பாக்யராஜின் முதுகு!

சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்த பாக்யா பத்திரிகை அலுவலகத்தின் பிரகாசமான விளக்குகள் அணைக்கப்பட்டன. இரவு மணி சரியாக 12.00. ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்த கையோடு நடிகர் பாண்டியராஜன் கொத்தாக ஒரு கட்டு ஊதுபத்தியை ஏற்றி வைத்தார்.

கோலப்பன் என்ற மீடியம், அந்தப் பளபளப்பான ஆவிகளுடன் பேச உதவும்  பிரான்சட் போர்டை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வைத்தார்.
‘ஒரு 10 செகன்ட் எல்லாரும் உங்களுக்குப் பிரியமா இருந்து ஏதோ ஒரு காரணத்துனாலே இறந்து போன அந்த நபரை மனசார நெனைச்சு கண்ணை மூடிட்டுப் பிரார்த்தனை பண்ணுங்க.’
மீடியம் கட்டைக்குரலில் வேண்டுகோள் விடுத்தார். அந்த விஸ்தரமான அறையில் மீடியத்தையும் சேர்த்து ஐந்து பேர் மட்டுமே இருந்தோம். எல்லோரும் மீடியத்தின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு கண்மூடிப் பிரார்த்தனை செய்தோம்.
கண்ணைத் திறந்தபோது – ஒரு நிமிடம் ஆடி அதிர்ந்து போனேன்.
பாக்யராஜின் தலைக்குமேலே வெள்ளை வெளேர் நிறத்தில் இரண்டு ஆவிகள் கை கோர்த்து மிதந்து போய்க் கொண்டிருந்தன. அது வேறொன்றும் இல்லை. பாண்டியராஜன் ஆவியோடு இன்றைக்குப் பேசியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தில் கொத்தாகக் கொளுத்தி வைத்த ஊதுபத்திப் புகைதான் என்பதை உணர்வதற்குள் என் முகத்தில் பேய் பயம்.

அதைக் கவனித்த பாக்யராஜ், ‘ஆவிகளோட பேசறதுக்கு முன்னாடியே ரொம்ப டென்சன் ஆயிட்டீங்களே. பேசி முடிச்சிட்டீங்கன்னா எல்லாஞ் செரியாப் போயிரும். ப்ரபசர் சார், நீங்களும் சஞ்சீவியும் மொதல்லெ ஆவி போர்டுலெ கைவைங்க. சஞ்சீவிக்கு ஏதாவது வித்தியாசமா வந்து சேரும்!’

எனக்கும் சரி, ப்ரபசருக்கு சரி, இந்த மாதிரியான விஷயங்களில் அவ்வளவு நம்பிக்கை கிடையாது. இப்படி நம்பிக்கை இல்லாத இரண்டு பேரும் சேர்ந்து பிளான்சட் போர்டு ஸ்ட்ரைகரில் விரல் வைத்தாலோ என்னவோ, வெகு நேரம் ஸ்ட்ரைகர் இருந்த இடம் விட்டு நகரவேயில்லை.

அதற்குப் பிறகு ஸ்ட்ரைகர் மெதுவாக நகர ஆரம்பித்தது. ஆனால், பிளான்சட் போர்டில் அச்சடித்த ஆங்கில எழுத்துகளில் எந்த சம்பந்தமும் இல்லாமல், அர்த்தமும் இல்லாமல் அந்த ‘பிளாஸ்டிக் வில்லை’ நின்று நின்று நகர்ந்தது. சிலசமயம் பிளான்சட் போர்டின் சதுரம் தாண்டி வழுக்கிக் கொண்டு போய் தரையிறங்கியது.

மீடியம் அப்போது நம்பிக்கையூட்டும் வகையில் ஓர் அறிவிப்பு செய்தார்.
‘சார்! ஏதோ ஆவி ஒண்ணு, இப்போ இங்க வந்திருச்சு. இல்லாட்டி ஸ்ட்ரைகர் நகரவே நகராது. இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. இப்போ இங்க வந்திருக்கிற ஆவிக்கு இங்கிலீஸ் எழுத்துகள் படிக்கத் தெரியலேன்னு வெச்சுக்குங்க. அப்போ இது மாதிரிதான் வெளையாட்டு காட்டிட்டுப் போயிரும்.’

