாண்டவர் – கவியழகன் – சோமு புத்தக நிலையம்
* India since independence – Publication Division
* விடுதலைப்புலி திப்புசுல்தான் – டாக்டர் வெ. ஜீவானந்தம் – பாரதி புத்தகாலயம்
* புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள் – ஓர் அறிமுகம் – பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் – பாரதி  புத்தகாலயம்
* என்ன செய்கிறேன் கண்டுபிடி – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
* என்ன மிருகம் சொல் – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
* உலகம் மாற்றிய புதுப் புனைவுகள் – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
* குழந்தை மொழியும் ஆசிரியரும் – ஒரு கையேடு – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
* நமது பூமி – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
* விடுதலைப் போராட்டகாலப் பாடல்கள் – தொகுப்பு : அறந்தை நாராயணன் – நேஷனல் புக்  டிரஸ்ட், இந்தியா

(பின்குறிப்பு : சென்னை புத்தகக் காட்சியில் முகிலுக்கு நான் வாங்கிக் கொடுத்த புத்தகங்கள்  என்று யாராவது பட்டியலிட்டால் நம்பாதீர்கள். அது பொய்.)

ஒரு லிட்டர் காபியின் விலை ரூ.100

88.89

திருமங்கலத்தில் பதிவான வாக்கு சதவீதம் பற்றி சொல்லவில்லை. இரண்டாவது நாளின் இறுதியில் சென்னை புத்தகக் காட்சியின் ஏற்பாடுகள் அத்தனை சதவீதம் முடிந்திருக்கின்றன. இன்னமும் தச்சர்கள் ரம்பாவோடு (ரம்பத்தோடு என்றும் சொல்லலாம்) திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

மணிகண்டன் மரியாதையாக இங்கே வரவும். எலெக்ட்ரீசியன் யாராவது எகிறிக்குதித்துவரவும். எழுத்தாளர் இன்பராஜா பப்பாசி அலுவலகத்துக்கு அலுத்துக்கொள்ளாமல் வரவும். ஒலிபெருக்கியில் கூவிக்கொண்டே இருக்கிறார்கள் – இடைவிடாமல். ‘முகிலைக் காணவில்லை’ என்று நானே நேரடியாகச் சென்று அறிவிப்பு கொடுத்துப்பார்க்கலாம் என்று ஒரு யோசனை.

உருப்படியாகப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பவர்கள் – பாரதி புத்தகாலயம். உருப்படியில்லாத புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் பலரைப் பற்றி ஹிஹி.. நோ கமெண்ட்ஸ்.

நக்கீரன் ஸ்டாலில் நீயா நானா கோபியைச் சந்தித்தேன். சிரித்துக்கொண்டே இருந்தார், தனது கவிதைப் புத்தகம் ஒன்றின் அட்டையில். நண்பர்களின் தூண்டுதலால் இப்படி ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளதாக முன்னுரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டிருந்தார். வாசகர்களின் ஆசிர்வாதம் இருந்தால் அடுத்தடுத்த கவிதைத் தொகுப்புகளை வழங்குவேன் என்று அருள்வாக்கு சொல்லியிருந்தார். கிடைக்காமல் போகட்டும்.

இந்தமுறை அரங்குக்கு உள்ளேயே அம்சமான டீ (ரூ.5), அருமையான காபி (ரூ.7), அட போட வைக்கும் பஜ்ஜி, அழகழகான பழக்கலவை, அடிநாக்கில் இனிக்கும் பழச்சாறுகள் கிடைக்கின்றன. அரங்குக்கு வெளியே இருக்கும் கேண்டீனில் பாதியை மைசூர் பாகுக்காரர்கள் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். 100மிலி அட்டு காபியின் விலை ரூ.10 என்றால் மற்ற பதார்த்தங்களின் விலைகளைக் கணக்கிட்டுக் கொள்ளவும்.

