‘யுவராஜ், சிக்ஸர் அடிக்காதே!’

ஆல் இந்தியா ரேடியோ…

பாட்டியாலாவின் மோதிபாக் அரண்மனைப் படுக்கையறையில் வானொலி ஒலித்தது. படுத்தபடியே கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் மகாராஜா பூபிந்தர் சிங். சுற்றிலும் மருத்துவர்கள், நர்ஸ்கள், கூடவே சில முக்கிய அமைச்சர்களும். பம்பாய் பார்போர்ன் மைதானத்தில் அன்று முதல்தர கிரிக்கெட் மேட்ச், இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும். நமது அணியில் இளவரசர் யத்விந்த்ர சிங்கும் இருந்தார்.

‘இந்தப் பாழாய்ப்போன இந்திய கிரிக்கெட்டுக்கு எவ்வளவோ செய்தும் எனக்குப் பலன் கிடைக்கவில்லை. சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை. போகட்டும். என் மகனுக்காவது அந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இளவரசர் இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்துவிளையாட வேண்டும், அதுவும் கேப்டனாக. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்’ – இதுதான் பூபிந்தர் சிங்கின் ஆசையாக இருந்தது.

வானொலியில் வர்ணனை தொடர்ந்தது.

‘பாட்டியாலாவின் யுவராஜ் (இளவரசர்) இதோ மட்டை பிடிக்க வருகிறார்’ என்று வானொலி வர்ணனையாளர் சொன்னதுமே சட்டென எழுந்து உட்கார்ந்தார் பூபிந்தர். ‘மகாராஜா பதட்டமடைய வேண்டாம். எல்லாம் நம் ஏற்பாட்டின்படியே சரியாக நடக்கும்’ – ஊக்கமளித்தார் மருத்துவர் நரன்ஜின் சிங்.

‘பந்து வீச்சாளர் ஓடி வருகிறார். தாழ்வாக வீசப்பட்ட பந்து, அருமையாகத் தூக்கியடித்தார் யுவராஜ்… சிக்ஸர்!’

படுக்கையிலேயே துள்ளினார் மகாராஜா. சுற்றியிருப்பவர்கள் கைதட்டினார்கள். அரங்கில் பார்வையாளர்களின் ஆரவாரம் வானொலி வழியே இரைந்தது. ‘இதோ அடுத்த பந்தை வீச ஓடி வருகிறார். அளவு குறைந்து வந்த பந்து. மிட்-ஆன் திசையில் அழகாகத் தூக்கியடித்தார் யுவராஜ். இன்னுமொரு சிக்ஸர்!’

பூபிந்தரின் துள்ளல், மைதானத்தில் ஆரவாரம். அடுத்த பந்திலும் ‘…இறங்கி வந்து லாகவமாக அடித்தார் யுவராஜ். மீண்டும் ஆறு ரன்கள்!’ – இந்தமுறை மைதானத்தில் ஆரவாரம் குறைந்திருந்தது. பூபிந்தர் சிங்கின் முகத்திலும் உற்சாகம் மறைந்து கொஞ்சம் டென்ஷன் ஏறியிருந்தது. அடுத்து வீசப்பட்ட பந்திலும் யுவராஜ் சளைக்காமல் சிக்ஸர் அடிக்க, வாய்விட்டுப் புலம்ப ஆரம்பித்தார் மகாராஜா. ‘யுவி, இதுக்கு மேலே சிக்ஸர் அடிக்காதே!’