பாக்யராஜ் அப்போது என்னிடம் கேட்டார். ‘ஏங்க சஞ்சீவி, நீங்க கூப்புட்ட ஆவிக்கு இங்கிலீஸ் தெரியுமா? தெரியாதா?’
‘இல்லில்லே, நான் மனசிலே நெனைச்ச ஆவி ஒரு ஸ்கூல் டீச்சர். இங்கிலீஸ் ப்ராப்ளம் எல்லாம் இல்லே’ என்று நான் சொல்லி முடிக்கும்போது ஸ்ட்ரைகர் பிளான்சட் போர்டின் நடுவில் சென்று நின்றது.

முன்பு இல்லாத ஒரு வைபரேசனை என் விரல்கள் உணர்ந்தன. அதை ஆமோதிப்பது போல் இங்கிலீஷ் ப்ரபசர் என்னைப் பார்த்து லேசாகத் தலையாட்டினார். அதற்குப் பிறகு ஸ்ட்ரைகர், M – என்ற எழுத்துக்குச் சென்று ஒரு செகண்ட் நின்று, பின் A, Y – அடுத்து A  என்று அங்கேயே நங்கூரம் பாய்ச்சிக் கொண்டது.

‘மாயாவோட ஆவி வந்திருச்சுங்க ஏன் சார்… நீங்க மாயாவைத்தான் நெனைச்சீங்களா?’ – பாண்டியராஜன் கேட்டார். உண்மைதான் அந்த ஸ்கூல் டீச்சரின் பெயர் மாயாதான். ஒப்புக்கொண்டேன் இருந்தாலும் மீடியமாக வந்திருப்பது நான் கூப்பிட்ட டீச்சரின் ஆவிதான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும் வகையில் ‘எங்க பிரார்த்தனைய மதிச்சு இந்த ராத்திரி நேரத்துல இங்க வந்திருக்கற மாயா ஆவிக்கு எங்க வணக்கம். நீங்க பிறந்த ஊரைச் சொல்லமுடியுமா ப்ளீஸ்’ – என்று கேட்டேன்.

இப்போது நானும் ப்ரபசரும் மீண்டும் பிளாஸ்டிக் வில்லையில் விரல் வைத்தோம்.
S
A
L
E
M – என்று ஸ்டைகர் நிலைகொண்டது. பாண்டியராஜன் அதை சலீம் என படித்து வாய் விட்டுச் சிரித்தார்.

‘அது சலீம் அல்ல…‘சேலம்’தான். ஸ்கூல் டீச்சர் வாழ்ந்து, சின்ன வயதிலேயே மறைந்தது சேலத்தின்தான். அதன் ஸ்பெல்லிங்கும் SALEMதான்!’ என்றேன். அதற்குப் பிறகு நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிருக்க வேண்டும். என்னால் தொடர்ந்து மாயாவுடன் பேச முடியவில்லை. நிலைமையை உணர்ந்துகொண்ட பாக்யராஜ், என்னை ஆறுதல்படுத்தினார். அறிவுபூர்வமாக சில விளக்கங்களையும் சொன்னார்.

‘இதுல பெருசா ஒண்ணும் இல்லீங்க. எல்லாமே உங்க சப்கான்சியஸ்லெ இருந்ததுதான். உங்க விரல் மூலமா வெளிப்பட்டிருக்கு. மத்தபடி ஆவி வந்து போறதெல்லாம் நம்பறமாதிரி இல்லே. ஒரு ஆவி வந்து தன்னோட ஊரு பேரைச் சொல்றதுல என்ன அதிசயமிருக்கு. நாளைக்கு இதே இடத்துல இதே மணிக்கு என்ன நடக்கும்னு சொன்னா அது அதிசயம்.’
பாக்யராஜின் யதார்த்தத்தை வந்திருந்த மீடியம் ஒப்புக்கொள்வதாக இல்லை. ‘வீணாக நாம் இப்போ எந்த ஒரு ஆவியோட கோபத்துக்கும் ஆளாக வேண்டாம். இதோட பூஜையை முடிச்சுக்குவோம். அதுதான் எல்லாருக்கும் நல்லது.’

மீண்டும் அந்த இடத்தில் இருட்டுமாறி வெளிச்சம் வந்தது.

மறுநாள். நான் பாக்யா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் பொறுப்பில் இருந்ததால் அன்றும் இரவு 12 மணி அளவில் பத்திரிகை தொடர்பாக சந்திக்க வேண்டி வந்தது. அப்போது பாக்யராஜ் தான் போட்டிருந்த சட்டையைக் கழட்டினார். தனது முதுகை என் பக்கம் திருப்பிக் காட்டினார்.

முதுகில் யாரோ கூரிய நகங்களால் கீறிய ரத்தச் சுவடுகள் தெரிந்தன.