இந்த வருடம் வாங்க வேண்டிய புத்தகங்களை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். அடுத்த வார இறுதியில் வாங்க வேண்டும். என் அக்காவுக்கு சமையல் குறிப்பு புத்தகங்களில் ஆர்வம் அதிகம். கண்ணதாசனில் அய்யங்கார் சமையல் என்று ஒன்று (அரதப்பழசாக) கண்ணில்பட்டது. எடுத்து பில்போடச் சென்றேன். அருகில் இன்னொரு புத்தகத்தோடு இருந்த நபர், ‘அவரே எழுதியிருக்கிறாரா?’ என்று கேட்டார். ‘எவர்?’ என்று சமையல் புத்தகத்தின் அட்டையைப் பார்த்தேன், ‘எல். சுஜாதா’ என்றிருந்தது.

‘கூத்தடிக்க வேண்டாம்’ – எஸ்.எஸ். வாசன்

ஆனந்த விகடனில் வேலை பார்த்தவர்கள் சிலருக்கு ஒரு நாடகக் குழு ஆரம்பித்தால் என்ன என்ற ஓர் எண்ணம் தோன்றியது. ஆனந்த விகடன் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் என்ற பெயரில் ஒரு  நாடகக் குழுவை ஆரம்பித்தார்கள். முதல் முயற்சியாக தேவன் எழுதிய மிஸ்.மைதிலியை அரங்கேற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

நாரதர் ஸ்ரீனிவாச ராவ்தான் நாடகத்தின் கதாநாயகன், எழுத்தாளர் எஸ்.வி.வி.யின் மகன் எஸ். வி. ரங்கா, விகடனில் சர்குலேஷன் இலாக்கா மேனேஜராக  பணியாற்றினார். அவருக்கு வில்லன் வேடம். கதை எழுதிய தேவனுக்கும் ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டது. அவர்தான் கதாநாயகி  மிஸ். மைதிலியின் தந்தை.

விகடன் ஆர்ட் ஸ்டூடியோ இருந்த  பங்களாவின் மாடியில் உதய சங்கரின் கல்பனா படத்தின் நடன ஒத்திகை நடக்கும்  என்று சொன்னேன் அல்லவா? அவர் படப்பிடிப்பு முடிந்து புறப்பட்டுப் போய்விட்டதால்,  அந்த மாடி காலியாகத்தான் இருந்தது. அங்கேதான் எங்களுடைய நாடகத்தின் ஒத்திகை நடக்கும் எல்லோரும் தினமும் அலுவலக வேலை நேரம் முடிந்தவுடன் கரெக்ட்டாக ஒத்திகைக்கு ஆஜராகி விடுவார்கள். எங்களின்  தவறாத வருகைக்கு எங்களுடைய நடிப்பு ஆர்வம் மட்டுமே காரணமில்லை. தினமும் ரிகர்சலின் போது சுடச்சுட போண்டா சப்ளை ஆகும். அந்த போண்டாவும் சேர்த்துதான் எங்களை ஒத்திகைக்கு இழுத்தது.

நாடக அரங்கேற்ற தேதி நெருங்க நெருங்க எங்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. எல்லாரும்  ஈடுபாட்டுடன் நாடக அரங்கேற்றத்துக்காக உழைத்தோம். ஜெமினி, விகடன் அதிபரான வாசனைத்தான் அரங்கேற்றத்துக்கு தலைமை தாங்க அழைத்திருந்தோம். குடும்பத்துடன் வந்திருந்து நாடகத்தைப் பார்த்து  ரசித்து, எங்களை ஊக்கு விக்க  வேண்டும் என்று அவரைக்  கேட்டுக் கொண்டோம். சம்மதித்தார். அரங்கேற்ற நாள் வந்தது.

சென்னை மைலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில்தான் அரங்கேற்றம். குறித்த நேரத்தில் வாசன் தனது குடும்பத்தினருடன்  நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார். நாடகக் குழு ஆரம்பிக்க ஆர்வம் காட்டி, முன்னின்று ஏற்பாடுகளைச் செய்தவர்  விகடன் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் இருந்த   வைத்யநாதன். நாடகம் ஆரம்பித்தது. நடிகர்கள் அனைவருக்கும் மேடை நடிப்பில் முன் அனுபவம் ஏதுமில்லை என்பதால் சிலர் வசனம் பேசத் தடுமாறினார்கள். சிலர் வசனங்களை ஒப்பிப்பதுபோலப் பேசினார்கள். இன்னும் சிலரது நடிப்பு மிகவும் செயற்கையாக இருந்தது. நாடகத்தைப் பார்த்த வாசன், மேடை ஏறி ஏதோ இரண்டொரு வார்த்தைகள் சம்பிரதாயமாகப் பேசிவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்.

