விடுகதையா பொது வாழ்க்கை? – வைகோ விரக்தி

(வைகோவின் சோகப்பாட்டு)

விடுகதையா பொது வாழ்க்கை?
விடைதருவார் இங்கு யாரோ?

எனது ‘சிஸ்டர்’எனை அடிப்பதுவோ?
மாம்பழம் கொண்டு துரத்துவதோ?
ஏழு என்றிருந்த என் நினைப்பில்,
மூன்றுலாரி மண் விழுகிறதோ?

ஏனென்று கேட்கவும் நாதியில்ல.
ஏழையின் கட்சிக்கு சின்னமுண்டு, சீட்டு இல்லை

பம்பரம் சுற்றுமென்று படம்காட்ட முடியும்
சாட்டையைப் பிடுங்கிட்டால் சகிக்கவா முடியும்?

கட்சியில் மிஞ்சியிருக்கும் கடைசி தொண்டன் கேட்டான்
நான் செய்த பாவம் என்ன?

(மிஸ்டர் பொதுஜனத்தின் எசப்பாட்டு.)

விடுகதைதான் பொது வாழ்க்கை
விடைதருவாய் இங்கு நீயே.

உனது ராஜாங்கம் இதுதானே
கூட்டணி வேண்டாம் நல்லவனே
துண்டுகள்தேடி நீ சென்றால் தொல்லைகள்தான் தூயவனே

காவிரிவேண்டி நீ நடந்தாய்
பின்பு போயஸில் எதைநாடி நீ மறைந்தாய்?
காவியங்கள் உனைபாடக் காத்திருக்கும்போது
காவிக்கட்சி கரம்பிடித்தால் மீண்டும் வரும் தீது
வாழ்வை நீ தேடி அங்குமிங்கும் போனால்
நாங்கள் மறந்திடுவோம்.

‘தேர்தலில் எனது ஆதரவு அர்த்தமற்றது’ – கமலஹாசன் அதிரடி!

‘தேர்தல்ல எந்தக் கட்சியை நான் ஆதரிக்கேனோ அந்தக் கட்சிக்கு டெபாசிட் ‘டப்பா’சிட் ஆயிடுது. ஸோ, அனைத்துக் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தத் தேர்தல்ல என்னோட ஆதரவு யாருக்கும் கிடையாது’ன்னு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கம்போல அறிக்கை விடப்போறாரு. அதைக் கேட்டதுக்கு அப்புறம் எல்லாக் கட்சிக்காரங்களும் பெருமூச்சு உட்டு நிம்மதியா இருப்பாங்க. ஆனா பத்திரிகைக்காரங்களுக்கு பரபரன்னு பத்திக்கிறாப்ல நியூஸ் வேணுமே, என்ன செய்யன்னு யோசிச்ச, குறுகுறு நாளிதழின் குறும்புக்கார நிருபர் ஒருவர் சில வி.ஐ.பிக்களைத் தேடி ஓடுனாரு. ‘உங்க ஆதரவு யாருக்கு’ன்னு தோண்டித் துருவிக் கேட்டாரு. ‘இது என்னடா வம்பாப் போச்சு’ன்னு அவங்க திக்கித் திணறி, விக்கி விழுங்கி சொன்ன பதில்தான் இது.



(முதலில் அந்த நிருபர் சென்ற இடம் ஆழ்வார்பேட்டை ஆண்டவனின் வீடு.)