எனக்கு அதிர்ச்சி. நேற்று வந்த ஏதாவது வந்து பிராண்டிவிட்டுப் போனதா? பாக்யராஜும் அப்படி ஒரு பில்ட்-அப்தான் கொடுத்தார். மேலே நடந்த சம்பவங்களை எல்லாம் பாக்யாவில் எழுதலாம் என்னுமளவுக்கு நான் தயாராகி விட்டேன். கடைசியில் பாக்யராஜ் உண்மையைப் போட்டுடைத்தார்.

‘சஞ்சீவி, நான் சரியா நகம் வெட்டலை. குளிக்கும்போது முதுகு தேய்க்கறப்போ கீறல் விழுந்திருக்குது. ஒரு சுவாரசியத்துக்காக உங்ககிட்ட ஸ்கீரின் ப்ளே பண்ணி சொன்னேன். இப்படித்தான் இந்த பேய், ஆவி சமாசாரங்களை எல்லாம் இஷ்டத்துக்குப் பரவியிருக்கும்னு நினைக்கிறேன்.’

***

உண்டா, இல்லையா? கடவுளுக்கு அடுத்து அதிகம் விவாதிக்கப்படும் விஷயம் பேய்தான். ஆதி காலம் தொட்டு அறிவியல் ஆட்சி செய்யும் இந்தக் காலம் வரை அமானுஷ்யங்கள் மீதான அச்சமும் நம்பிக்கையும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றன. பல தனியார் சேனல்கள் இரவு பத்து மணிக்கு மேல் இந்த பேயை ஹீரோவாக வைத்துத்தான் நிகழ்ச்சிகளை ஒப்பேற்றிக் கொண்டிருக்கின்றன. பரபரப்பு வாரமிருமுறை இதழ்களிலும் ஆவி, பேய் செய்திகள் என்றாலே அதற்கு தனி மவுசுதான்.

ஆவி, பேய், பூதம், மோகினி, கொள்ளிவாய்ப் பிசாசு, காட்டேரி, காத்து, கருப்பு என்று பல வடிவங்களில் மனிதனின் மனத்தை ஆக்கிரமித்திருக்கும் பேய், நிஜமா, கற்பனையா? பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்திரீக விஷயங்களில் எவ்வளவு உண்மை உள்ளது? பேசப் பேச, எழுத எழுத தீராத சந்தேகங்களும் சுவாரசியமும் கொண்ட டாபிக் இது. உள்ளூரில் மட்டுமல்ல, முன்னேறிய நவீன நாடுகளிலும் பேய்கள் உலாவிக்கொண்டுதான் இருக்கின்றன. அறிவியலுக்கு பொருந்தாது என்று சொல்லி பேயை நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், பேயின் இருப்பை மறுதலிக்க முடிந்தது போல், பேய் பயத்தை ஒழிக்க அறிவியலாலும் முடியவில்லை என்பதுதான் நிஜம்.

அறிவியல், அமானுஷ்யம் இரண்டின் கலவையாக ‘பேய்’ என்ற புத்தகம், கிழக்கு வெளியீடாக சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வர இருக்கிறது. இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கும் சஞ்சீவியை, பாக்யா வாசகர்கள் ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள். சஞ்சீவி, ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘பாக்யா’ வார இதழின் நிர்வாக ஆசிரியராக பதினான்கு ஆண்டுகள் இருந்தவர். கண்ணன் சர்வதேச அறிவியல் ஆய்வு மையத்தின் நிறுவனர். அமானுஷ்ய விஷயங்கள் குறித்து அறிவியல்பூர்வமாக தொடர்ந்து எழுதி வருபவர். இந்தப் புத்தகத்தை எடிட் செய்த விதத்தில் என் கருத்து – மிக மிக சுவாரசியமான விஷயங்களும் கதைகளும் சம்பவங்களும் நிறைந்துள்ள, அறிவியல்பூர்வமான விளக்கங்களும் கொண்ட விறுவிறு புத்தகம்.