மறுநாள் அலுவலகத்துக்கு வந்தவுடன் நாடகக் குழுவினர் அனைவரையும் கூப்பிட்டு அனுப்பினார். நேற்று எங்கள் நாடக முயற்சியைப் பற்றி பப்ளிக்காக ரொம்ப பாராட்டாவிட்டாலும், இப்போது நாலு வார்த்தை பாராட்டிச் சொல்லப்போகிறார்  என்ன நினைப்போடு சென்றோம். அனைவரும் வாசன் முன்னால் நின்று கொண்டிருந்தோம்.  பேச ஆரம்பித்தார் வாசன்.

‘ஆனந்த விகடன் மக்களுக்குச் செய்து கொண்டிருக்க நகைச்சுவைத் தொண்டே போதுமானது. நீங்கள் இப்படி எல்லாம் நடித்து, மேடையில் நகைச்சுவை என்று கூத்தடிக்க வேண்டாம். இத்துடன்  நாடகம் போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.’

****

விகடனில் எல்லாமுமாக நிறைந்து விளங்கியவர் கோபுலு.  சொல்லப்போனால் தமிழ் வாசகர்கள் பலர், ஹாஸ்யத்தை உணர்ந்துகொண்டதே கோபுலுவின் கார்ட்டூன்களில் இருந்துதான் என்றுசொல்லலாம்.

ஓவியத்தில் ஆர்வமுள்ள குறும்பான சிறுவன், கும்பகோணம் ஓவியக்கல்லூரியின் மாணவன், மாலியின் சீடர், ஜோக் காட்டூனிஸ்ட், பக்தி ரசம் சொட்டும் ஓவியர், அரசியல் கார்ட்டூனிஸ்ட், வாசனின் மனம் கவர்ந்தவர், அட்வர்டைசிங் ஆர்ட் டைரக்டர், அட்வேவ் நிறுவனர், மென்மையான மனிதர் – கோபுலுவின் வாழ்க்கையை இப்படி தசாவதாரமாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு அவதாரத்திலும் அவரது அனுபவங்கள் அனைத்தும் மறக்க முடியாத இனிமையான பதிவுகள். வரலாறு என்றுகூட சொல்லலாம்.

ஓவியர் கோபுலுவின் வாழ்க்கையை அவரது எழுத்திலேயே படிப்பதென்பது, ஓர் அருமையான கருப்பு-வெள்ளை திரைப்படத்தை நீண்ட நாள் கழித்துப் பார்க்கும் ஏகானுபவம்! 2009 சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கிழக்கு பதிப்பகம் கொண்டுவரும் மிக முக்கியமான பதிவு – எஸ். சந்திரமௌலி தொகுத்துள்ள ஓவியர் கோபுலுவின் கோடுகளால் ஒரு வாழ்க்கை!

Making of Silk Smitha

சிலுக்கு.

இந்த ஒரு வார்த்தையை முன் வைத்தால் போதும். ஒவ்வொருவருக்கும் நினைவுகள் எங்கெங்கோ அலைமோதித் தள்ளாடும். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவைக் கட்டி ஆண்ட பேரரசி. நிஜ வாழ்வில்?

சிலுக்கின் வாழ்க்கையை புத்தகமாகக் கொண்டுவர முடிவெடுத்தபோது, பாரா அதை எழுதும் பொறுப்பை நண்பர் பா. தீனதயாளனிடம் ஒப்படைத்தார். தீனதயாளன் என்ற நாற்பது வயது இளைஞரைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் ‘கடந்த ஐம்பது கால தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா.’