மைதானத்திலிருந்த ரசிகர்கள் அதற்குமேல் யுவராஜைக் கேலிசெய்து கூச்சல்போட ஆரம்பித்தார்கள். எல்லாம் நாடகம் என்று புரிந்துபோனது எல்லோருக்கும். பந்தை நன்றாகப் போட்டுக் கொடுங்கள். யுவராஜ் முடிந்த மட்டும் அடித்துவிட்டுப் போகட்டும்! அப்போதுதான் அடுத்து இங்கிலாந்துக்கு வரவிருக்கும் இந்திய அணிக்கு கேப்டனாக யத்விந்த்ர சிங் தேர்வாக முடியும். தனது செல்வாக்கைக் கொண்டு இங்கிலாந்து அணியோடு ரகசிய உடன்படிக்கை போட்டிருந்தார் மகாராஜா. ஆனால் மைதானத்தில் யுவராஜ் அதீத ஆர்வக்கோளாறோடு இறங்கி விளாச, திட்டம் பல்லிளித்தது.

பூபிந்தர் சிங்குக்கு ரத்த அழுத்தம் அதிகமாவதை அறிந்த மருத்துவர்கள், அவரைப் படாதபாடுபட்டு படுக்க வைத்தார்கள். யுவராஜ், 60 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மதிய நேரத்துக்குப் பிறகு யுவராஜின் முகம் மைதானத்தில் தென்பட்டபோது ரசிகர்களில் கேலி, கிண்டல், நக்கல் ஒலிகள், பேச்சுகள். யுவராஜால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. அந்த நேரத்தில் யுவராஜின் காதுகளுக்கு செய்தி ஒன்று வந்து சேர்ந்தது. ‘மகாராஜா உங்களை மைதானத்தில் இருக்க வேண்டாம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.’

யுவராஜ், தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு மைதானத்திலிருந்து வெளியேறினார். அத்தோடு கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்தும். எது எதையோ சாதித்த பூபிந்தர் சிங்காலும் தனது மகன் விஷயத்தில் சாதித்துக்காட்ட முடியவில்லை.

இந்த இடத்தில் ஒரு புள்ளிவிவரம். யத்விந்தர சிங், 52 முதல் தர போட்டிகளில் 83 இன்னிங்ஸ் விளையாடி எடுத்த மொத்த ரன்கள் 1629. அதில் ஏழு அரைசதங்கள், இரண்டு சதங்கள். பவுலிங்கில் எடுத்த விக்கெட்டுகள் 50. விளையாடிய ஒரே ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் மட்டை பிடித்து எடுத்த ரன்கள் 84.

தொண்ணூறு டிகிரி – பகுதி 3

தொண்ணூறு டிகிரி (பகுதி 1)

தொண்ணூறு டிகிரி (பகுதி 2)

அன்று கிறிஸ்துமஸ். அந்தக் குழுவினரது முகத்தில் உற்சாகமே இல்லை. 10570 அடி உயரத்தில் அந்தப் பனிமலையில் சுருண்டு கிடந்தார்கள். பனிக்காற்று முகத்தைக் குத்திக் கிழிக்குமாறு மூர்க்கமுடன் வீசிக் கொண்டிருந்தது. அந்தக் குழுவின் தலைவரான இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் பால்கன் ஸ்காட், மெள்ள எழுந்தார். உற்சாகமாக இருக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. அப்போதுதான் குழுவினரை வழிநடத்த முடியும். வாழ்நாள் லட்சியமான ‘தொண்ணூறு டிகிரி’யில் கால் பதிக்க முடியும்.

இங்கிலாந்தின் ராபர்ட் பால்கன் ஸ்காட்டுக்கும், நார்வேயைச் சேர்ந்த ரோல்ட் அமுண்ட்செனுக்கும் அண்டார்டிகாவில் பயணம் செய்து, உலகின் தென் துருவமான தொண்ணூறு டிகிரியில் முதன்முதலில் காலடியைப் பதித்துவிட வேண்டும் என்பதுதான் வாழ்வின் லட்சியம், ஆசை, குறிக்கோள் எல்லாமே.