நிருபர் : சார் வணக்கம். நீங்க சொல்லிட்டிங்கன்னா தலைப்புச் செய்தியா தட்டி விட்டிரலாம்.
கமல் : ஹாங்.. வெல்.. ‘தலைவன் இருக்கிறான்’ அறிவிப்பு அடுத்த மாசம் வந்துரும். அதை நான் ரெண்டு லாங்குவேஜ்ல.. ஐ மீன் டூ மொழி.
நிருபர் : அதை விடுங்க சார். வர்ற தேர்தல்ல, நீங்க யாரை ஆதரிக்கப்போறீங்க?
கமல் : தேர்தல். யெஸ். ஆதரவுங்கிறது எல்லாத்துக்குமே வேணும். ஒரு குழந்தைகிட்ட போய் அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமான்னு கேட்டா அது சாதுர்யம் இல்லாத குழந்தைன்னா திருதிருன்னு முழிச்சிக்கிட்டு என்ன சொல்லன்னு தெரியாம, அடுத்த நிமிஷமே அதை மறந்து போயிரும். அதே குழந்தை புத்திசாலியா இருந்தா, அம்மா, அப்பா ரெண்டு பேரையுமே பிடிக்கும். ஓடிப் போன சித்தப்பாவைக் கூட எனக்குப் பிடிக்கும்னு சிரிச்சுக்கிட்டே சொல்லும். நான் சாதுர்யம் இல்லாத குழந்தையும் இல்ல. புத்திசாலிக் குழந்தையும் இல்ல. ஏன்னா நான் குழந்தையே இல்ல. அரசியல் கர்ப்பப்பையில் நான் இன்னும் கருத்தரிக்கவே இல்லை. கருத்தரிக்கவும் வாய்ப்பில்லை.  பூமியில ஒரு செடி முளைச்சு, கொடியாப் படரணும்னா அதுக்கு ஒரு குச்சி இருந்தா ஆதரவா இருக்கும். அந்தக் கொடி…
நிருபர் : எந்தக் கொடி சார்?
கமல் : கொடின்னா துணியால ஆனதா இருக்கலாம். ஆனா கொடியில துணியும் காயப்போடலாம். வடிவம் முக்கியம். ஐ மீன் பரிமாணம். பரிணாம வளர்ச்சி அடைய அடைய பரிமாணங்கள் நிறைய மாறுது. மாற்றம்தான் வாழ்க்கை.
நிருபர் : அதனால அரசியல்ல, ஆட்சியில மாற்றம் வரணும்னு சொல்லுறீங்களா?
கமல் : இல்ல. ஐ நெவர் மீன் தட். வார்த்தைகளைவிட அதோட அர்த்தம் ரொம்ப முக்கியம். அர்த்தங்களில்லாத வார்த்தைகள் இருக்கலாம். ஆனா ‘அர்த்தம்’ங்கிறதே ஒரு வார்த்தைதான்.
நிருபர் : அர்த்தம் புரிஞ்சிடுச்சு. ஓ.கே. தாங்க்யூ சார்.

(அடுத்த நாள், அப்பத்திரிகையில் ‘தேர்தலில் எனது ஆதரவு அர்த்தமற்றது’ – கமலஹாசன் அதிரடி!’ – என செய்தி மின்னுகிறது.

நிருபரின் அடுத்த டார்கெட் – கவுண்டமணி.)

நிருபர் : சார், ஒருகாலத்துல நீங்க இல்லாம எந்தப் படமும் இல்ல. ஆனா இப்ப எந்தப் படத்துலயும் நீங்க இல்ல. இனியும் தமிழ்நாட்டுல பல்லு போன பெரிசுங்க டூ பல்லு முளைக்காத பொடிசுங்க வரைக்கும் உங்களை நியாபகம் வைச்சிருக்கணும்னா நீங்க தேர்தல்ல யாரை ஆதரிப்பீங்க?
க.மணி : அடேய்! நானே ஆதரவு இல்லாம இருக்கேன். என்ன நக்கலா? என் வாயைப் புடுங்கி வம்பிழுக்கத்தான் இந்த ஒண்ணரையனா நோட்டையும், ஒழுகுற பேனாவையும் தூக்கிட்டு வந்தியா?
நிருபர் : உங்க ‘அடி’ஆள் செந்திலைப் பத்தி என்ன நெனைக்கிறீங்க?
க.மணி : அவன் என்ன ‘செக்கிழுத்த செம்மலா’? நினைச்சுக்கிட்டே இருக்கறதுக்கு. அடேய் பொறக்கறப்பவே மண்டையில மசுரில்லாம பொறந்த லொள்ளு புடிச்ச பெரிசு சத்யராஜெல்லாம் நமீதாகூட இன்னும் லவ்ஸ் பண்ணிக்கிட்டிருக்காரு. என்னை மாதிரி வளர்ந்து வர்ற நடிகனை அதுக்குள்ள வி.ஆர்.எஸ். கொடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டீங்களேடா! இது உங்களுக்கே நல்லா இருக்கா?
நிருபர் : உங்க கூடப் பொறக்காத தம்பி கார்த்திக்கைத்தான் நீங்க தேர்தல்ல ஆதரிக்கப்போறதா பேச்சு வந்துதே?
க.மணி : எந்தக் கருமாந்திரம் புடிச்ச நாயோ சொல்லிருக்கு. எனக்கு கூடப் பொறக்காத தம்பி, குறையாப் பொறக்காத தம்பின்னு யாருமே கிடையாது. நானே எனக்குத் தம்பி. நானே எனக்கு அண்ணன். நோ மோர் பிரதர்ஸ். பால் குடிச்சுட்டு வீட்டு பால்கனில ஒக்காந்து நிம்மதியா பறாக்கப் பாத்துக்கிட்டிருக்கிற எனக்கு பாலிடிக்ஸ் தேவையா?
நிருபர் : நீங்க வெளியில இருந்து ஆதரவு கொடுக்கறதுன்னா யாருக்கு கொடுப்பீங்க?
க.மணி : வாங்கடா வாங்க. எத்தனை பேருடா இப்படி கிளம்பியிருக்கீங்க? வாய்ப்பு இருக்கறதா எவனையோ ஏத்திவுட்டு வருங்கால முதல்வர்னு சொல்லுவீங்க. வாக்கு வங்கி இருந்தா வாய்ஸ் கொடுக்கச் சொல்லி நோண்டி விடுவீங்க. வக்கத்துக் கிடக்குறவனை ஏண்டா பிச்சுப் பிறாண்டுறீங்க. என்னைக் கொலகாரனாக்காதீங்க..
(கவுண்டமணி ஹை-டெசிபலில் கத்த, நிருபர் காதை பொத்திக் கொண்டே அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். அடுத்த நாள் நாளிதழில் “கார்த்திக்கை நான் ஆதரிக்கவில்லை” – கவுண்டமணி திட்டவட்ட அறிவிப்பு!’ என செய்தி இளிக்கிறது.)

