சென்னை புத்தகக் கண்காட்சி 16.01.2014

விற்க அதற்குத் தக!

பொதுவாக காணும் பொங்கல் அன்று சென்னை புத்தகக் கண்காட்சி களைகட்டும். மாலை ஆறு மணிக்கு மேல் உள்ளே நுழையும்போதே மூச்சு முட்டும். ஆனால், இன்று?

புத்தகக் கண்காட்சி அரங்கினுள்ளே ஒரு புட்ஃபால் கோல் போஸ்ட்டையும் உள்ளடக்கி கடைக்கள் அமைத்துள்ளார்கள். அந்த கோல் போஸ்ட்டைக் குறிவைத்து சில கடைக்காரர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். (வயிற்றெரிச்சலை வேறு எப்படிச் சொல்ல?)

‘வருடந்தோறும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது’ என்பது பொதுவாகச் சொல்லப்படும் ஸ்டேட்மெண்ட். ‘அது பொய்’ என்று சொல்கிறது நிகழ்காலம்.

‘சுத்தமா விளம்பரமே இல்லை. வழக்கத்தைவிட விளம்பரம் ரொம்பக் குறைவு. மக்களுக்கு புக்ஃபேர் நடக்குறதே தெரியலை’ என்பது ஒரு பதிப்பகத்தாரின் கருத்து. ‘பொருளாதார மந்தம். புக் விலையெல்லாம் அதிகமாயிட்டே போகுது. அதான் மக்கள் வாங்குறதைக் குறைச்சுக்கிட்டாங்க’ என்பது ஒரு கடைக்காரரின் ஸ்டேட்மெண்ட். ‘பொங்கலுக்கு வெளியூருக்குச் சென்றிருக்கும் தமிழ்நாட்டின் பிற மாவட்ட சென்னைவாசிகளெல்லாம் நாளைக்குள் ஊர் திரும்பிவிடுவார்கள். சனி, ஞாயிறு தினங்களில் கூட்டம் சந்தோஷப்பட வைக்கும்’ என்பது என் எண்ணம்.

இன்று, இரண்டு புத்தகங்கள் மட்டும் வாங்கினேன். எம்.ஜி.ஆர். பேட்டிகள் தொகுப்பு. கிருபாகரன் என்பவர் தொகுத்துள்ள இந்தப் புத்தகத்துக்காக பல பேட்டிகளைக் கொடுத்து உதவியவர், எனது நீண்ட நாளைய நண்பரான ஜெயபாபு. இவர் பழைய பத்திரிகைகள், புகைப்படங்கள் சேகரிப்பாளர். புத்தகம் பல இடங்களில் கிடைக்கிறது.

வாங்கிய இரண்டாவது புத்தகம், அடைபட்ட கதவுகளின் முன்னால். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் அனுபவங்களைச் சொல்லும் புத்தகம். அந்தத் தாயார் ஸ்டாலில் இருந்தார்கள். பில் போட்டுக் கொடுத்தார்கள். (திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றிய பதிப்பகம் ஸ்டால் எண் 273 – 94430 58565.)

டிஸ்கவரி புக் பேலஸில் சட்டென ஒரு புத்தகத்தின் தலைப்பு கவர்ந்திழுத்தது. ‘விற்க அதற்குத் தக!’ – விற்பனையாளர்களுக்கான கையேடு. ஆனால், அட்டை வடிவமைப்பும், புத்தக வடிவமைப்பும் ஆக மோசம். விற்பனை குறித்த அந்தப் புத்தகம் தன்னைத் தானே விற்றுக்கொள்ளும் தரத்தில் இல்லாதது சோகமே.

டிஸ்கவரி புக் பேலஸில் கண்ட இன்னொரு விஷயம், பொன்னியின் செல்வன் ஆடியோ சிடி. எம்பி3 வடிவில். ஆறு சிடிக்கள் என்று நினைக்கிறேன். சுமார் 78 மணி நேரம் ஓடக்கூடியது. நல்ல முயற்சி. (ஸ்டால் எண் 700)

என்னுடைய புத்தகங்களில் சென்ற வருட வெளியீடான வெளிச்சத்தின் நிறம் கருப்பு – இந்த வருடமும் நல்ல வேகத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இன்று அதை வாங்கிய ஒரு தம்பதி என்னிடம் பேசினார்கள். ‘உங்க புக்ல கிளியோபாட்ராதான் முதல்ல படிச்சோம். கீழ வைக்கவே முடியாம படிச்சு முடிச்சுட்டுதான் எழுந்தோம். வரலாறை இவ்வளவு சுவாரசியமா சொல்றது ஆச்சரியமான விஷயம்’ என்று தங்கள் கருத்தைச் சொன்னார்கள். இது போன்ற வாசகர்கள்தான் அடுத்த ஒரு வருடத்துக்கு இயங்கத் தேவையான சக்தியை, உற்சாகத்தைக் கொடுக்கிறார்கள். எதற்கு உழைக்கிறோம், யாருக்காக உழைக்கிறோம் என்பதற்கு ஓர் அர்த்தம் வேண்டுமே.