அமுண்ட்சென், ஸ்காட்

கி.பி. 1911ல் ஸ்காட், தனது குழுவினருடன் அண்டார்டிகாவில் தென் துருவத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருந்தார். அதே சமயத்தில் ரோல்ட் அமுண்ட்செனும் தன் குழுவினருடன் அண்டார்டிகாவின் இன்னொரு முனையிலிருந்து தென் துருவத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். அடுத்த ஒரு வார காலத்தில் ஸ்காட் குழுவினர் தினமும் சுமார் பதினைந்து மைல்கள் வரை பயணம் செய்தனர். அந்தப் பனிப்பிரதேசத்தில் அவ்வளவு தூரம் பயணம் செய்வதே பெரும் சாதனைதான்.

ஜனவரி 3, 1912. கைவசமிருந்த உணவுப் பொருள்கள் பெருமளவு கரைந்து போயிருந்தது. தென் துருவத்தைத் தொட்டுவிட்டு, மீண்டும் திரும்பிவர வேண்டும். கைவசமிருக்கும் உணவு இத்தனைபேருக்கு நிச்சயம் போதுமானதாக இருக்காது. என்ன செய்யலாம் என்று வெகு தீவிரமாக யோசித்த ஸ்காட், தன் குழுவில் இருந்து மூன்று பேரைக் கழட்டிவிட முடிவு செய்தார். ‘டெடி இவான்ஸ், க்ரீன், லாஷ்லி – என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் மூவரும் திரும்பிச் சென்றுவிடுங்கள்.

ஸ்காட்டும் மேலும் நான்கு பேரும் (ஓட்ஸ், வில்சன், டாஃப் இவான்ஸ், பௌவர்ஸ்) தென் துருவத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஜனவரி 9, ஊளையிட்டுக் கொண்டே வீசிய பனிப்புயல் ஸ்காட் குழுவினரை கூடாரத்துக்குள்ளேயே முடக்கி விட்டது. ஜனவரி 10, அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இன்னும் சில மைல்கள்தான். சில  நாள்கள் பயணம்தான். தென் துருவம் கிட்டி விடும். கனவுகள் கண் முன் விரிய ஒரு வாரத்துக்கான உணவுப் பொருள்களை சேமித்து வைக்கும்படியான கூடாரம் ஒன்றை அந்த இடத்தில் அமைத்தனர். சுமக்க வேண்டாம். திரும்பி அதேபாதையில் வரும்போது உபயோகப்படுமல்லவா.

அடுத்தடுத்த நாள்களில் பத்து மைல்கள் கடப்பதென்பதே பெரும்பாடாகிப் போனது. இன்னும் நான்கு நாள்கள் இதேபோல் கடும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை. ஜனவரி 13ல் ஸ்காட் குழுவினர் 89டிகிரி தென் அட்ச ரேகைப் பகுதியைக் கடந்தனர். அடுத்த நாள் அவர்கள் தங்களது இறுதி சேமிப்புக் கூடாரத்தை அமைத்தனர். அதில் நான்கு நாள்களுக்கான உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டன. அன்று இரவு ஸ்காட், ‘இப்போதே என் லட்சியத்தை அடைந்துவிட வேண்டும்’ என எழுதினார். அவர் தன் டைரியில் எழுதிய சந்தோஷமான இறுதிவரி அதுதான்.

ஜனவரி 16, வழக்கத்தைவிட அதிக தூரம் பயணம் செய்ய முடிந்தது. நாளை கண்டிப்பாக தென் துருவத்தை தொட்டு விடலாம் என ஒவ்வொருவரின் மனதிலும் உற்சாகம் பீறிட்டது.

தொண்ணூறு டிகிரி

ஜனவரி 17, தங்கள் கனவு நிறைவேறப் போகிறதென்ற சந்தோஷத்தில் பயணத்தைத் தொடங்கினர். மதிய நேரம். பௌவர்ஸின் முகம் சுருங்கியது. காரணம், அந்தப் பகுதியில் ஏற்கெனவே பனிச்சறுக்கு வாகனமான ஸ்லெட்ஜ் கடந்து போன தடங்கள், நாய்களின் பாதச் சுவடுகள் தென்பட்டன. தூரத்தில் ஏதோ அடையாளக் கல் வைத்திருப்பது போல் தெரிந்தது. அவ்வளவுதான்.