பாமக பொதுக்குழுவில் மீண்டும் வாக்கெடுப்பு!

பாமக பொதுக்குழு இன்றும் பட்டவர்த்தனமாகக் கூடியது. இன்றும் ஒரு புதிய வாக்கெடுப்பை நடத்தினர். தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவதற்குள் பாமகவின் தேர்தல் கூட்டணி முடிவு குறித்த தெளிவான, குழப்பமில்லாத, கொள்கைப்பிடிப்புமிக்க, லாபகரமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமுக்கம் மைதானத்தில் ஐபிஎல் நடைபெறும் : அழகிரி அதிரடி

‘ஐபிஎல் என்பது இந்தியாவின் பாரம்பரியம். அதை மதுரையிலேயே நடத்திக் காட்ட நான் தயார்’ என்று திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி கூறியுள்ளார்.

நேற்று இரவு மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :

‘இந்தியன் பிரிமியல் லீக், இந்தியாவில்தான் நடத்த வேண்டும். தேர்தல் என்ற ஒரு காரணத்தினால் அதை இங்கிலாந்துக்கோ, தென் ஆப்பிரிக்காவுக்கோ மாற்றுவதை திராவிட இதயங்கள் விரும்பாது. ஆகவே இந்தியாவின் பாரம்பரியம் நிறைந்த, ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் மதுரையிலே யே நடத்திக் காட்ட நான் தயாராக இருக்கிறேன். இங்கே தமுக்கம் இருக்கிறது,  வண்டியூர் தெப்பக்குள மைதானம் இருக்கிறது, மேலும் பல பள்ளி, கல்லூரிகளின் மைதானங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும்விட விளையாட வரும் வீரர்களுக்கு எமது தொண்டரடிப்படையினர் குவாலிஸ்களில் வலம்வந்து தக்க பாதுகாப்புகளை அளிப்பார்கள்.  இதனால் மதுரையில் மக்களவைத் தேர்தல் பணிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.  திருமங்கலம் இடைத்தேர்தல் போலவே எல்லாம் சுபிட்சமாக நடக்கும். இந்தியாவின்  நலன் கருதி, கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பத்துக்காக நான் எடுத்திருக்கும் இந்த  முடிவை லலித்மோடி வரவேற்பார் என்று நம்புகிறேன்.’

இவ்வாறு அழகிரி பேசினார்.

இதற்கிடையில் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் போட்டிகளை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத்  தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா  அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

‘ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மதுரையில் நடத்த வைத்து அதை எம்பிஎல் (மதுரை  பிரிமீயர் லீக்) என்று பெயர் மாற்ற கருணாநிதியின் குடும்பத்தினர் முயற்சி செய்கிறார் கள். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதன்மூலம் தேர்தலில், மக்களின் கவனத்தைத் த ங்கள் பக்கம் இழுக்கலாம் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். அவர்களுக்கும் எம்பிஎல்லும் கிடைக்கப்போவதில்லை, ஒரு எம்பி சீட்டும் கிடைக்கப்போவதில்லை.  டுவெண்டி டுவெண்டி போட்டிகள் மதுரையிலேயே நடந்தாலும், கருணாநிதியின் கட்சிக்கு நாற்பது தொகுதிகளிலும் தோல்விதான் கிடைக்கப்போகிறது என்பது மக்களுக்கே  தெரியும். தேர்தல் கமிஷனும் இந்திய கிரிக்கெட் வாரியமும் கருணாநிதி குடும்பத்தின்  குறுக்குபுத்தி வேலைகளுக்கெல்லாம் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்.’

இவ்வாறு ஜெயலலிதா தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று காலையில் வீரத்தளபதி என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நடிகர்  என்று சொல்லிக்கொள்ளும் ஜே.கே. ரித்தீஷ், அவசர அவசரமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘மதுரையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் பட்சத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தலைமையேற்று விளையாட கேப்டன் தோனி  மறுத்துள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த நட்சத்திர கிரிக்கெட்  போட்டியில் வீரமாக விளையாடிய அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். சென்னை  சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்க நான் தயார்’  இவ்வாறு அவர் கூறினார்.