சிலுக்கு – ஒரு பெண்ணின் கதை என்ற புத்தகத்தை உருவாக்கும்போது தனக்குக் கிடைத்த அனுபவங்களை தீனதயாளனே தனது வார்த்தைகளில் பதிவு செய்துள்ளார்.
000
ஒரு பத்திரிகையாளனாக, சிலுக்கை பேட்டி எடுக்கக் கூட முயற்சி செய்திராத  எனக்கு, சிலுக்கின் வாழ்க்கை குறித்த புத்தகம் எழுதும் பணி வந்து சேரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

சிலுக்கின் மரணம் குறித்த காரசாரமான கட்டுரை பிரசுரமாகியிருந்த தினமணிகதிரின் பழைய இதழ் ஒன்று மிக நீண்ட நாள்களாக என்னிடம் இருந்தது. அதுதான் ஆரம்பம். சிலுக்கை அவரது மரணத்திலிருந்துதான் பின்னோக்கிப் பின் தொடர ஆரம்பித்தேன்.

சிலுக்கின் ‘தூக்குக் கயிறு’ விஷயம் கிடைத்து விட்டது. ‘தொப்புள் கொடி’ விஷயத்தை எங்கே தேடுவது? யார், யாரைச் சந்திக்கலாம் என்றொரு பட்டியலைத் தயார் செய்தேன்.

சிலுக்கின் காலத்தில் பிரபல கதாநாயகியாக இருந்த நளினியை முதலில் சந்தித்தேன்.
‘ஹலோ அளவில்தான் எங்கள் பழக்கம்’ என்று முடித்துக் கொண்டார். ஏமாற்றம். நளினியின் மேக்-அப் மேன் சிலுக்கின் மேக்-அப் மேன் பற்றிய தகவலைக் கூறினார். சிலுக்கு கண்ணன் என்றழைக்கப்படும் அவரைத் தேடிப் போனேன்.

சினிமாவும் பத்திரிகைகளும் அறிமுகப்படுத்திய சிலுக்கைவிட, கண்ணன் எனக்கு அறிமுகப்படுத்திய சிலுக்கு, ஒரு தேவதை போல் இருந்தார். ‘நீங்கள் சிலுக்கு பற்றித்தானே சொல்லுகிறீர்கள், சிவாஜி பற்றி இல்லையே?’ என்று பலமுறை ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறேன்.

வினு சக்கரவர்த்தி சொன்ன விஷயங்கள் சிலுக்கு என்ற ‘மனுஷி’யைக் கண்முன் நிறுத்தியது. ஒளிப்பதிவாளர் என்.கே. விஸ்வநாதன் கூறிய பல தகவல்கள் சிலுக்கின் மறுபக்கத்தை விளங்க வைத்தது.

சிலுக்கு நல்லவரா, கெட்டவரா? தேவதையா, பிசாசா? – என்கிற கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்தான். அவரை மனுஷியாகப் பார்த்த அத்தனை பேருக்கும் அவர் நல்லவராகவே இருந்திருக்கிறார். மற்றவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம்தான். சந்தேகமே இல்லை. நடித்துக் கொண்டிருந்த காலம் முழுவதும் திரையுலகில் அவர் யாராலும் நெருங்கமுடியாத ஒரு நெருப்புப் பந்தாகத்தான் இருந்திருக்கிறார். அது, அவர் வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக்கொண்ட இமேஜ் என்பது தெரியவந்தபோதுதான், அப்படியொரு இமேஜை உருவாக்கிக்கொள்ள நேர்ந்த அவசியம் என்ன என்று அறியும் ஆவல் ஏற்பட்டது.

அவருடன் பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் தேடித்தேடிச் சந்திக்கத் தொடங்கினேன்.

‘என்னிடம் சிவாஜி பற்றிக் கேளுங்கள், கலைஞர் பற்றிக் கேளுங்கள், காமராஜர் பற்றிக் கேளுங்கள். சிலுக்கைப் பற்றிக் கேட்கலாமா?’ என்று தொலைபேசியிலேயே ஒதுங்கிக் கொண்டார் முக்தா சீனிவாசன்.

நாசரைச் சந்தித்தேன். ‘சிவாஜிக்கு அப்புறம் சிலுக்கு பற்றியா எழுதப் போகிறீர்கள்? என்ன வரிசை உங்களுடையது? சிலுக்கு பற்றி என்ன எழுதப் போகிறீர்கள்? அவரை உங்கள் புத்தகத்தில் எப்படிக் காட்டப் போகிறீர்கள்? நம் நாட்டில் எந்த சுயசரிதையும் வாழ்க்கை வரலாறும் நிஜமான விஷயங்களை அப்பட்டமாகச் சொல்வதில்லை’ என்று விசனப்பட்டார்.