ஒவ்வொருவரின் மனத்திலும் வெடிப்பதற்குக் காத்திருந்த உற்சாகம் அப்படியே அமுங்கிப் போனது. பதைபதைப்புடன் தங்களின் லட்சியமான தொண்ணூறு டிகிரியை நோக்கி தள்ளாடித் தள்ளாடிச் சென்றார்கள்.

தூரத்தில் ஒரு கொடி காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. அது நார்வேயினுடையது.

***

மேலே நாம் பார்த்தது சென்ற நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட தென் துருவ சாகசப் பயணத்தின் ஒரு சிறு பகுதி. இதுவரை உலகில் மேற்கொள்ளப்பட்ட அதிமோசமான, மிக பயங்கரமான பயணம் இதுவே. தென் துருவத்தை அடைய ஸ்காட்டாலும் அமுண்ட்செனாலும் மேற்கொள்ளப்பட்ட அந்தப் பயணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் எவருக்கும் உடல் நடுங்கி, உயிர் உறைவது உறுதி. உலகில் மக்களின் மனத்தை அதிகமாகப் பாதித்த பயணமும் அதுவே. இந்த ஆண்டு (2010- 2011) அந்த பயணங்களுக்கான நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. ஸ்காட், அமுண்ட்சென் அமைத்துக் கொடுத்த பாதையால், அண்டார்டிகாவில் தற்போது பல்வேறு நாடுகளும் தங்களது ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளன. இந்தியாவும் மைத்ரி என்ற ஆராய்ச்சி மையத்தை அமைத்து சுமார் இருபது ஆண்டுகளாக அங்கே தீவிரமாக இயங்கிக் கொண்டு வருகிறது.

இதோ இந்த நாள்களில் உலகின் தென் துருவத்தில் பல்வேறு நாட்டு ஆய்வாளர்களும் சென்று ஸ்காட்டுக்கும் அமுண்ட்செனுக்கும் மரியாதை செய்து வருகிறார்கள். எனது அண்டார்டிகா புத்தகத்தைக்கூட நான் ஸ்காட், அமுண்ட்சென் மற்றும் தென் துருவத்தைக் கடக்க முயற்சி செய்த இன்னொரு பயணியான ஷாகெல்டன் ஆகிய மூன்று பனிப்போராளிகளுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

நடந்துமுடிந்த புத்தகக் கண்காட்சியில் அண்டார்டிகா புத்தகம் விற்பனையில் இல்லை. புத்தகத்தை விரும்புபவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

முகலாயர்கள் – திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது

2009 டிசம்பரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட எனது முகலாயர்கள் புத்தகத்துக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கம் ‘இலக்கிய விருது 2009’ கிடைத்திருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

2009 திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றுள்ள இன்னொரு புத்தகம், இலந்தை சு. ராமசாமி எழுதியுள்ள மகாகவி பாரதி. அவருடைய எடிசனும் ஹென்றி ஃபோர்டும் என் மனத்துக்குப் பிடித்த புத்தகங்கள். வாழ்த்துகள் இலந்தை சார்.

தமிழக அரசு விருதுகள் பெற்றுள்ள காப்பிரைட் நூல் ஆசிரியர் சொக்கலிங்கத்துக்கும், சந்திராயன் புத்தக ஆசிரியர் சரவண கார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள். என்.ஹெச்.எம் ரைட்டர் + கணியன் பூங்குன்றனார் விருது புகழ் நண்பர் நாகராஜுக்கு சிறப்பு வாழ்த்துகள்.

கழுதைப்பால் கட்டழகி!