ஈசன் – முருகேசன்

முருகேஷ் என் நெருங்கிய நண்பன். நல்ல படைப்புத்திறன் உள்ளவன். எனக்கும் அவனுக்குமான ரசனை அலைவரிசை ஒன்றே. கல்லூரி நாள்கள் தொடங்கி இன்று வரை எங்களுக்கிடையேயான உரையாடல்களில் சினிமாவே அதிகம் இடம்பெறும். தற்போது அவன் ஹைதரபாத்தில் சாஃப்ட்வேரில் (வேண்டா வெறுப்புடன்) கல்லுடைத்துக் கொண்டிருக்கிறான். அவன் பார்த்த, அவனைக் கவர்ந்த படங்களுக்கான விமரிசனம் எழுதி எனக்கு அனுப்புவான். அவனுடைய நண்பர் வட்டத்துக்கும் அனுப்புவான். அதிலுள்ள பெரும்பாலான கருத்துகளில் எனக்கு உடன்பாடு இருக்கும். இதோ இன்றுதான் ஈசன் விமரிசனம் அனுப்பினான். நானும் ஈசன் பார்த்துவிட்டேன். அதற்கான விமரிசனத்தை நான் எழுதவில்லை. பதிலாக, நண்பன் முருகேஷின் கருத்துகளுடன் என்னுடைய சில கருத்துகளும் இணைந்த ஈசன் விமரிசனம் இதோ.

***

பார்த்துப் பார்த்து பழகிப்போன பாடாவதியான பழிவாங்கும் கதைதான். ஆனா, ‘வைக்கிறவ வச்சா ரசம் கூட திராச்சை ரசம்’ மாதிரியான கைப்பக்குவ மேட்டர்தான் ஈசனை ரசிக்க வைக்கிறது.

முக்கிய மந்திரி ஏ.எல் அழகப்பனின் (திமுகவின் ஒரு முக்கிய அமைச்சரின் மேனரிஸங்களை பிரதிபலிக்கிறார்) மகன் வைபவ் (கதாபாத்திரத்தின் பெயர் ‘செழியன்’). மந்திரிக்கே உரிய எல்லா தந்திரங்கள் கொண்ட தந்தை. மந்திரி பிள்ளைக்கே உரிய எல்லா ‘நல்ல்ல்ல’ பழக்கங்களுடன் பிள்ளை. அந்த தங்கமான புள்ள அங்கமெல்லாம் அடிவாங்கி கொலை செய்யப்படுகிறார். ஏன்? எப்படி? நடந்தது என்ன என்று விளக்குவதுதான் இரண்டாம் பாதி.

இது, அக்மார்க் அரசியல்வாதிக்கும், பொளந்து கட்டுற போலீஸுக்கும் நடக்கப் போற மோதல் கதையா? இல்லை, கோடீஸ்வரன் மகளுக்கும் கேடி மகனுக்கும் நடக்கிற காதல் கதையா? இல்லை, பண பலத்தையும் பதவி பலத்தையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிற வாடிக்கையான கதையா? ஒரு தெளிவே இல்லாமல் போகிறது திரைக்கதை, ஆனால் தெளிவான காட்சிகளுடன். சரியாகச் சொல்லவேண்டுமென்றால், இலக்கே இல்லாமல் வீசுகிற காற்று மாதிரி, எங்கே போகிறதென்று தெரியவில்லை. இருந்தும், சில்லென்றுதான் இருக்கிறது.

இரண்டாம் பாதியில், ஃப்ளாஸ்பேக் ஓப்பன் பண்ணும்போதே, விக்டிம் யாரு, கல்ப்ரிட் யாரு, இப்போது பழிவாங்குவது யார் என எல்லா விஷயங்களும் ரசிகர்களுக்கு முன்னமே தெளிவாகப் புரிந்துவிடுகிறது. சசிகுமாரும் அதில் பெரிதாக எந்த டிவிஸ்டும் வைக்க விரும்பவில்லை. இப்படித்தான் கதை போகுமெனத் தெரிந்தபின், ரசிகர்களை கட்டிப்போட்டு உட்கார வைப்பது ரொம்ப சிரமம். ஆனால், அந்த வேலையை சுலபமாகச் செய்துள்ளது சசிகுமாரின் மூளை. கேமரா ஆங்கிள், கதையோட பின்னணி, அங்கங்கே பார்க்க புதுசாக ஒரு சில காட்சிகள், நடிகை அபிநயா மேல் ரசிகர்களுக்கு இருக்கிற பிரியம், இப்படி எல்லாம் சேர்ந்து இழுவையான இரண்டாம் பாதிக்கு வலிமை சேர்க்கிறது.

அரசியல்வாதியில் ஆரம்பித்து அல்லக்கை வரைக்கும் அப்படியொரு அட்டகாசமான நடிகர் தேர்வு. ஈசன் கேரக்டர் ‘துஷ்யந்த்’, இந்த படத்துக்காகவே பிறந்த மாதிரி ஒரு அமைப்பு (‘பசங்க’ வாத்தியார் ஜெயபிரகாஷின் இரண்டாவது பையன். முதல் பையனும் இதில் நடித்திருக்கிறார், வைபவின் நண்பன் வினோத் பாத்திரத்தில்.). கொஞ்சம்கூட மீறாத மிரட்டல்.