வில்லனாக இருந்து ஹீரோவாகி, இன்று தன் மகன் காலத்திலும் தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வரும் ஒரு நடிகரிடம் பேசினேன். உடனே வரச் சொன்னவர், அடுத்த ஓரிரு நொடிகளில், ‘சிலுக்கு தற்கொலை செய்து கொண்டு இறந்த நடிகை. எனவே பேட்டி வேண்டாம்’ என்று தொலைபேசியை வைத்து விட்டார்.

‘சிலுக்கு ஒரு கவர்ச்சி நடிகை. அவரைப் பற்றி என்ன எழுதப் போகிறீர்கள்? வேண்டாமே அந்தப் பாவம்’ என்றார் ஒரு சீனியர் நடிகர்.

பல சினிமா ஆண்கள் இப்படி ஒதுங்கிக் கொண்டனர். ஆனால் பல சினிமா பெண்கள் மனம் திறந்து பேசினர்.

‘சிலுக்கு பற்றி என் கருத்துகள் இல்லாமல் இந்தப் புத்தகம் வரக்கூடாது’ என்று கண்ணீருடன் பல விஷயங்களைப் பேசினார் மனோரமா. புலியூர் சரோஜா, வடிவுக்கரசி, சிலுக்கின் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஹேமமாலினி ஆகியோரும் மறுக்காமல் பல தகவல்களைப் பகிர்ந்து உதவினர்.

இந்தப் புத்தகத்துக்காக தகவல்கள் தந்து உதவிய எஸ்.பி. முத்துராமன், கங்கை அமரன், பாண்டியராஜன், ஒளிப்பதிவாளர் பாபு, ஒளிப்பதிவாளர் அசோக்குமார் ஆகியோருக்கு என் நன்றி.

சிலுக்கோடு சமகாலத்தில் போட்டி போட்ட நடிகை அனுராதா வீட்டுக்குப் போனேன். நான் அங்கே அனுராதாவைக் காணவில்லை. ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ படத்தில் கணவர் ஜெமினிக்குப் பணிவிடை செய்யும் அஞ்சலி தேவியையைப் போல் தன் கணவருக்குப் பார்த்துப் பார்த்துப் பணிவிடை செய்துகொண்டிருந்த ஒரு அன்பான மனைவியைக் கண்டேன். பல ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி இன்னும் முழுமையாகக் குணம் அடையாத தன் கணவர் சதீஷுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார் அனுராதா. இன்று தெலுங்கு சினிமாக்களில் கவர்ச்சி நடனம் ஆடும் அவர்களது மகள் அபிநயஸ்ரீ, உள்ளிருந்து வந்து தன் அப்பாவின் காலருகே அமர்ந்து கொண்டார். அனுராதா சிலுக்கின் கடைசி நாள்கள் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

சமூகத்தின் கண்ணோட்டத்தில் மட்டுமே பதிவாகியிருக்கும் ஒருவரைப் பற்றிய எண்ணங்கள் பெரும்பாலும் நிஜமானதாக இருப்பதில்லை.

சிலுக்கின் விஷயத்திலும் அப்படித்தான். என்னால் முடிந்தவரை ‘நிஜமான சிலுக்கை’ இந்தப் புத்தகத்தில் வரைந்துகாட்ட முயற்சி செய்திருக்கிறேன். இம்முயற்சிக்கு உதவிய அத்தனை பேருக்கும் என் நன்றி.

பா. தீனதயாளன்
16-02-2007.

000

சிலுக்கு ஒரு பெண்ணின் கதை : புத்தகத்தை வாங்க

ஜெயலலிதாவின் அங்கிள்! எம்.ஜி.ஆரின் கோபம்

‘குலேபகாவலி’யில் நடித்த போது எம்.ஜி.ஆருடன் நண்பரானார் சந்திரபாபு. ஆனால் அது சுலபமாக நடந்துவிடவில்லை. நட்பு எப்படி மலர்ந்து என்பதைச் சந்திரபாபுவே விவரித்திருக்கிறார்.