மொத்தம் எழுநூறு கழுதைகள். அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனை வளாகத்தில் அவற்றைப் பராமரிக்கவே தனி ‘தொழுவம்’ இருந்தது. கழுதைப் பால் கறப்பவர்களின் வேலை காலை முதலே ஆரம்பித்துவிடும். தூசு, துரும்பு எதுவும் இல்லாத அக்மார்க் கழுதைப் பால் மதிய நேரத்தில் அந்தப்புரத்துக்குள் கொண்டு செல்லப்படும். குளிக்கும் தொட்டிக்குள் நிரப்பப்படும். மாலை நேரத்தில் தோழிகள் சூழ அங்கு வரும் கிளியோபாட்ரா, குளியல் தொட்டிக்குள் இறங்கி கழுதைப் பாலில் ஊற ஆரம்பிப்பாள்.

காலம் காலமாக கிளியோபட்ரா குறித்து சொல்லப்பட்டு வரும் சம்பவம் இது.  சமீபத்தில் ஹலோ எஃப்.எம்மில் புத்தகக் கண்காட்சி புதுவரவுகள் குறித்து பேட்டி கொடுத்த பாரா, ‘கிளியோபாட்ரா புத்தகம்’ வெளிவருவதாகச் சொன்னார். உடனே ஆர்ஜே (மிஸ்டர்) பாலாஜி கேட்ட கேள்வி, ‘கிளியோபாட்ரா கழுதைப்பால்ல குளிப்பாங்கன்னு சொல்றது நிஜமா?’

கிளியோபாட்ரா என்றாலே பலரது மனத்தில் தோன்றும் அடுத்த வார்த்தை ‘கழுதைப்பால்.’ அப்படி என்னதான் இருக்கிறது கழுதைப்பாலில்?

கிட்டத்தட்ட மனிதனின் தாய்ப்பாலுக்குச் சமமானது கழுதைப்பால். லாக்டோஸ் அதிகமுண்டு, பசும்பாலைவிட கொழுப்பு குறைவு. அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பதில் கழுதைப்பாலும் கொடுத்திருக்கிறார்கள். மருத்துவத்துக்கும் பல்வேறு விதங்களில் உபயோகிப்படுத்தி இருக்கிறார்கள். அழகுக் குறிப்புகளும் கொடுக்கிறார்கள். கழுதைப்பாலில் குளித்தால் முகச்சுருக்கங்கள் வரவே வராது. தோலில் மினுமினுப்பு அதிகரிக்கும். வெண்மை நிறம் மிளிரும். ஒரு நாளில் ஏழுமுறை கழுதைப் பாலில் முகம் கழுவினால் முகம் என்றென்றைக்கும் புத்துணர்வுடன் இருக்கும்.

கி.பி. 30 முதல் 65 வரை வாழ்ந்த ரோம் அரசி சபினா (பிடில் புகழ் நீரோவின் இரண்டாவது மனைவி), கழுதைப் பாலில் குளித்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அவள் எங்காவது வெளியூர் சென்றாலும் அவளுக்காகக் கையுடனேயே அண்டா அண்டாவாக கழுதைப்பால் கொண்டு செல்வார்களாம் அல்லது நூற்றுக்கணக்கான கழுதைகளையே ஓட்டிக் கொண்டு செல்வார்களாம். நெப்போலியனின் தங்கை பவுலினும் கழுதைப் பாலில் குளித்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. இருக்கட்டும், கிளியோபட்ரா? அந்த விஷயத்துக்கு அப்புறமாக வருவோம்.

எகிப்தியர்களுக்குக் காலை எழுந்தவுடன் குளிக்கும் வழக்கம் இருந்ததில்லை. வேலையெல்லாம் முடித்துவிட்டு, வெயில் விடைபெறும் வேளையில் மாலைக் குளியல் போட்டிருக்கிறார்கள். அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனையில் இளவரசியாக சகல வசதிகளுடன் வளர்ந்துவந்த கிளியோபட்ராவும் அந்த வழக்கத்தைத்தான் கடைபிடித்திருக்கிறாள்.