 

 

சென்னை புத்தகக் கண்காட்சி 11.1.14

கோபிநாத் எழுதிய கிமு-கிபி!

இன்று மதியத்துக்கு மேல் புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தேன். பார்க்கிங்கில் வரிசை கட்டிய பைக்குகளே ‘நல்ல கூட்டம்’ என்று சொன்னது. கடைகளுக்குள் நெரிசல் உள்ள அளவு கூட்டம் இல்லையென்றாலும், இன்று வந்த மக்கள் ‘வாங்கும் கூட்டமாக’ இருந்ததில் மகிழ்ச்சி.

இந்த முறை ஸ்டால்கள் அமைப்பில் சிறு மாற்றம். வரிசைகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு, நீளத்தை அதிகமாக்கி விட்டார்கள். வழக்கம்போல தரை அமைப்பு மட்டும் ஆங்காங்கே ‘மரண பயத்தைக்’ காட்டத் தவறவில்லை.

என் புத்தகங்கள் வழியாக எனக்கு அறிமுகமான வாசக நண்பர்கள் சிலரைச் சந்திப்பதற்காகத்தான் இன்று கண்காட்சிக்குச் சென்றேன். ஆகவே இரண்டோ, மூன்றோ வரிசைகள் மட்டும் நடந்தேன். மேலோட்டமாக மட்டும் புத்தகங்களைப் பார்த்தேன். இன்னும் உள்ளே குதிக்கவில்லை.

கிழக்கில் ஹரன் பிரசன்னாவைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். இந்த வருடம் அவர்கள் திட்டமிட்ட புத்தகங்கள் அனைத்தும் விற்பனைக்கு வந்துவிட்டன. மருதனின், குஜராத் இந்துத்துவம் மோடி – அட்டை கவரும் விதத்தில் இருந்தது. ஆர்எஸ்எஸ் புத்தகத்தின் அட்டை கம்பீரமாக இருந்தது. அரவிந்தன் நீலகண்டனின் மோடி புத்தகத்தை ‘இலவச இணைப்பு’ சைஸில் கண்டதில் ஏமாற்றமே.

கிழக்கில் பிரசன்னாவுடன் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு பெண்மணி வந்து கேட்ட ஒரு கேள்வி தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்கப்பட வேண்டியது – கோபிநாத் எழுதிய கிமு-கிபி புக் இருக்குதா?

சிக்ஸ்த் சென்ஸில் சிறிது நேரம் இருந்தேன். எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதிய ஜூலியஸ் சீஸரை வாசகர்கள் விருப்பத்துடன் வாங்கிச் சென்றார்கள். அங்கே ‘ஹிட்’ ஆகக்கூடிய வேகத்தில் விற்ற இன்னொரு புத்தகம் ‘போதி தர்மர்.’

அரும்பு ஸ்டாலில் ஒரு மேஜையை ‘பழைய புத்தகக் கடை’ ஆக்கியிருந்தார்கள். 50 சதவிகிதம் கழிவு. அங்கே எனக்கு ஒரு புதையல் கிடைத்தது. Uncle Tom’s Cabin-ன் மொழிபெயர்ப்பான கறுப்பு அடிமைகளின் கதை. அலைகள் வெளியீடு. ரூ. 100க்கு வாங்கினேன்.

மற்றபடி இந்த முறையும் லிச்சி ஜூஸ் ஸ்டால் இருக்கிறது. லிச்சி ஜூஸ்தான் பழைய சுவையில் இல்லை. அடுத்த முறை சுவைத்துப் பார்த்துவிட்டு ஒரு முடிவெடுக்க வேண்டும். உள்ளே காபி – டீயும் கிடைக்கிறது. டீயின் விலை பத்து ரூபாய். அதன் சுவை, மணம், திடத்துக்கு எழுபத்தைஞ்சு பைசா கொடுக்கலாம்.

அடுத்து பொங்கலன்று புத்தகக் கண்காட்சியில் இருப்பேன். அன்று முதல் சிக்ஸ்த் சென்ஸ் வெளியிடும் மேம்படுத்தப்பட்ட ‘அகம் புறம் அந்தப்புரம்’ விற்பனைக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சந்திப்போம்.

 

உங்கள் மகளுக்குப் பெயர் வேண்டுமா?

சமீபத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமிருக்கிறதுபோல. மாதம் ஒருவராவது கேட்டு விடுகிறார்கள். ‘எனக்கு மகள் பிறந்திருக்கிறா. ஏதாவது நல்ல தமிழ்ப்பெயர், அதுவும் மாடர்னா இருக்குற மாதிரி, பின்னாடி ‘இந்தப்பெயரை ஏம்ப்பா எனக்கு வைச்ச’ன்னு எம்பொண்ணு சண்டை போடாத மாதிரி இருந்தா சொல்லுங்க.’

‘இந்த எழுத்துல ஆரம்பிக்கணும்னு நியுமராலஜியோட நீங்க பெயர் கேட்டீங்கன்னா எனக்கு சொல்லத் தெரியாது. பொதுவா சில பெயர்கள் அனுப்புறேன். பிடிச்சிருந்தா எடுத்துக்கோங்க’ என்று சொல்லி சில பெயர்களை அனுப்புவேன்.