‘…செட்டில் ரொம்ப வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்போம். எங்கள் குழுவில் இல்லாத ஒரே நபர் மிஸ்டர் எம்.ஜி.ஆர்.தான். தனிமையில் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார். அன்றும் அப்படித்தான் அவர் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். நான், டைரக்டர் ராமண்ணா, நடிகர் தங்கவேலு, மற்றும் பலர் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். ராமண்ணா மிஸ்டர் எம்.ஜி.ஆரை அழைத்து அவர் அருகே அமரச் சொன்னார். உடனே நான் ஒரு ஜோக் அடித்தேன். எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் மிஸ்டர். எம்.ஜி.ஆர். மட்டும் சிரிக்கவில்லை.

‘என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர்! சிரிச்சா முத்தா உதிர்ந்து போகும்? இப்படி உம்முன்னு இருக்கீங்களே’ என்றேன்.

‘உங்க ஜோக்குக்கு சிரிப்பா வரும்? கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்’ என்றார் பட்டென்று.

எல்லோரும் என்னேயே பார்த்தார்கள் எனக்கு அவமானமாகப் போய் விட்டது. பிறகுதான் எனக்கு மிஸ்டர் எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொன்னார்கள். ‘அவர் எப்போதும், எதிலும் தான் மட்டுமே பிரபலமாகத் தெரிய வேண்டும் என்று நினைப்பார். கூட்டத்தோடு சேர மாட்டார். தனிமையில்தான் அமர்ந்திருப்பார். அவருடன் பேச வேண்டுமானால் அவர் இருக்குமிடம் தேடித்தான் போக வேண்டும். உங்க ஜோக்குக்கு அவர் சிரிக்காததற்குக் காரணமே இதுதான். அவர் சிரிச்சுட்டார்னா, அந்தக் கூட்டத்தில நீங்க உயர்ந்திடுவீங்க இல்லையா, அதனாலதான் அப்படிச் சொன்னார் அவர்’ என்றார்கள்.

நான் வியந்தேன்.

ஒரு சாதாரண விஷயத்தில்கூட இந்த மனிதர் இப்படி நடந்து கொள்கிறாரே என்று நினைத்தேன். அன்று ஒரு சிறிய குழுவில் கூட தான் மட்டும்தான் பெரியவன் என்று காட்டிக் கொள்ள ஆசைப்பட்டார். அன்றிலிருந்து அவர் வளர்த்துக் கொண்ட அந்த ‘தான்’ என்ற அகந்தை இன்று அவர் வளர்ந்ததைப் போலவே வளர்ந்திருப்பதை நான் கண்கூடாகக் காணுகிறேன். அந்த ஒரு நிகழ்ச்சியில் இருந்து நான் அவரை விட்டு ஒதுங்கியே இருப்பேன். ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும்போதும் சிரிப்பார். பதிலுக்கு நானும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரிப்பேன்.

டைரக்டர் ராமண்ணா படப்பிடிப்பன்று ‘இன்று நான் புலிச் சண்டையைப் படமாக்கப் போகிறேன். நீங்கள் அதற்குத் தக்கவாறு பழகிக் கொள்ளூங்கள்’ என்றார் மிஸ்டர் எம்.ஜி.ஆரிடம்.

புலிச் சண்டைக்கான கூண்டுகள் போடப்பட்டன. எல்லோரும் மிஸ்டர் எம்.ஜி.ஆரின் வருகைக்காகக் காத்திருந்தோம். அவர் வரவில்லை. ஒரு மணி நேரமாயிற்று. இரண்டு மணி நேரமாயிற்று. பிறகு வந்தார்.
ஸ்டண்ட மாஸ்டரிடம் ‘ஒன்றும் ஆபத்தில்லையே’ என்றார்.

‘இல்லை சார். மயக்க மருந்து கொடுக்கிறோம்’ என்றார் மாஸ்டர்.

மிஸ்டர். எம்.ஜி.ஆர். புலிக் கூண்டிற்குள் நுழைந்தார்.  இரு பக்கங்களில் இரு காமிராக்கள் சுழலத் தொடங்கின. புலி படுத்து பாய்வதற்குத் தயாரானது.