அபிநயாவின் ஒவ்வொரு உணர்வையும் ரசிகர்களின் முகத்திலே பார்த்துவிடலாம். அவர் சிரிக்கும் போது மகிழ்ச்சியும், அழும்போது துயரமும் நம்மோடு ஒட்டிக்கொள்வதை மறுக்க முடியாது. அதுதான் அவரதும் வெற்றியும் கூட. குடிப்பது காபி இல்லை எனத் தெரிந்ததும், இயல்பாக நடிக்கிறது அவரது முகம்.

ஒரு சில காட்சிகளில் பார்வையாளர்களைக் கையைப் பிடித்து கூட்டி போகிற யுக்தி தெரிகிறது. நல்ல விஷயம்தான் என்றாலும், தேவைக்கும் அதிகமான நீளமாகத் தெரிகிறது. சுப்ரமணியபுரத்தில் சில முக்கியமான விஷயங்களைக்கூட கதாபாத்திரங்கள் பேசும் ஒருவரி டயலாக்கில் சொல்லிக் கொண்டுபோன சசிகுமார்தானா இது என்ற உறுத்தல் ஏற்படுகிறது. பல ஊர்களில் படத்தின் இரண்டாவது பாதியில் சுமார் இருபத்தைந்து நிமிடங்கள் கத்தரித்துவிட்டார்களாம். சந்தோஷம்.

ஈசனோட அறிமுகக் காட்சியில் இருக்கும் த்ரில், அமைச்சர் கேரக்டர் வழியாக கிழிக்கப்படும் நிகழ்கால திராவிட அரசியல்வாதிகளின் முகங்கள், அங்கங்கே பட்டாசாகச் சிதறுகிற காமெடி ஒன் லைனர்ஸ், பல இடங்களில் பளிச்சிடும் கூர்மையான வசனங்கள் – இன்னும் நிறைய இருக்கிறது நிறை என்று சொல்ல.
இருந்தாலும், பொழுதுபோக்குக்காக அரங்கினுள் நுழையும் ஜனரஞ்சக சினிமா ரசிகனின் பார்வையில் பார்க்கும்போது, ‘பழைய கதை, பபுள்கம் காட்சிகள், எதிர்பார்த்த ஃபிளாஸ்பாக்’ என்பதெல்லாம் பெரும் குறைகள்தாம்.

‘ராம்’ ஜீவாவுக்கும் ‘ஜித்தன்’ ரமேஷுக்கும் உள்ள சம்மந்தம்தான், ஈசனின் முதல் பாதிக்கும், இரண்டாம் பாதிக்கும். ஒரே டிக்கெட்டில் இரண்டு படம் பார்த்த மாதிரி ஓர் உணர்வு. இருந்தாலும் ஈசன், எந்த உலகப் படத்தையும் நினைவுபடுத்தவில்லை. சசிகுமாரும் தான் ஓர் உலகப் படத்தைப் படைத்துவிட்டதாக சேனல்களில் சொகுசு சோபாக்களில் அமர்ந்து மார்தட்டிக் கொள்லவில்லை. புதிய கதைக் களத்தில் ஒரிஜினலாக ஒரு படம் பார்த்த திருப்தி ஈசனில் கிடைக்கிறது.

படம் பார்க்க வந்திருந்தவர்களில் பெரும்பாலோனோர் சசிகுமாரும் நடித்திருக்கிறார் என்ற நினைப்போடு வந்து ஏமாந்துபோனார்கள். எல்லாம் டிரெய்லர் செய்த வேலை. ஒருவேளை, பாதிக்கப்பட்ட அக்காவுக்காக பழிவாங்கும் தம்பி என்பதற்குப் பதிலாக, பழிவாங்கும் அண்ணனாக சசிகுமார் நடித்திருந்தால் படம் பெரிய ஹிட் ஆகியிருக்கலாம். ஏனென்றால் நட்சத்திர வேல்யூ இல்லாத ஒரு படத்துக்கு இத்தனை பெரிய ஓப்பனிங் கிடைக்கிறதென்றால், அதற்கான ஒரே காரணம் சசிகுமார் மட்டுமே.

ஈசன் – சிற்பி கொத்தியிருக்கும் அம்மி. என் பார்வையில் சிலையாகத்தான் தெரிகிறது.

