புதிய தொடர்

தமிழக அரசியல் இதழில் தொடர் அறிவிப்பு

தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வரும் ஞாயிறு இதழ் முதல் இரு புதிய தொடர்கள் ஆரம்பமாகின்றன. அதற்கான அறிவிப்பு இது. மர்மமான ஒரு களத்தில் ஏகப்பட்ட சுவாரசியங்களுடன் நான் களமிறங்குகிறேன். நண்பர் முத்துக்குமார் தனக்குப் பரிச்சயமான ஒரு களத்தில் புதிய கோணத்தில் களமிறங்குகிறார். படியுங்கள். தங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

இது எனக்கு மூன்றாவது தொடர். தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி.

திருப்பூர் தமிழ்ச் சங்கம் – விருதுகள் 2009

திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருதுகள் 2009, பரிசளிப்பு விழா, நாளை (29 ஜனவரி, 2011) சனிக்கிழமை, புத்தகக் கண்காட்சி அரங்கத்தில் (டைமண்ட் தியேட்டர் திரையரங்கம் எதிரில், மங்கலம் ரோடு) நடைபெற இருக்கிறது. இன்று இரவு திருப்பூர் கிளம்புகிறேன். நாளை விழாவிலும், திருப்பூர் புத்தகக் கண்காட்சியிலும் இருப்பேன்.

விருது பெற்றவர்கள் பட்டியல்.

முகலாயர்கள் – திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது

2009 டிசம்பரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட எனது முகலாயர்கள் புத்தகத்துக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கம் ‘இலக்கிய விருது 2009’ கிடைத்திருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

2009 திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றுள்ள இன்னொரு புத்தகம், இலந்தை சு. ராமசாமி எழுதியுள்ள மகாகவி பாரதி. அவருடைய எடிசனும் ஹென்றி ஃபோர்டும் என் மனத்துக்குப் பிடித்த புத்தகங்கள். வாழ்த்துகள் இலந்தை சார்.

தமிழக அரசு விருதுகள் பெற்றுள்ள காப்பிரைட் நூல் ஆசிரியர் சொக்கலிங்கத்துக்கும், சந்திராயன் புத்தக ஆசிரியர் சரவண கார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள். என்.ஹெச்.எம் ரைட்டர் + கணியன் பூங்குன்றனார் விருது புகழ் நண்பர் நாகராஜுக்கு சிறப்பு வாழ்த்துகள்.

கழுதைப்பால் கட்டழகி!

மொத்தம் எழுநூறு கழுதைகள். அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனை வளாகத்தில் அவற்றைப் பராமரிக்கவே தனி ‘தொழுவம்’ இருந்தது. கழுதைப் பால் கறப்பவர்களின் வேலை காலை முதலே ஆரம்பித்துவிடும். தூசு, துரும்பு எதுவும் இல்லாத அக்மார்க் கழுதைப் பால் மதிய நேரத்தில் அந்தப்புரத்துக்குள் கொண்டு செல்லப்படும். குளிக்கும் தொட்டிக்குள் நிரப்பப்படும். மாலை நேரத்தில் தோழிகள் சூழ அங்கு வரும் கிளியோபாட்ரா, குளியல் தொட்டிக்குள் இறங்கி கழுதைப் பாலில் ஊற ஆரம்பிப்பாள்.

காலம் காலமாக கிளியோபட்ரா குறித்து சொல்லப்பட்டு வரும் சம்பவம் இது.  சமீபத்தில் ஹலோ எஃப்.எம்மில் புத்தகக் கண்காட்சி புதுவரவுகள் குறித்து பேட்டி கொடுத்த பாரா, ‘கிளியோபாட்ரா புத்தகம்’ வெளிவருவதாகச் சொன்னார். உடனே ஆர்ஜே (மிஸ்டர்) பாலாஜி கேட்ட கேள்வி, ‘கிளியோபாட்ரா கழுதைப்பால்ல குளிப்பாங்கன்னு சொல்றது நிஜமா?’

கிளியோபாட்ரா என்றாலே பலரது மனத்தில் தோன்றும் அடுத்த வார்த்தை ‘கழுதைப்பால்.’ அப்படி என்னதான் இருக்கிறது கழுதைப்பாலில்?

கிட்டத்தட்ட மனிதனின் தாய்ப்பாலுக்குச் சமமானது கழுதைப்பால். லாக்டோஸ் அதிகமுண்டு, பசும்பாலைவிட கொழுப்பு குறைவு. அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பதில் கழுதைப்பாலும் கொடுத்திருக்கிறார்கள். மருத்துவத்துக்கும் பல்வேறு விதங்களில் உபயோகிப்படுத்தி இருக்கிறார்கள். அழகுக் குறிப்புகளும் கொடுக்கிறார்கள். கழுதைப்பாலில் குளித்தால் முகச்சுருக்கங்கள் வரவே வராது. தோலில் மினுமினுப்பு அதிகரிக்கும். வெண்மை நிறம் மிளிரும். ஒரு நாளில் ஏழுமுறை கழுதைப் பாலில் முகம் கழுவினால் முகம் என்றென்றைக்கும் புத்துணர்வுடன் இருக்கும்.