நாங்கள் பயத்துடன் மிஸ்டர். எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். புலி மீது வைத்த கண்ணை அவர் எடுக்கவில்லை.
குபீரென அது பாய்ந்தது. எம்.ஜி.ஆர். லாகவமாக கீழே குனிந்து பதுங்கிக் கொண்டார். புலி தொப்பென்று விழுந்தது.

‘கட்’ என்றார் ராமண்ணா.

சமயோசிதமாக எம்.ஜி.ஆர். குனிந்ததை எல்லோரும் பாராட்டினார்கள். அவருக்கும் முகத்தில் ஒரு மகிழ்ச்சி. உடம்பெல்லாம் வேர்க்க விறுவிறுக்க வந்து அமர்ந்தார். அவரை நான் பாராட்டினேன். என் கையைப் பிடித்து அருகில் அமரச் சொன்னார். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு ராமண்ணா பல கோணங்களில் புலிச் சண்டையைப்படமாக்கினார். அதை நான் விவரிக்கக்கூடாது. அது தொழில் ரகசியம். என் அருகிலேயே எம்.ஜி.ஆர். இருந்தார். ஆனால் புலிச் சண்டை மட்டும் படமாகிக் கொண்டிருந்தது.

அன்றிலிருந்து நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களானோம். ‘பாபு இன்று முதல் நீங்கள் என் குடும்பத்தில் ஒருவர்” என்றார் எம்.ஜி.ஆர். நானும் ஏற்றுக் கொண்டேன்…’

0

பத்மினி ப்ரொடக்ஷன்ஸ் பி.ஆர். பந்தலு, ப. நீலகண்டன் ஆகியோர் ‘சபாஷ் மீனா’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை எடுக்க விரும்பினார்கள்.

கதாநாயகனாக நடிக்க சிவாஜியிடம் பேசினார்கள். கதையைக் கேட்டார் சிவாஜி. அதில் நாயகன் பாத்திரத்துக்கு இணையாக படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு சிவாஜி, ‘அந்த கேரக்டருக்கு சந்திரபாபுவைப் போட்டா ரொம்ப நல்லா வரும்’ என்றார் அவர்களிடம்.

ப. நீலகண்டன் தமது அலுவலகத்துக்குச் சென்று  சந்திரபாபுவைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரைச் சந்திக்க  வருவதாகக் கூறினார். அதற்குச் சந்திரபாபு, ‘நீங்க அங்கேயே இருங்க. நான்  கிளம்பி வர்றேன்’ என சொல்லிவிட்டு தன் காரில் கிளம்பி வந்தார் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகிலிருந்த பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு.

‘சபாஷ் மீனா’ படத்தின் கதை, சந்திரபாபுவின் கதாபாத்திரம், சிவாஜி சொன்ன கருத்து ஆகியவற்றை சந்திரபாபுவிடம் சொன்னார் நீலகண்டன்.

‘மிஸ்டர் சிவாஜி ஒரு நல்ல, பிரமாதமான ஆக்டர். என் திறமைய புரிஞ்சுக்கிட்டிருக்கார். அதான் என்னை சிபாரிசு பண்ணியிருக்கார்’ என சந்திரபாபு சொல்ல, நீலகண்டனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. சுதாரித்துக்கொண்டு, ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்’ என கேட்டார் நீலகண்டன்.

‘சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கறதை விட கூட ஒரு ரூபாய் கொடுங்க!’ என்றார் சந்திரபாபு.

நீலகண்டனுக்கு என்ன பதில் பேசுவதென்றே புரியவில்லை. சிவாஜியிடம் நடந்ததைச் சொன்னார் நீலகண்டன்.

‘அவன்கிட்ட விஷயம் இருக்கு. இது காமெடிப் படம். சில ஸீன்களில அவன் நடிப்புதான் நிக்கும். நான்தான் பார்த்து நடிக்கணும். சில சமயங்களில் இப்படித்தான் லூசுத்தனமா பேசுவான். விடுங்க.’ – சிவாஜி சொன்னார்.

0

எம்.ஜி.ஆரும் சந்திரபாபுவும் ‘அடிமைப் பெண்'(1969) படத்தில் நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த இறுதிப் படம் இதுதான்.