இறுதியில் அந்த நண்பர்கள் ஹ ஷ கலப்புடன் ஏதாவது ஒரு சமஸ்கிருதப் பெயரைத்தான் வைப்பார்கள், பின் என்னிடம் அசடு வழிவார்கள் என்பதும் வாடிக்கையான விஷயம். இருந்தாலும் நான் பொதுவாக நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் பெயர்ப் பட்டியலை இங்கே பகிர்ந்துகொண்டால் யாருக்காவது உபயோகப்படலாம் அல்லவா. இவை பெண்களுக்கான பெயர்கள் மட்டுமே. ஆண் பெயர்கள் யோசித்து பின் இங்கே பதிவு செய்கிறேன்.

நிறைமதி
வெண்மதி
வெண்நிலா
கவின்நிலா
கயல்
தென்றல்
மலர்
இதயா
தமிழ்நிலா
செந்தமிழ்
இனியா
அமிழ்தினி
கவி
நந்தினி
யாழினி
ஆதிரா
இலக்கியா
தமிழ்
வெண்பா
இளமதி
கண்மணி
தமயந்தி
இசை
தாரகை
தேன்மதி
தமிழிசை
முல்லை

 

(குறிப்பு : எனது மகளுக்கு நான் வைத்திருக்கும் பெயர் கவின்நிலா. என் சகோதரன் ஒருவன் தன் மகளுக்கு வைத்திருக்கும் பெயர் அமிழ்தினி.)

 

 

தங்க மீன்கள் – சிறு விமரிசனம்

தங்கமீன்கள் பார்க்க வேண்டிய படம்தான். எனக்குப் பிடித்திருந்தது.

நிறைகள் :

* செல்லம்மா என்ற குட்டிப்பெண் சாதனா.

* கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகர்களின் தேர்வு. கனகச்சிதம். ராமே நடிக்கிறார் என்று முதன்முதலில் அறிந்தபோது, டிரைலர் பார்த்தபோதெல்லாம் எனக்கு ஏதோ உறுத்தலாகத்தான் இருந்தது. ஆனால், படத்தில் ராம் எங்கும் தெரியவில்லை. அவர் ‘அப்பா’வாக மட்டுமே தெரிந்தார்.

* கற்றது தமிழ் அளவுக்கு மிதமிஞ்சிய சோகம், செயற்கைத்தனங்கள் இதில் இல்லை. சொல்ல வந்த விஷயத்தை உணர்வுபூர்வமாக, மனத்தைத் தொடும்படி சொல்லியிருக்கிறார்.

* அர்பிந்து சாராவின் கேமரா. ராமும் ஷெல்லியும் நள்ளிரவில் தண்டவாளத்தின் ஓரத்தில் அமர்ந்து பேசிவிட்டுக் கிளம்பும்போது கடக்கும் ரயிலின் ஹெட்லைட் வெளிச்சத்தில் படமாக்கப்பட்ட காட்சி சிலிர்க்க வைத்தது. தவிர, படத்தில் ஏகப்பட்ட இரவுக் காட்சிகள் உள்ளன. அனைத்திலுமே ஒளிப்பதிவு அற்புதம்.

* யுவன். பாடல்களிலும், பின்னணி இசையிலும்.

* லொக்கேஷன்.

* வசனம்.

குறைகள் :

* மிக மெதுவாக நகரும் இரண்டாம் பாதி.

* வோடஃபோன் நாய்க்குட்டியை மையமாக வைத்து திரைக்கதையை நகர்த்தியிருப்பது மட்டும் இத்தனை உணர்வுபூர்வமான படத்தில் எனக்கு நாடகத்தனமாக தோன்றியது. இதைவிட அருமையான யோசனை கொண்டு ராமால் திரைக்கதை அமைத்திருக்க முடியும்.

* அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் மட்டுமான படம் என்பது போலவே தொடர்ந்து விளம்பரப்படுத்தியது.

*****
வணிக ரீதியான திரைப்படங்களுக்கு மத்தியில் #தங்கமீன்கள் எத்தனை நாள்கள் தாக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

படம் பார்க்க நினைத்தால், நல்ல தியேட்டரில் கூடிய விரைவில் சென்று பார்த்துவிடுங்கள். ஏனெனில் அடுத்தடுத்த வாரங்களில் டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.

சமீப காலமாக வெளிவரும் பல மலையாளப் படங்களை ஆஹா ஓஹோவெனப் புகழ்கிறார்கள். அவற்றில் சில படங்களை நானும் பார்த்தேன். ஓகே என்ற அளவில்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. அவற்றோடு ஒப்பிடுகையில் தமிழில் வெளிவந்திருக்கும் #தங்கமீன்கள் ஓஹோ ரகம்.

#தங்கமீன்கள் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வந்தால் நன்றாகப் போகும் என்று தோன்றுகிறது. வந்துவிட்டதா? வரப்போகிறதா?