கி.பி. 30 முதல் 65 வரை வாழ்ந்த ரோம் அரசி சபினா (பிடில் புகழ் நீரோவின் இரண்டாவது மனைவி), கழுதைப் பாலில் குளித்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அவள் எங்காவது வெளியூர் சென்றாலும் அவளுக்காகக் கையுடனேயே அண்டா அண்டாவாக கழுதைப்பால் கொண்டு செல்வார்களாம் அல்லது நூற்றுக்கணக்கான கழுதைகளையே ஓட்டிக் கொண்டு செல்வார்களாம். நெப்போலியனின் தங்கை பவுலினும் கழுதைப் பாலில் குளித்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. இருக்கட்டும், கிளியோபட்ரா? அந்த விஷயத்துக்கு அப்புறமாக வருவோம்.

எகிப்தியர்களுக்குக் காலை எழுந்தவுடன் குளிக்கும் வழக்கம் இருந்ததில்லை. வேலையெல்லாம் முடித்துவிட்டு, வெயில் விடைபெறும் வேளையில் மாலைக் குளியல் போட்டிருக்கிறார்கள். அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனையில் இளவரசியாக சகல வசதிகளுடன் வளர்ந்துவந்த கிளியோபட்ராவும் அந்த வழக்கத்தைத்தான் கடைபிடித்திருக்கிறாள்.

அரண்மனைக்குள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே குளியல் தொட்டிகள் இருந்தன. வெந்நீர்க் குளியலுக்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. கிளியோபாட்ரா ஆலிவ் எண்ணெய் தேய்த்து குளித்தாள். உடல் தேய்த்துக் குளிக்க, வளைவான தகடு (Strigil) ஒன்றை உபயோகப்படுத்தினாள். குளியலை முடிக்க குறைந்தது இரு மணி நேரம் பிடிக்கும்.

கிளியோபாட்ரா உபயோகப்படுத்திய இன்னொரு முக்கியமான அழகுப் பொருள் மருதாணி. கூந்தலில், கைவிரல்களில், பாதங்களில் மருதாணி உபயோகப்படுத்தினாள். தவிர முகத்துக்கான இயற்கை கிரீம்கள், கண்ணுக்கான மை, உதட்டுக்கான சாயம், முகப் பொலிவுக்கான பூச்சுகள், வாசனைக்கான திரவியங்கள் – எல்லாமே உபயோகப்படுத்தியிருக்கிறாள்.

படுத்திக் கொள்ளட்டும். அவள் பொன்வண்டு சோப்பு வேண்டுமானாலும் தேய்த்துக் குளித்திருக்கட்டும். அதெல்லாம் விஷயமே இல்லை. கழுதைப்பாலில் குளித்தாளா?

சான்றுகள் எதுவும் இல்லை. எகிப்தில், கிரீஸில், ரோமில் வாழ்ந்த உயர்குடிப் பெண்கள் எல்லோருமே பாலில் குளிக்கும் வழக்கத்தைக் கடைபிடித்தார்கள். அந்த விதத்தில் கிளியோபாட்ராவும் பாலிலோ, கழுதைப் பாலிலோ (ஆரோக்யா நாலரை பாலிலோ) குளித்திருக்கலாம். இதில் கவனிக்கப்பட (சந்தோஷப்பட) வேண்டிய விஷயம் எகிப்தியர்களுக்குத் தினமும் குளிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதுதான்.

கழுதைப்பாலைத் தாண்டியும் கிளியோபாட்ரா பற்றி தெரிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவளது பிறப்பு முதல், அவள் பேரழகியா, நல்லவளா, இனவெறி பிடித்தவளா, தற்கொலை செய்துகொண்டாளா என்பதுவரை ஏகப்பட்ட சர்ச்சைகள் நிறைந்து கிடக்கின்றன. கிளியோபாட்ரா குறித்து ஏற்கெனவே பலவிதமான தகவல்கள் சேகரித்து வைத்திருந்தேன். 2010ல் அவள் வாழ்க்கை குறித்த புத்தகத்தை எழுத முடிவு செய்தேன். எழுதி முடித்தேன். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன்பாகவே எனக்குத் திருமணம் நடந்துவிட்டது என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிவிக்கக் ‘கடாமைப்பட்டிருக்கிறேன்.’ (ஆதாரம் : பாரா – http://www.writerpara.com/paper/?p=1786 பத்ரி – http://thoughtsintamil.blogspot.com/2011/01/3.html)

கிளியோபாட்ரா, சென்னை புத்தகக் கண்காட்சி கிழக்கு ஸ்டாலில் (F13, F14, F15) கிடைக்கும். ஆன்லைனில் வாங்க.