– முருகேஷ்

ஸ்ரீநிஷா – The Winner

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2-ல் விஜய் டீவி சேட்டன்கள், சேச்சிகள் அடிக்கும் கூத்துகளை பார்க்க சகிக்கவில்லை. மக்கள் மனத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் ப்ராடிஜியாக நிலைபெற்றுவிட்ட ஸ்ரீநிஷாவை அவர்களது ‘இன உணர்வு’ ஜட்ஜ்மெண்ட் ஏதும் செய்ய இயலாது.

இப்போது பைனல்ஸ் நடக்கிறதுபோல. நான் பார்ப்பதில்லை. என் மனநிலையில்தான் ஆயிரக்கணக்கான (லட்சக்கணக்கான என்றே சொல்லலாம்) ஸ்ரீநிஷா ரசிகர்களும் இருக்கிறார்கள் என்று உணரும்போது சற்றே மகிழ்ச்சியாக இருக்கிறது.

நிகழ்ச்சியில் நடுவர்களாக வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்களது எந்தத் தீர்ப்பும் அந்தக் குழந்தையை எந்தவிதத்திலும் பாதித்திருக்காது. ஏனென்றால் ஸ்ரீநிஷா தன் திறமை மேல் மட்டும் நம்பிக்கை கொண்ட குழந்தை.

வருங்காலம் அவளைக் கொண்டாடும். 25 லட்சம் மதிப்புள்ள வில்லாவை யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளட்டும். எத்தனையோ லட்சம் பேர் இதயத்தில் ஸ்ரீநிஷாவுக்கு நிரந்தர இடம் உண்டு.

ஜூன் 17ல் அல்காவோ, ஷ்ரவனோ அல்லது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட வேறு ஒருவருக்கோ பட்டம் அளிக்கப்படலாம். அந்தப் போட்டியாளருக்கு வாழ்த்துகள்!

பைனல்ஸ் வரை தேவதை ஸ்ரீநிஷாவையும், திறமையுள்ள இன்னொரு போட்டியாளர் பிரியாங்காவையும் கொண்டுவந்து கொடுமைப்படுத்தாத (மேலும் புண்படுத்தாத) விஜய் டீவிக்கு அன்பு கலந்த நன்றிகள்! இனிமேலும் நீங்கள் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்று விளம்பரப்படுத்தினால் அது செல்லுபடியாகாது.

ஸ்ரீநிஷாவுக்கான ஃபோரம்

ஸ்ரீநிஷா பற்றி அண்ணாச்சி

ஸ்ரீநிஷாவின் அற்புதமான பழம் நீ அப்பா பாடல்! டௌன்லோட் செய்ய.

சிங்கம் – சிங்கர் – ராவணன் – ராமர்

ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் பிரியர்களைத் தானாக தியேட்டருக்குள் இழுக்கும் டிரைலர். கௌபாய்களின் மேலோட்டமான வரலாறோடு இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம் ஆரம்பிக்கிறது. காமிக்ஸ் டைப் கதைதான்.

அருமையான செட்டுகள், அழகான, கச்சிதமான உடைகள் (கோயில் பட்டருக்குக்கூட கௌபாய் தொப்பி), ஆங்காங்கே காணப்படும் அறிவிப்பு, பெயர் பலகைகளில் எல்லாம் சிம்புதேவனின் கார்ட்டூன் டச் (தூக்குமேடையில் ‘இங்கே குரல்வளை நெறிக்கப்பட்டும்’), அமெரிக்கா, இலங்கை, இந்தியா, தமிழ்நாடு – அரசியல் குறித்து சிம்புதேவன் பிராண்ட் நக்கல் வசனங்கள், ரசிக்கும்படியான சில கதாபாத்திரங்கள், தன் நிழலைவிட வேகமாகச் சுடும் ஹீரோயிஸ நக்கல் – எல்லாம் தூள்.

திரைக்கதை? படத்தின் வேகம்? ஒட்டுமொத்த சுவாரசியம்? ???? ???????????????????????????????????????

இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் என்று டைட்டில் போடும்போதே அதிலிருக்கும் சிங்கம் ‘மியாவ்’ என்கிறது. படத்தின் திரைக்கதையும் அப்படித்தான் இருக்கிறது, சோப்ளாங்கி போல.

படத்தின் முதல் பாதியில் சில காட்சிகள் நச். இடைவேளைக்கு பிறகு புதையல் தேடிப் போகும் அரைமணி நேரம் சூப்பர். மற்றபடி சோம்பல் முறிக்க வைக்கிறது.