அரண்மனைக்குள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே குளியல் தொட்டிகள் இருந்தன. வெந்நீர்க் குளியலுக்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. கிளியோபாட்ரா ஆலிவ் எண்ணெய் தேய்த்து குளித்தாள். உடல் தேய்த்துக் குளிக்க, வளைவான தகடு (Strigil) ஒன்றை உபயோகப்படுத்தினாள். குளியலை முடிக்க குறைந்தது இரு மணி நேரம் பிடிக்கும்.

கிளியோபாட்ரா உபயோகப்படுத்திய இன்னொரு முக்கியமான அழகுப் பொருள் மருதாணி. கூந்தலில், கைவிரல்களில், பாதங்களில் மருதாணி உபயோகப்படுத்தினாள். தவிர முகத்துக்கான இயற்கை கிரீம்கள், கண்ணுக்கான மை, உதட்டுக்கான சாயம், முகப் பொலிவுக்கான பூச்சுகள், வாசனைக்கான திரவியங்கள் – எல்லாமே உபயோகப்படுத்தியிருக்கிறாள்.

படுத்திக் கொள்ளட்டும். அவள் பொன்வண்டு சோப்பு வேண்டுமானாலும் தேய்த்துக் குளித்திருக்கட்டும். அதெல்லாம் விஷயமே இல்லை. கழுதைப்பாலில் குளித்தாளா?

சான்றுகள் எதுவும் இல்லை. எகிப்தில், கிரீஸில், ரோமில் வாழ்ந்த உயர்குடிப் பெண்கள் எல்லோருமே பாலில் குளிக்கும் வழக்கத்தைக் கடைபிடித்தார்கள். அந்த விதத்தில் கிளியோபாட்ராவும் பாலிலோ, கழுதைப் பாலிலோ (ஆரோக்யா நாலரை பாலிலோ) குளித்திருக்கலாம். இதில் கவனிக்கப்பட (சந்தோஷப்பட) வேண்டிய விஷயம் எகிப்தியர்களுக்குத் தினமும் குளிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதுதான்.

கழுதைப்பாலைத் தாண்டியும் கிளியோபாட்ரா பற்றி தெரிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவளது பிறப்பு முதல், அவள் பேரழகியா, நல்லவளா, இனவெறி பிடித்தவளா, தற்கொலை செய்துகொண்டாளா என்பதுவரை ஏகப்பட்ட சர்ச்சைகள் நிறைந்து கிடக்கின்றன. கிளியோபாட்ரா குறித்து ஏற்கெனவே பலவிதமான தகவல்கள் சேகரித்து வைத்திருந்தேன். 2010ல் அவள் வாழ்க்கை குறித்த புத்தகத்தை எழுத முடிவு செய்தேன். எழுதி முடித்தேன். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன்பாகவே எனக்குத் திருமணம் நடந்துவிட்டது என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிவிக்கக் ‘கடாமைப்பட்டிருக்கிறேன்.’ (ஆதாரம் : பாரா – http://www.writerpara.com/paper/?p=1786 பத்ரி – http://thoughtsintamil.blogspot.com/2011/01/3.html)

கிளியோபாட்ரா, சென்னை புத்தகக் கண்காட்சி கிழக்கு ஸ்டாலில் (F13, F14, F15) கிடைக்கும். ஆன்லைனில் வாங்க.

கருணாநிதியிடம் ஒரு கேள்வி; கலைஞரிடம் ஒரு கேள்வி.

என்றோ வாழ்ந்துவிட்டுப் போன அரசர்களின் ஆட்சி, அரசியல் இதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் நேற்று வாழ்ந்துவிட்டுப்போன, இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் அரசியலில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. எனவே தமிழகத்தின் அரசியல் வரலாறு பற்றிய நிறையறிவு எனக்குக் கிடையாது. தெரிந்துகொள்ள பேராசை உண்டு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு புத்தகங்களுக்காகக் (இரண்டு பாகங்கள்) காத்திருக்கிறேன்.