சுமார் நாலடி உள்ள ஒரு சுவர் மீது ஏறி, ஓடி சந்திரபாபுவும் ஜெயலலிதாவும் தப்பிப்பது போல் காட்சி. ஷாட்டின் போது, சுவர் மிகவும் சேதப்பட்டிருந்ததால், முன்னால் ஓடிய சந்திரபாபு நிலை தடுமாறி கீழே விழப் போக தாங்கிப் பிடித்தார் ஜெயலலிதா. அதோடு படப்பிடிப்பில் பிரேக் விடப்பட்டது.

உணவு இடைவேளையில் சந்திரபாபு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தார். அவருக்கு வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திரபாபுவுக்கு வரவேண்டிய உணவு வரவே இல்லை.

“என்ன சாப்பிடலையா?” என்றார் எம்.ஜி.ஆர் சந்திரபாபுவிடம்.

“சாப்பாடு இன்னும் வரலை!”

“அது வரட்டும். நீங்க என்னோட சாப்பாட்டை சாப்பிடுங்கள்” என தன் சாப்பாட்டை சந்திரபாபுவுக்கு பரிமாறச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

“எத்தனையோ தடவை உங்க வீட்டுல விருந்து சாப்பிட்டிருக்கேன். ஆனா இன்னிக்கு சாப்பாடு ரொம்ப சுவையா இருந்தது” என்றார் உண்டு முடித்த சந்திரபாபு.

அதன்பிறகு எம்.ஜி.ஆர். சாப்பிடவில்லை. பசியில்லை என்று கூறிவிட்டார். முகத்தை ஒரு மாதிரியே வைத்திருந்தார். படப்பிடிப்பும் துவங்கவில்லை.

சந்திரபாபு ஜெயலலிதாவிடம் என்ன விஷயம் என தனியாக விசாரித்தார். அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியானார் சந்திரபாபு.

படப்பிடிப்பில் தடுமாறி விழப் போன சந்திரபாபுவை ஜெயலலிதா தாங்கிப் பிடித்ததை எம்.ஜி.ஆர். விரும்பவில்லையாம். அதுதான் அவர் மூட்-அவுட் ஆகக் காரணமென தெரிந்து கொண்ட சந்திரபாபுவும் சங்கடத்துக்குள்ளானார். காரணம் ஜெயலலிதாவின் தாயாரின் சகோதரியான வித்யாவதி, சந்திரபாபு எல்லோரும் குடும்ப நண்பர்கள். அவர்களின் வீட்டுக்கு சந்திரபாபு செல்லும் போது, ‘அங்கிள்’ என அழைத்தபடி ஓடி வந்து சந்திரபாபுவுடன் பேசுவார், சிறு குழந்தையாக இருந்த ஜெயலலிதா. இதைப் புரிந்து கொள்ளாமல் எம்.ஜி.ஆர். தவறாக நினைத்துக் கொண்டாரே என வருந்தினார் சந்திரபாபு.

0

சந்திரபாபு பற்றி புத்தகம் எழுதுகிறேன் என்றதும் எல்லோரின் புருவமும் அனிச்சையாக உயர்ந்தது. தகவல் திரட்டச் சென்றபோது ஒரு சிலர் மட்டும் சண்டை போட்டனர். சிலர் ஒதுங்கிப் போயினர். சிலர் அலைய வைத்தனர். ‘என்ன மிஸ்டர் பாபு, இப்படி படுத்துறீங்க’ன்னு நான் கோபமான நேரத்துல ‘அட பொதுவாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜமப்பா. நான் படாத கஷ்டத்தையா நீ பட்டிருக்கப் போற’ன்னு சந்திரபாபுவே என் மனசுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினாரு. அதுக்கப்புறம் என் செல்போன் ரிங் டோன்கூட ‘குங்குமப் பூவே’ன்னு கூவ ஆரம்பிச்சிடுச்சு!

2006 ஜனவரியில் வெளியான கண்ணீரும் புன்னகையும் புத்தகத்துக்கு இன்றுவரை வரவேற்பு குறையவில்லை. சந்திரபாபு குறிஞ்சிப்பூ.