இம்சை அரசனோடு ஒப்பிட்டால் அதில் பாதிதான் இரும்புக் கோட்டை. அறை எண்ணை 305ல் கடவுளைவிட சுவாரசியமான படம் கொடுத்ததற்காக சிம்புதேவன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஜி.வி. பிரகாஷ் பாடல்களில் கைகொடுத்திருந்தால், கௌபாயாக வேறு யாராவது மாஸ் ஹீரோ நடித்திருந்தால் அல்லது வடிவேலுவே கௌபாய் ஆகியிருந்தால்  – படம் பெரிய ஹிட் ஆகியிருக்கலாம்.

சதம் அடித்திருக்கலாம், அரைசதத்திலேயே (இரும்புக்) கோட்டை விட்டுவிட்டார்கள்.

ஏதாவது படம் போய்த்தான் ஆகவேண்டும் என்றால், தாராளமாக குழந்தைகளோடு இரும்புக் கோட்டைக்குச் செல்லலாம்.

கொசுறு  : நேற்றிரவு காட்சிக்கு உதயத்தில் சுறா டிக்கெட் சுலபமாகக் கிடைத்தது.

***

விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் சறுக்கல் படு கேவலமாகத் தெரிகிறது. பைனலில் யாரை சூப்பர் சிங்கர் ஜுனியர் ஆக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். ஸ்கிரிப்ட்படி இப்போது நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

பைனலுக்கு வருவதற்கு திறமை தேவையில்லை. சில காரணிகள் போதும் என்று வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்த வாரத்தில் ‘எலிமினேட்’ செய்யப்பட்ட ஸ்ரீநிஷாவுக்கு வேண்டுமென்றே குறைவான மதிப்பெண்கள் கொடுத்து வெளியேற்றினார்கள். ஆனால் ஸ்ரீநிஷா அழுது அலட்டிக் கொள்ளவில்லை. நிஜமாகவே திறமையுள்ள குழந்தை. ‘என்னை ஜட்ஜ் பண்றதுக்கு நீங்க யாரு?’ என்பதுபோல சிரித்துக் கொண்டே வெளியேறியது.

அடுத்து வைல்ட் கார்ட் ரவுண்ட் என்று இன்னொரு நாடகம் நடத்துவார்கள். அதிலும் ஸ்ரீநிஷா பாடுவாள். இருந்தாலும் ஸ்ரீநிஷா இல்லாத எபிசோடுகளைப் பார்ப்பதாக உத்தேசம் இல்லை.

***

ராவணன் பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். கேட்கக் கேட்க உள்ளுக்குள் இறங்கிக் கொண்டே இருக்கின்றன. கார்த்திக் பாடும் ‘உசிரே போகுதே’ பாடல் நிச்சயம் ஹிட். அடுத்த இடம் ‘கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு.’

அனுராதா ஸ்ரீராமின் குரல் கொஞ்சம் உறுத்துவதால் ‘காட்டுச் சிறுக்கி’ பாடலில் முழுமையாக லயிக்க முடியவில்லை. ஆனால் இதே பாடலின் ஹிந்தி வெர்ஸன் அசத்தல். கள்வரே என்ற பாடல், ஷ்ரேயா கோஷல் பாடியது. வழக்கம்போல குரல் தேன். வரிகள் ஹிந்தி மெட்டுக்கேற்ப ஆங்காங்கே துருத்தி கொண்டிருக்கின்றன. வைரமுத்துவின் வார்த்தைகள் வளைந்துகொடுக்கவில்லை.

மணிரத்னம் படங்களில் ஹிந்தி – தமிழ் என இரண்டு மொழிகளிலும் சேர்ந்து பொருந்திப் போகும்படியாக, ரசிக்கும்படியாக ‘உயிரே’ பாடல்கள் இருந்தன. அடுத்ததாக ‘பம்பாய்’ சொல்லலாம். குரு சொதப்பல். அந்த விதத்தில் ராவணன் பாடல்களும் தடுமாறவே செய்கின்றன.

படத்தில் மலை ஜாதி மக்கள் தலைவன் விக்ரம் (ராவணன்), அவரது தங்கை ப்ரியா மணி (சூர்ப்பநகை), போலிஸ் ஆபிஸர் பிரித்விராஜ் (ராமன்), அவரது காதல் மனைவி ஜஸ்வர்யா ராய் (சீதை).

கதை? புரிந்திருக்குமே. படத்தின் ஸ்டில்களும் நம் நினைப்பை உறுதிப்படுத்துகின்றன.

சில பாடல் வரிகள் கவனிக்கப்பட வேண்டியவை.

என் பொறப்பு நீ கண்டா

என் பாதை நீ கடந்தா

என் யுத்தம் நீ செஞ்சா

நீ ராமந்தேன் ராவணந்தேன்..