திராவிட இயக்க முக்கிய தலைவர்களிடம் கேட்பதற்கு சில கேள்விகள் இருக்கின்றன.

பெரியாரிடம் ஒரு கேள்வி

ஒடுக்கப்பட்டவர்களை ஆதிக்கத்தின் பிடியில் இருந்து மீட்பதற்காகக் குரல் கொடுத்ததில் தங்களுடைய முன்னோர் என்றால் அது அயோத்திதாசப் பண்டிதர். அவருடைய வழிமுறைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர் முன்வைத்த தமிழ் பௌத்தத்தை எப்படி அணுகுகிறீர்கள்?

அண்ணாவிடம் ஒரு கேள்வி

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ – இது தாங்கள் சொன்னதுதான். கடவுளே கிடையாது என்ற பாரம்பரியத்தில் இருந்துவந்த நீங்கள், இதுபோல விட்டுக் கொடுக்க வேண்டியிருந்த சூழ்நிலைகள் குறித்து வருத்தப்பட்டிருக்கிறீர்களா? கொண்ட லட்சியங்களை நிறைவேற்ற கட்சி அரசியல் துணை போகாது என்று உணர்ந்த தருணம் உண்டா?

கருணாநிதியிடம் ஒரு கேள்வி

எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆரைக் காட்டிலும் அதிகம் புரிந்தவர்கள் நீங்கள். அப்படியிருக்கும்போது யாரை நம்பி (அல்லது எதனால்) எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து விலக்க முடிவுசெய்தீர்கள்? தப்புக்கணக்கு போட்டுவிட்டதாக என்றேனும் நினைத்திருக்கிறீர்களா?

எம்.ஜி.ஆரிடம் ஒரு கேள்வி

கடவுளுக்கு எதிரான சிந்தனைகளைக் கொண்ட திராவிட இயக்கத்துக்குள் இருந்துகொண்டே, மூகாம்பிகையையும் சங்காராச்சாரியையும் தொழுது, ஆட்சியிலும் நீடித்தது உங்களுடைய பலமா? திராவிட இயக்க ஆதரவாளர்களின் பலவீனமா?

வைகோவிடம் ஒரு கேள்வி

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி தாங்கள்தான் என்று காங்கிரஸ், பாமக, தேமுதிக போன்றவை எல்லாம் மார்தட்டிக் கொள்ளும்போது, கட்டமைப்பு ரீதியாக மாநிலம் முழுக்க மதிமுகவைப் பரப்பியிருக்கும் நீங்கள் என்ன நினைத்துக்கொள்வீர்கள்?

கலைஞரிடம் ஒரு கேள்வி

டெல்லியில் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள அரசியல் சாதுரியம், பேச்சுத்திறன், ஆங்கிலப்புலமை என்ற மூன்று விஷயங்களும் அத்தியாவசியம். ஈ.வெ.கி. சம்பத், முரசொலி மாறன், வைகோ போன்றவர்கள்தான் திமுகவின் டெல்லி முகங்கள். இருவர் மறைந்துவிட்டார்கள். வைகோ விலகிவிட்டார். இவர்களைப் போல திறமைவாயந்த வேறு எவரும் திமுகவில் இன்று இல்லை அல்லது நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை. ஆக, திமுகவின் டெல்லி அரசியல் இனி எடுபடாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

தலைவர்களிடம் இருந்து என் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கப் போவதில்லை. ஆர். முத்துக்குமாரின் புத்தகங்கள், இதற்குரிய விடைகளைக் கொடுக்குமா என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.

திராவிட இயக்க வரலாறு முதல் பாகம் (ரூ. 200), இரண்டாம் பாகம் (ரூ. 200)