ரெண்டும்தேன்…

– வீரா என்ற பாடலில் விக்ரமின் கேரக்டரை விளக்குவதாக வரும் வரிகள் இவை.

விக்ரம் தன் இனத்தவர்களுடன் ஆடிப்பாடும் ஒரு பாடல் இப்படி ஆரம்பமாகிறது.

கெடா கெடாக்கறி அடுப்புல கெடக்கு

மொடா மொடா கள்ளு ஊத்து

….

இவ கண்ணால பாத்தா சானகி அம்சம்

கட்டில்மேல பாத்தா சூப்பநகை வம்சம்…

– ராவணன் மது, மாமிசம் சாப்பிடுபவரா? சூர்ப்பநகை வரிகள் என்ன சொல்ல வருகின்றன?

ஐஸ்வர்யா ராயைக் கடத்தி காட்டில் வைத்திருக்கும் விக்ரம் மன சஞ்சலத்தோடு பாடும் ‘உசிரே போகுதே’ பாடலில் சில வரிகள்.

உடம்பும் மனசும் தூரம் தூரம்

ஒட்ட நினைக்கேன் ஆகல…

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய உடம்பு கேக்கல

சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

சத்தியமும் பத்தியமும் இப்ப தலைசுத்திக் கெடக்குதே

***

வழக்கம்போல படம் வெளிவருவதற்கு முன்பாகவே அதைப் பற்றி பேச வைக்கும் வித்தையில் வெற்றி கண்டிருக்கிறார் மணிரத்னம். ஆனால் பாடல் வரிகள் ராவணனை நல்லவிதமாகச் சொல்வதாகத் தோன்றவில்லை.

காத்திருப்போம். மணிரத்னத்தின் ராவணன், நல்லவனா அல்லது கெட்டவனா என்று தெரிந்துகொள்ள.

***

எப்போது ஆரம்பித்தார்கள், யார் எடுக்கிறார்கள், யார் நடிக்கிறார்கள், என்ன கதையாக இருக்கும் என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் படத்தின் தலைப்பை மட்டும் வைத்து கவனம் ஈர்த்து விட்டார்கள்.

ராமர்.

ராவணன் வரும் நேரத்தில் இந்தப் படமும் நன்றாகவே விளம்பரப்படுத்தப்படுகிறது. சூப்பர் ஹிட் பாடல்கள் என்று தினமும் விளம்பரம் வருகிறதே என்று அதையும் கேட்டுப் பார்த்தேன்.

புது இசையமைப்பாளர் போல. சார்லஸ் மெல்வின். பென்னி தயாள், ஹரிசரன் என்று தற்போதைய முன்னணி பாடகர்கள் என்று எல்லோரும் பாடியிருக்கிறார்கள். பாடல்கள் ‘அட புதுசா இருக்குதே’ என்று புருவம் உயர்த்த வைக்கவில்லை என்றாலும் சிலமுறை கேட்கலாம் என்ற தரத்தில் இருக்கின்றன.

திராவக வெண்ணிலா – என்றெல்லாம் தமிழுக்கு புது வருணிப்புகளை அருளியிருக்கிறார் இளைய கம்பன்.

படம் வரட்டும். விமர்சனம் யாராவது எழுதினால் படிக்கலாம்.

***

இந்தக் கட்டுரைக்கு வந்த தம்பி ஒருவர் எழுதிய கமெண்ட்:

ராவணன் படத்தில் இன்னும் ஒருபாடல் இருக்குங்கண்ணா.

‘கோடு போட்ட கொன்னுபோடு ..வேலி போட்டா…’

இந்த்த பாடலை மட்டும் ஏன் நீங்க கேட்கலைய அல்லது புரியலையா? இத மட்டும் தவிர்த்து ஏன்?கொஞ்சம் உண்மைகள் கலந்திருப்பதாலா?

கோடு போட்டா கொன்னுபோடு. வேலிபோட்ட வெட்டிப்போடு. நேத்துவரைக்கும் உங்கசட்டம். இன்னைக்கு இருந்து என்கசட்டம். சோத்துல பங்கு கேட்டா எலய போடு எலய

சொத்துல பங்கு கேட்டா அவன் தலைய போடு தலய

ஊரா வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது….

பாட்டன் பூட்டன் சொத்த யாரும் பட்டா போடகூடாது

பழங்குடி இனமக்களின் போராட்டத்தை நல்லாச்சொன்ன இந்த பாட்டைமட்டும் விமர்சனம் பண்ணாதது இதிலிருக்கும் உண்மையினாலா?
-தம்பி

பதிலை எதிர்பார்க்கிறேன்.